1798. மறப்புற்று விவ்வழி மன்னிநின் றாலுஞ் சிறப்பொடு பூநீர் திருந்தமுன் ஏந்தி மறப்பின்றி யுன்னை வழிபடும் வண்ணம் அறப்பெற வேண்டும் அமரர் 1பிரானே. (ப. இ.) உலகியலில் ஈடுபட்டு உன் திருவடி வழிபாட்டினை மறந்து உலகியலிலேயே உறைத்து நின்றாலும், நீ அடியேனை மறவாவண்ணம் காத்தாட்கொள்க. சிவனை மறவாச் சிறந்த வுள்ளத்துடன் மெய்யடியார் பூவும் புனலும் அங்கையில் ஏந்தி ஐந்தெழுத்தோதி வழிபாடு செய்வர். அங்ஙனம் வழிபடுமாறு அடியேனுக்கு முழு அருள்புரிதல் வேண்டும். தேவர்க்கும் மூவர்க்கும் மற்றும் யாவர்க்கும் முதல்வர் சிவபெருமானாவர். (7) 1799. ஆரா தனையும் அமரர் 2குழாங்களுந் தீராக் கடலும் நிலத்தும தாய்நிற்கும் பேரா யிரமும் பிரான்திரு நாமமும் ஆரா வழியெங்கள் ஆதிப் பிரானே. (ப. இ.) அலையும் ஒலியும் நீங்கா நிலையுள்ள கடலடுத்த திருவூர்களிலும், ஏனைய நிலனடுத்த திருவூர்களிலும் விளங்கும் திருக்கோவில் தோறும் அதுவதுவாய்த் திகழ்ந்து நிற்கும் சிவபெருமானை, அமரர் குழாங்களும் வந்து ஆராதனை புரியும். அப்பொழுது வானோர் பேராயிரம் பரவி வழிபடுவர். அவன் திருப்பெயராகிய நானெறி ஐந்தெழுத்தை நவின்று வழிபடுவர். நானெறி ஐந்தெழுத்து வருமாறு: 'நமசிவய,' 'சிவயநம', 'சிவயசிவ', 'சிவசிவ' என்பன. இவை முறையே பருமை, நுண்மை, மீநுண்மை, அருண்மை எனப்பெறும். இவற்றை முறையே தூலம், சூக்குமம், அதிசூக்குமம், காரணம் எனவும் கூறுப. வழிபாட்டாலும் விழுப்பயனாலும் குறைவிலா நிறைவாம் சிவவழிபாடு ஆராவழியாகும். அவற்றை ஏற்று அருள்புரிபவர் அம்மை அப்பர். இந் நான்மையினையும் வருமாற்றான் நினைவுகூர்க: 'பருமை நுண்மை மீ நுண்மை பண்பார் அருண்மை, வருநான்மை ஐந்தெழுத்தாம் வாழ்த்து ' (அ. சி.) தீரா - அலையும் ஓதையும் ஒழியாத. பிரான் திருநாமம் - நமசிவய. ஆராவழி - துதித்து வணங்கும் இடத்து. (8) 1800. ஆனைந்தும் ஆட்டி அமரர் கணந்தொழத் தானந்த மில்லாத் தலைவன் அருளது தேனுந்து மாமலர் உள்ளே தெளிந்ததோர் பாரைங் குணமும் படைத்துநின் றானே.
1. இறவாத. 12. காரைக்காலம்மையார், 60. " மறக்குமா. சம்பந்தர், 1. 116 - 6. " துறக்கப். அப்பர், 4. 114 - 8. " முன்னமே. " 5. 57 - 1. " முன்னே. " 4. 113 - 3. 2. ஆரார் 9. திருப்பல்லாண்டு, 12. " பாதந். அப்பர், 6. 35 - 2. " பாரார் " " 22 - 1.
|