41. சினஞ்செய்த நஞ்சுண்ட தேவர் பிரானைப் புனஞ்செய்த நெஞ்சிடை போற்றவல் லார்க்குற் பனஞ்செய்த வாள்நுதல் பாகனும் அங்கே இனஞ்செய்த மான்போல் இணங்கிநின் றானே. (ப. இ.) சிவனை மறந்து நெடுநாள் வாழவேண்டுமென்னும் கெடு நினைவால் மாலுற்று மாலைத் தலைமையாகக் கொண்டு பாலுற்ற பிறவிக் கடலைக் கடைந்தனர் தேவர். அப்பொழுது சிவனை மறந்த பெரும் பிழை, பொருவருஞ் சினத்துப் பெருநஞ்சாக வெளிப்பட்டது. அதன் வெப்பம் பொறுக்காது தேவர்கள் மாலுள்ளிட்டாரனைவர்களும் ஓட்டம் எடுத்தனர். சிவன்பால் வந்து ஓலிட்டனர். சிவனும் பிழை பொறுக்கும் பெரியோனாதலின் பிழை பொறுத்து அந் நஞ்சினை உண்டு கண்டத்தடக்கினன். தேவர்கட்கு அமிழ்து ஈந்து காத்தனன். அத்தகைய முதல்வனைத் திருத்தப்பட்ட மனத்தின்கண் தொழுதற்கு வல்ல தொண்டர்க்கு, உலகுயிர் எல்லாம் படைத்து வளர்த்தருள் கன்னியாகிய அம்மையை ஒருபக்கத்தேயுடைய சிவபெருமான் அப்பொழுதே தன் இனத்தை நாடும் மான்போன்று அவர்களுடன் இணங்கி நின்றருளினன். (அ. சி.) புனம் செய்த - திருத்தப்பட்ட உற்பனம் செய்த வாணுதல் பாகன் - அகிலம் படைத்த ஆதிபகவன். இனம் செய்த மான்போல் - இனத்தோடு கூடிய பார்வை மானைப்போல. (41) 42. போயரன் தன்னைப் புகழ்வார் பெறுவது நாயக னான்முடி1 செய்தது வேநல்கு மாயகஞ் சூழ்ந்து வரவல்ல ராகிலும் வேயன தோளிக்கு வேந்2 தொன்றுந் தானே. (ப. இ.) பற்றற்றான் பற்றினைப் பற்றிப் பற்றுவிட்டுப்போய்ச் சிவபெருமானை மெய்யாகப் புகழ்கின்றவர்கள் பெறுவது நாயகனாகிய சிவபெருமானால் 'உரையிறந்த சுகமதுவே முடியாகும்' என்பதற்கிணங்க, எங்கும் இயல்பாகவே சிவமாய்க் காட்டுவித்துப் பேரின்பம் நல்கும் அவ்வருளினையேயாம். மாயாகாரியமாகிய உலகனைத்தும் சூழ்ந்துவர வல்லராகிலும், மூங்கில் போலுந் திருத்தோளையுடைய உமையம்மையார்க்கு மணாளனாகி, ஆருயிர்கட்குப் போகமீன்றருள் புண்ணியப் புனித வேந்தனாம் சிவபிரான் உடன்நில்லாது ஒழியின் பயனில்லை. எனவே அவன் உடனாய் நிற்பதே பெரும்பேறென்க. (42) 43. அரனடி சொல்லி அரற்றி அழுது பரனடி நாடியே பாவிப்ப நாளும் உரனடி செய்தங் கொதுங்கவல் லார்க்கு நிரனடி செய்து நிறைந்துநின் றானே.
1. பரையுயிரில். உண்மைநெறிவிளக்கம், 4. 2. சாந்தம். சம்பந்தர், 2. 120 - 1. " கல்லிய. சம்பந்தர், 3. 106 - 7. " மேகமீன்ற. சீவகசிந்தாமணி, நாமகள், 333.
|