489
 

(ப. இ.) நீராக விரிந்த சக்கரத்தின்மேல் அனலாய் விரிந்திடும் அனலின்மேல் காற்றாய் விரிந்திடும். காற்றின்மேல் ஆகாசமாகிய வெளியாய் விரிந்திடும்.

(7)

1238. ஆகாச அக்கர மாவது சொல்லிடில்
ஆகாச அக்கரத் துள்ளே எழுத்தவை
ஆகாச அவ்வெழுத் தாகிச் சிவானந்தம்
ஆகாச அக்கர மாவ தறிமினே.1

(ப. இ.) வெளியின் அடையாளமாகிய எழுத்தைக் கூறுமிடத்து ஆகாச அக்கரத்துள்ளே நிறைகின்ற நாதவிந்துக்களாகிய வித்தெழுத்துக்களுமாகி ஆகாச எழுத்தே சிவப்பேரின்பம் ஆவதறிக. மேல் 1233 முதல் இதுகாறுங் கூறிய திருப்பாட்டுக்களால் கூறிய ஐம்பூதங்களுக்குரிய எழுத்துக்கள் முறையே 'ல வ ர ய அ' என்ப. ('பொன்பார்' உண்மை விளக்கம். 6)

(8)

1239. அறிந்திடுஞ் சக்கரம் ஐயைந்து விந்து
அநிந்திடுஞ் சக்கர நாத முதலா
அறிந்திடும் அவ்வெழுத் தப்பதி யோர்க்கும்
அறிந்திடும் அப்பக லோனிலை யாமே.

(ப. இ.) அறியப்படும் சக்கரம் ஐந்தும் ஐந்தும் கூடிய பத்தும் ஆகும். அவை முறையே மூலாதாரமுதல் ஆதாரங்கள் ஆறு. ஞாயிறு திங்கள் தீ மண்டலம் மூன்று. அதீதமாகிய அப்பாலொன்று. விந்துவும் நாதமும் சக்கரமுதலாம். அந்த அந்தச் சக்கரத்துக்குரிய முதன்மையோர் உளர். இம் முதன்மையோர்க்குத் தெய்வம் பகலவனாகிய சிவபெருமான். அவனே அனைத்திற்கும் நிலைக்களமாவன்.

(அ. சி.) ஐயஞ்சு - ஐந்து ஐந்து - 10. அப்பதியோர் - அந்தந்தச் சக்கர அதிபர்கள். பகலோன் - சிவசூரியன்.

(9)

1240. அம்முதல் ஆறுமவ் வாதி எழுத்தாகும்
அம்முதல் ஆறுமவ் வம்மை எழுத்தாகும்
2இம்முதல் நாலும் 3இருநடு வன்னியே
இம்முத லாகும் எழுத்தவை எல்லாம்.4

(ப. இ.) அந்த முதன்மையான ஆதாரங்கள் ஆறும் ஆதி எழுத்துக்குரியனவாகும். அவை அம்மை எழுத்தாகும். அதீத முதலான நான்கும், இருநடு என்ப. இருநடு என்பது இரண்டுக்கும் நடு என்பதாகும். எனவே, மூலம் கொப்பூழ் மேல்வயிறு என்னும் மூன்றனுள் நடுவாகவுள்ள கொப்பூழ் என்க. இது அனலுக்கிடமாகும். இக் கொப்பூழிலிருந்து எல்லா எழுத்துக்களும் தோன்றும்.


1. பொன்பார். உண்மை விளக்கம், 6.

(பாடம்) 2. அம்முதல்.

" 3. இகுந்திடு.

4. சூக்கும. சிவஞானசித்தியார், 1. 1 - 23.