384
 

(ப. இ.) திருவம்பலமாகிய பரவெளியில் சக்கரக் கீற்றுக்களில்லை. திருவம்பலச் சக்கரத்துள் கீற்றுக்கள் உண்டு. குற்றமற்ற உகரம் தீயின் அடையாளம். நெளிவு சேர்ந்தகோடு ஒளியாகிய விந்துவாகும். நெளிவில்லாத நேர்கோடு ஒலியாகிய நாதமாகும். இவற்றைத் தெளியும்போது 'சிவ' என்னும் மந்திரமாகும்.

(அ. சி.) இரேகை - திருவம்பலச் சக்கரத்தின் கீற்றுகள். சுளியில் - வட்டம்; வளைவு.

(37)

931. அகார வுகார சிகார நடுவாய்
வகாரமோ டாறும் வளியுடன் கூடிச்
சிகார முடனே சிவன்சிந்தை செய்ய
ஒகார முதல்வன் உவந்துநின் றானே.1

(ப. இ.) அகர உகரம் ஓங்காரத்தைக் குறிக்கும். சிகரவகரம் திருவைந்தெழுத்தைக் குறிக்கும். இவை ஓம் நமசிவய எனவாகும். இவற்றை ஆறெழுத்து மந்திரம் என்ப. சிவசிவ என்று இடையறாது உயிர்ப்புடன் எண்ணிக்கொண்டிருக்க ஓங்கார முதற்பொருளாகிய சிவபெருமான் தோன்றியருள்வன்.

(அ. சி.) அகரம்..ஆறும் - பிரணவத்தோடு கூடிய ஐந்தெழுத்து; சடாக்கரம். வளி...செய்ய - சிகரத்துடன் தொடங்கிக் காற்றைப் பிடிக்கும் கணக்கறிந்து சிவன் சிந்தனைசெய்ய.

(38)

932. அற்ற விடத்தே அகாரம தாவது
உற்ற விடத்தே யுறுபொருள் கண்டிடச்
செற்றம் அறுத்த செழுஞ்சுடர் மெய்ப்பொருள்
குற்றம் அறுத்தபொன் போலுங் குளிகையே.2

(ப. இ.) துயிலற்ற இடமாகிய புருவநடுவின்கண் வெளிப்பட்டுத் தோன்றுவது அகரமாகும். அந்த அகரம் நேர்ந்த இடத்து முழுமுதற் சிவத்தைக் கண்டிடச் செய்யும் ஆருயிர்களின் மாசகற்றிய விழுச்சுடர் மெய்ப் பொருளாகிய சிவன் செம்பின் குற்றமாகிய களிம்பகற்றிப் பசும் பொன்னாக்கும் குளிகையை ஒப்பன். போலும்: ஒப்பில்போலி.

(அ. சி.) அற்றவிடம் - புருவத் திடைவெளி.

(39)

933. அவ்வென்ற போதினில் உவ்வெழுத் தாலித்தால்
உவ்வென்ற முத்தி யுருகிக் கலந்திடும்
மவ்வென்றென் னுள்ளே வழிப்பட்ட நந்தியை
எவ்வணஞ் சொல்லுகேன் எந்தை இயற்கையே.3

(ப. இ.) அகரத்துடனே உகரத்தையும் ஒலித்தால் அடியார் நடுவுள்ளிருக்குங் குறிப்பினை உணர்த்துவதாகிய உவ்வென்ற வீடுபேறு


1. போற்றியோ. 8. காருணியத்திரங்கல், 62.

2. செம்பிரத. சிவஞானசித்தியார், 11. 2 - 3.

3. எங்ங. திருவுந்தியார், 4.