8. திருக்கூத்துத் தரிசனம் 2674. எங்குந் திருமேனி எங்குஞ் சிவசத்தி எங்குஞ் சிதம்பரம் எங்குந் திருநட்டம் எங்குஞ் சிவமா யிருத்தலால் எங்கெங்குந் தங்குஞ் சிவனருட் டன்விளை 1யாட்டதே. (ப. இ.) சிவபெருமானுக்குத் திருமேனி சிவசத்தியே யாகும். அச் சிவனின் அருளாற்றல் எங்கும் நீக்கமற நிறைந்துள்ளது. அச் சிவபெருமான் தான் செய்யும் திருவருட்டொழில்களனைத்தும் சிவசத்தியின் வாயிலாகவே செய்தருள்கின்றனன். அச் சிவபெருமானும் திருவருளும் நுண்ணறிவு அம்பலமாம் திருச்சிற்றம்பலத்தின்கண் விளங்கியருள்கின்றனர். அதனால் எங்கும் சிதம்பரம் என்றனர். அவன் செய்தருளும் திருக்கூத்தும் எங்கும் நிறைந்தே. எங்கும் சிவமாகவே இருத்தலால் எல்லாவுயிர்களும் எல்லா வுலகங்களும் எல்லா உலகியற் பொருள்களும் சிவனிறைவில் சார்ந்து நிற்கின்றன. அதனால் அனைத்தும் சிவவண்ணமேயாம். அவ்வாற்றால் எங்கும் தங்கும் சிவனருள் திருவிளையாட்டே எல்லாமாகும். (அ. சி.) இம் மந்திரம் உலகமெல்லாம் சிவத்தின் திருக்கூத்தாம் என்பதை விளக்கிற்று. (1) 2675. சிற்பரஞ் சோதி சிவனாந்தக் கூத்தனைச் சொற்பத மாம்அந்தச் சுந்தரக் கூத்தனைப் பொற்பதிக் கூத்தனைப் பொற்றில்லைக் கூத்தனை அற்புதக் கூத்தனை யாரறி வாரன்றே. (ப. இ.) விழுமிய முழுமுதற் சிவபெருமான் ஆற்றியருளும் திருத்தொழில்கள் ஐந்து. அதுபோல் திருவருட்டிருக் கூத்தும் ஐந்தாகும். அவை முறையே சிவானந்தக்கூத்து, சுந்தரக்கூத்து, பொற்பதிக் கூத்து, பொற்றில்லைக் கூத்து, அற்புதக்கூத்து என்பனவாகும். அச் சிவபெருமானும் அவ்வக் கூத்தின் அடையால் திருப் பெயர் பெறுவன். அது 'சிவானந்தக் கூத்தன்' என்பது போன்றாகும். இவ் வைந்தும் முறையே அறிவு, ஆற்றல், அன்பு, ஆற்றற் கூடுதல், அறிவுக் கூடுதல் என்பனவற்றால் நிகழும் நிகழ்ச்சிகளாகும். இவற்றை வரும் வெண்பாவால் நினைவு கூர்க: அறிவாற்றல் அன்போ டறிவாற்றல் தம்மில் நெறியாற்றல் தான்மிகல் நேரும் - அறிவுமிகல் இவ்வைந்தா லாம்கூத் தெழிற்பெயரும் எம்மாற்குச் செவ்வைசிவ இன்பக்கூத் தன். (அ. சி.) சொற்பதம் - சொல்லும்படியான பதங்கள். இம் மந்திரம் (1) சிவானந்தக் கூத்து, (2) சுந்தரக் கூத்து, (3) பொற்பதிக் கூத்து.
1. எங்குமுள. சிவஞானபோதம், 2. 4 - 1. " உலகெலா. சிவஞான சித்தியார், 2.
|