915. கூத்தனைக் காணுங் குறிபல பேசிடிற் கூத்த னெழுத்தின் முதலெழுத் தோதினார் கூத்தனொ டொன்றிய கொள்கைய ராய்நிற்பர் கூத்தனைக் காணுங் குறியது வாமே. (ப. இ.) கூத்தனாகிய சிவபெருமானைக் காணும் நெறிகள் நான்காகப் பேசப்படினும், அவன் திருவைந்தெழுத்தின் முதலெழுத்தாகிய சிவ என்பதனைச் சிறந்து எடுத்து ஓதும் மெய்யடியார் கூத்தப் பெருமானுடன் பிரிவின்றிக் கலந்த புணர்ப்பினராவர். இதுவே திருவடி சேரும் பெருநெறியாகும். சிம் என ஒலிக்கின் ஆறுதலாகிய கும்பக முறை என்ப. (அ. சி.) கூத்தன் எழுத்து - பஞ்சாக்கரம். முதலெழுத்து - சி. (22) 916. அத்திசைக் குள்நின்ற அனலை எழுப்பியே அத்திசைக் குள்நின்ற 1நவ்வெழுத் தோதினால் அத்திசைக் குள்நின்ற அந்த மறையனை அத்திசைக் குள்ளுற வாக்கினன் தானே. (ப. இ.) மூல நிலைக்களத்துத் தோன்றும் அனலை எழுப்பி ஆங்கு ஒலிக்கவேண்டிய ஓங்காரத்தை ஓதினால், ஆங்கு உறைகின்ற மாற்றம் மனங்கழிய நின்ற மறையோனாகிய சிவபெருமான் ஆருயிரை அவ்விடத்து உள்ளுற ஆக்கியருளினவனாவன். திசை - உயிர்ப்புச் செல்லும் இடமாகிய மூலம். (அ. சி.) அவ் வெழுத்து - ஓங்காரம். (23) 917. தானே யளித்திடுந் தையலை நோக்கினால் தானே யளித்திட்டு மேலுற வைத்திடுந் தானே யளித்த மகாரத்தை ஓதிடத் தானே யளித்ததோர் கல்லொளி யாகுமே.2 (ப. இ.) சிவபெருமான் தானாகவே அளித்தருளும் தூமாயை என்னும் குண்டலியினை ஆராய்ந்தால், சிவம் தானாகவே மேல்நிலையில் வைத்திடும். அதுபோல் மகரமாகிய ஒலி(நாதம்) யினை ஓதிட முழு மாணிக்க ஒளியாகிய சிவபெருமான் தோன்றுவன். (அ. சி) தையல் - குண்டலினி. மகாரம் - நாதம். கல்லொளி - மாணிக்கச்சோதி. (24) 918. கல்லொளி யேயென நின்ற வடதிசை கல்லொளி யேயென நின்றனன் இந்திரன்3 கல்லொளி யேயென நின்ற சிகாரத்தைக் கல்லொளி யேயெனக் காட்டிநின் றானே.
(பாடம்) 1. தவ்வெழுத். 2. வித்தையோ. சிவஞானசித்தியார், 1. 3 - 7. 3. விண்ணி. அப்பர், 5. 46 - 5.
|