பகலவன் - சூரியன். அவன் பிற வொளிகளால் நீங்காத ஆணவ வல்லிருளை அறவே நீக்கியருள்வன். நீக்கி அவன் அடியேனுடைய உள்ளத்தின்கண் ஒளிபவள வண்ணத்தனாய் நிறைந்து நின்றருள்கின்றனன். (அ. சி.) அளி - முதிர்ந்த. பவளச் செம்பொன் - பவளத்தில் சிவந்த பொன்பதித்தாலொத்த நிறத்தையுடைய, களிபவளத்தினன் - ஆன்மாக்களுக்கு மகிழ்ச்சியை அருளுகின்ற சூரியனைப்போல. (15) 2647. ஈசன்நின் றானிமை யோர்கள்நின் றார்நின்ற தேசமொன் றின்றித் திகைத்திழைக் கின்றனர் பாசமொன் றாகப் பழவினைப் பற்றற வாசமொன் றாமலர் போன்றது 1தானன்றே. (ப. இ.) ஈசனாகிய சிவபெருமான் யாண்டும் நீக்கமற நிறைந்து நின்றருளினன். கண்ணிமையாக் காவலராகிய இமையோர்களும் நின்றனர். ஓரிடத்து நீங்காது இருவரும் நிற்பினும் இமையவர்கள் அகம் அகலாமையின் திருவடி காணாது திகைத்து நிற்கின்றனர். பாசமாகிய இருவினை யொப்பு வாய்ந்த பருவம் வந்து எய்தவும் எஞ்சுவினைப் பற்று அஞ்சியகலும். அகலவே ஏறுவினையும் இல்லின்மையால் துச்சில் நச்சிச் செல்லும். ஏன்றவினையும் அவ் வுயிரின் உள்ளத்துப் புகும் வழியின்மையால் குடை நிழல் புகாநடை வெயில்போன்று உடைபட்டழியும். அழியவே அவ் வுயிரும் ஆரருட் சிவபெருமானும் மலர் மணம் போன்று நிலவுவர். அவ் வுயிர் மீளா அடிமையாய் நாளும் பேரின்பப் பெருவாழ்வுற்று இன்புறும். அகம் அகலாமை - செருக்கு நீங்காமை; உள்ளம் அன்பால் விரியாமை. இல்: உரியகுடி. துச்சில்: ஒட்டுக்குடி. (அ. சி.) பாசம் ஒன்றாக - இருவினை ஒப்பாக. பழவினை - முன்னீட்டிய வினைகள். வாசம் ஒன்றாம் மலர்-பூவின் மணம்போல் சிவசீவ ஐக்கியம். (16) 2648. தானே யிருக்கும் அவற்றில் தலைவனுந் தானே யிருக்கும் அவனென நண்ணிடும் வானா யிருக்குமிம் மாயிரு ஞாலத்துப் பானா யிருக்கப் பரவலு 2மாகுமே. (ப. இ.) செந்தமிழின்கண் இருக்கு என்று ஓதப்படுவது திரு இருக்கு ஆகும். ஆளுடைய பிள்ளையார் பல திரு இருக்குகளைக் காதலால் ஓதியருளியுள்ளார் தானே யிருக்கும் என்பதற்கு அத்தகைய செந்தமிழ்த் திருமறை இருக்காக இருப்பவனும் சிவனே. அவ் விருக்கின் முதல்வனும் தானே. அவ் விருக்காகிய மறைவழிச் செல்வார் அவனையே நண்ணுவர். அச் சிவபெருமான் தூய அறிவுப் பேரொளிப் பெருவெளியாகத் திகழ்பவனும் ஆவன். விரிந்த பெரிய நிலவுலகத்துப் பரனாக
1. அருவுருவம். சிவஞானபோதம், 7. 3 - 1. " உற்ற. 8. அதிசயப்பத்து, 9. 2. நின்று. சம்பந்தர், 1. 63 - 1.
|