1496. கண்டுகொண் டோமிரண் டுந்தொடர்ந் தாங்கொளி பண்டுபண் டோயும் பரமன் பரஞ்சுடர் வண்டுகொண் டாடு மலர்வார் சடையண்ணல் நின்றுகண் டார்க்கிருள் நீக்கிநின் றானே. (ப. இ.) ஞாயிறும் திங்களும் ஆகிய ஒளியிரண்டும் பழைமையாக ஒன்றை ஒன்று தொடர்ந்து வரினும் அவை இளைப்புறும். ஆனால், பரமனாகிய பரஞ்சுடர் என்றும் ஒன்றுபோலிருப்பன். வண்டு மொய்க்கும் கொன்றைமலர்மாலை யணிந்து நீண்ட திருச்சடையினையுடைய சிவபெருமான் திருவடியிணையினை நன்னெறி நால்வகையுள் மேலாம் அறிவு வகையில் நின்று கண்டோர்க்கு அவன் எழுந்தருளி இருள்நீக்கி ஆண்டருள்வன். நால்வகை: சீலம், நோன்பு, செறிவு, அறிவு. (அ. சி.) இரண்டு - சூரியன்; சந்திரன் ஓயும் - தளர்வுறும். (5)
தீவிரம் (முதிர்வு) 1497. அண்ணிக்கும் பெண்பிள்ளை அப்பனார் தோட்டத்தில் எண்ணிக்கும் ஏழேழ் பிறவி யுணர்விக்கும் உண்ணிற்ப தெல்லாம் ஒழிய முதல்வனைக் கண்ணுற்று நின்ற கனியது1 வாகுமே. (ப. இ.) அப்பனார் உடைமையாகிய தோட்டம் ஒன்றுள்ளது. அப்பனார் - சிவனார். அத் தோட்டம் ஆருயிர்களின் உடம்பாகும். அதன் கண் பொருந்தியிருக்கின்ற பெண்பிள்ளை திருவருளாற்றலாவள். அளவில்லாத எழுவகையாகத் தோன்றும் பிறப்புயிர்க்கு அத் திருவருள் உணர்வினை விளக்கும் உடம்பகத்துள்ள கருவிக் கூட்டங்களும் கருமக் கூட்டங்களும் ஆகிய அனைத்தையும் அத் திருவருள் அகற்றியருள்வள். அகற்றவே முழுமுதலாகிய விழுமிய சிவக்கனி கண்ணுறப் பொருந்தி நிற்கும். எண்ணிகும் என்பது எண்ணிக்கும் என எதுகை நோக்கித் திரிந்தது. எண்ணிகும் எண்ணைக் கடக்கும்; அளவிறக்கும். (அ. சி.) அண்ணிக்கும் - பொருந்தும். பெண்பிள்ளை - திருவருட் சத்தி. அப்பனார் தோட்டம் - சரீரம். எண்ணிக்கும் அளவுகடந்த. உண்ணிற்பது எல்லாம் - நெஞ்சத்துள் நிற்கும் வினைப்பயன்கள் எல்லாம். (1) 1498. பிறப்பை யறுக்கும் பெருந்தவம் நல்கும் மறப்பை யறுக்கும் வழிபட வைக்குங் குறப்பெண் குவிமுலை கோமள வல்லி சிறப்பொடு பூசனை செய்யநின் றார்க்கே.2
1. உழப்பின். 11. பட்டினத். திருவிடை. 10. 2. சிறப்பொடு. திருக்குறள். 18. " பிறப்போ. அப்பர். 6. 30. 5. " குறவிதோள். " 5. 60 - 3. " வேடனாய். " 6. 83 - 5.
|