எய்துவர். மேலும் அந்த ஏறுவினை நீக்கினமை போன்று, அருவினையாகிய எஞ்சுவினையுடன் போழ்வினையாகிய ஏன்றவினையும் அருளால் தாக்காது நீக்குவர். அவர்கள் வாழும் இடனே சிவவுலகாகும். (அ. சி.) தாழ்விலர் - அன்புடன் பூசை செய்வதில் தாழ்வு இல்லாதவர். ஆழ்வினை - ஆகாமியம். அருவினை - சஞ்சிதம். போழ்வினை - பிராப்தம். (10)
14. அடியார் பெருமை 1831. திகைக்குரி யானொரு தேவனை நாடும் வகைக்குரி யானொரு வாதி யிருக்கிற் பகைக்குரி யாரில்லை பார்மழை பெய்யும் அகக்குறை கேடில்லை யவ்வுல குக்கே. (ப. இ.) பத்துப் புலத்துக்கும் ஒத்து ஒருவனாய் நிற்கும் முழுமுதற் சிவனை, அவனருளால் இடையறாது எண்ணும் மெய்யடியார் வேந்தருள்ளிட்டுச் சிவனுக்கு மாறா நிற்போர் எவரையும் மதியார். ஆளுடைய பிள்ளையார் போன்று எவரையும் வழக்கிட்டு வெல்லவும் வல்லர். அவ்வுண்மையாளர் வாழும் நாட்டில் பகைமையாளராம் தீயோர் இரார். அவர் இலராகவே பருவ மழை பொய்யாது; பொய்யாதாகவே விளைவுங் குன்றாது. குன்றாதாகவே கூலம்செழிக்கும்; பஞ்சமும் இல்லையாகும். (அ. சி.) அகக்குறை - தானிய விலைக் குறைவு. (1) 1832. அவ்வுல கத்தே பிறந்தவ் வுடலொடும் அவ்வுல கத்தே அருந்தவ நாடுவர் அவ்வுல கத்தே அரனடி கூடுவர் அவ்வுல கத்தே அருள்பெறு 1வாரே. (ப. இ.) மெய்யடியார்கள் சிவவுலகத்தே தோன்றுவர். அச் சிவவுலகத்துக்குரிய தூயவுடலுடன் இருப்பர். அவ் வுலகத்தின்கண் சிவனை வழிபடும் அருந்தவம் ஆற்றுவர். அச் சிவவுலகத்தே நின்று இறையருள் நேர்படின் சிவன் திருவடியினைக் கூடுவர். அச் சிவவுலகத்திலேயே திருவருள் இன்பத்தினை எய்துவர். அவ்வுலகம் - சிவவுலகம். (அ. சி.) அவ்வுலகத்தே - அவரவர் பிறந்த உலகத்தே. (2) 1833. கொண்ட குறியுங் குலவரை யுச்சியும் அண்டரும் அண்டத் தமரரும் ஆதியும் எண்டிசை யோரும்வந் தென்கைத் தலத்தினுள் உண்டெனில் நாமினி உய்ந்தொழிந் தோமே. (ப. இ.) ஆருயிர்கள் வினைக்கீடாக ஏற்கும் பல்வேறு வகையான பிறப்பு வேறுபாட்டு உண்மைகளும், உலகிடைக் காணப்படும் உயர்ந்த
1. தானமியா. சிவஞானசித்தியார், 8. 2 - 15.
|