699. தானே எழுந்தஅத் தத்துவ நாயகி ஊனே வழிசெய்தெம் உள்ளே யிருந்திடும் வானோர் உலகீன்ற அம்மை மதித்திடத் தேனே பருகிச் சிவாலய மாகுமே.1 (ப. இ.) தானே முழுமுதலாகத் தோன்றிய முதல்வி மெய்யாகிய தத்துவங்களைத் தூண்டித் தொழிற்படுத்தும். ஊனே....யிருந்திடும் - அம் முதல்வி அடியேன் நெஞ்சத்து விளங்க அந் நெஞ்சினை அடியேனைக் கொண்டு தூய்மைசெய்து ஆண்டு விளங்கி வீற்றிருப்பள். வானோர் மதித்திட - விண்ணும் மண்ணும் ஒருங்கீன்ற அம்மை திருவடியின்பத்தைக் கடைந்துதர. மதித்திட என்பது மத்தித்திட என்பதன் இடைக்குறை. மத்தித்தல் - கடைதல். தேனே...மாகுமே - சிந்திப்பவர்க்குச் சிறந்து செந்தேன் முந்திப்பொழியும் முதல்வன் திருவடியின்பம் நிறைந்த சிவன் திருக்கோவிலாகும். (8) 700. திகழும் படியே செறிதரு வாயு அழியும் படியை அறிகில ராரும் அழியும் படியை அறிந்தபின் நந்தி திகழ்கின்ற வாயுவைச் சேர்தலு மாமே. (ப. இ.) பரந்து செல்லும் உயிர்ப்பினை (பிராணவாயு) அடங்கும்படி செய்யுமுறையினை யாரும் அறிகிலர். அறிந்தபின் சிவபெருமான் அவ்வுயிர்ப்பின் மேலதாய்த் திகழ்ந்து விளங்குவன். (9) 701. சோதனை2 தன்னில் துரிசறக் காணலாம் நாதனும் நாயகி தன்னிற் பிரியுநாள் சாதன மாகுங் குருவழிப் பட்டு மாதன மாக மதித்துக்கொள் ளீரே. (ப. இ.) ஆவிகளின் உண்மைநிலையினை ஆண்டவன் அளத்தல் இருளறற் பொருட்டேயாம். சிவபெருமான் அமிழ்தவண்ணன். அவன் மறைப்பாற்றலாகிய ஆதியின்கண் வீழாது குருவாய் வெளிப்படுவன். அக் குருவின் வழிப்பட்டு ஒழுகினால் திருவடிப் பெரும்பேறு எய்துவர். அறிந்து கொள்வீராக. சோதனை - அளத்தல். மாதனம் - திருவடிப்பேறு. (10) 702. ஈராறு கால்கொண் டெழுந்த புரவியைப் பேராமற் கட்டிப் பெரிதுண்ண வல்லிரேல் நீரா யிரமும் நிலமாயி ரத்தாண்டும் பேராது காயம் பிரான்நந்தி ஆணையே.
1. நெஞ்சினைத். அப்பர், 4 : 23 - 9. " காயமே. " " 76 - 4. 2. பொன்னிமையப். 12. திருக்குறிப்புத்தொண்டர், 115.
|