1410. விண்ணினைச் சென்றணு காவியன் மேகங்கள் கண்ணினைச் சென்றணு காப்பல காட்சிகள் எண்ணினைச் சென்றணு காம லெணப்படும் அண்ணலைச் சென்றணு காபசு பாசமே.1 (ப. இ.) வானத்தை இடமாகக்கொண்டு பொழிகின்ற பெரிய மேகங்களும் அவ் வானத்தைப் போய் ஒட்டாது. கண்ணினாற் காணப்படும் பல காட்சிப்பொருள்களும் கண்ணினைச்சென்று பொருந்தா. அவைபோல நாடுதலாகிய பாவனைக்கு அப்பால்பட்டதென்னும் சிவபெருமானாகிய அண்ணலை யான் என்னும் சிற்றறிவும் எனதென்னும் சுட்டறிவும் ஆகிய பசுபாசங்கள் சென்றணுகா (159) என்க. (அ. சி.) வியன் - பரந்த. (9) 1411. ஒன்றும் இரண்டும் இலதுமாய் ஒன்றாக நின்று சமய நிராகார நீங்கியே நின்று பராபரை நேயத்தைப் பாதத்தாற் சென்று சிவமாதல் சித்தாந்த சித்தியே.2 (ப. இ.) 'பொன்னும் பணியும் போல்' பொருள் ஒன்றே என்னும் தன்மையும், 'இருளும் ஒளியும் போல்' வேறு என்னும் தன்மையும் இல்லாமல் 'உடலுயிர் கண் அருக்கன் அறிவொளி போல்' வேறன்மையாகிய புணர்ப்பாய் நின்று, திருவருளால் அன்பு செய்யப்படும் சிவனைச் சத்தி நிபாதமாகிய திருவருள் வீழ்ச்சியால் சென்று சிவமாம் பெருவாழ்வைப் பெற்றுப் பேரின்பம் உறுதல் சித்தாந்தப் பெரும்பேறாகும். இவ்வுண்மை வரும் சிவப்பிரகாசச் செந்தமிழாகமத் திருப்பாட்டானுணரலாம்: "ஒன்றிரண்டாகி யொன்றின் ஒருமையாம் இருமையாகி ஒன்றிலொன் றழியும் ஒன்றா தென்னினொன் றாகாதீயின் ஒன்றிரும் புறழி னின்றாம் உயிரினைந் தொழிலும் வேண்டும் ஒன்றிநின்றுணரும் உண்மைக் குவமை யாணவத்தொ டொன்றே." - 10. 8. மேலும் 'கட்டுங்கால் நார்முன்னாம் கண்ணிக்கண் பூமுன்னாம், ஒட்டிலிறை முன்னுயிர்பின் ஓது' என்னும் ஒப்புங் காண்க. (அ. சி.) ஒன்று - ஏகான்மவதாம். இரண்டு - துவிதம். ஒன்றாக நின்று - சுத்த அத்துவிதமாய். சமய நிராகாரம் - மதநிந்தை. நேயத்தை - சிவத்தை. (10)
1. பாசஞா. சிவஞானசித்தியார், 9. " எவ்வுருவும். சிவஞானபோதம், 8. 4. 2. 2. புறச்சமயத். சிவப்பிரகாசம், 7.
|