20. அதோமுகதெரிசனம் 503. எம்பெரு மான்இறை வாமுறை யோஎன்று வம்பவிழ் வானோர் அசுரன் வலிசொல்ல அம்பவள மேனி அறுமுகன் போயவர் தம்பகை கொல்லென்ற தற்பரன் தானே.1 (ப. இ.) நறுமணம் கமழும் வாடாக் கற்பகமாலை யணிந்த பீடார்மால் உள்ளிட்ட நால்வேறியற்கை முப்பத்து முக்கோடி தேவர்களும் சிவபெருமானிடம் முறையிட்டனர். 'எம்பெருமானே சூரபன்மன் முதலிய அசுரர் செய்யும் கொடுமை பொறுக்கமுடியலில்லை; எங்களை மாண்டொழியாவண்ணம் ஆண்டருளவேண்டும்' என்று முறையிட்டனர். சிவபெருமான் அறுமுகக் கடவுளைச் சென்று சூரனை அடக்கி விண்ணவரைக் காத்தருளப் பணித்தருளினன். திருவைந்தெழுத்தால் நாளும் நிகழும் திருக்கூத்து ஐந்தொழில் அருட்கூத்து. அவ் வைந்தொழிற்குரிய முகங்கள் ஐந்து. சிறப்பாக நடக்கும் போர் முதலியவை தன் ஆற்றலாகிய சத்தியினால் நிகழத்தப்படுவன. அதன்பொருட்டுக் கொள்ளும் திருமுகம் ஒன்றுஞ்சேரத் திருமுகங்கள் ஆறாகும். ஐம்முக அருளோனும் அறுமுகப் பொருளோனும் ஒன்றே என்பது திகழ் உருவின் எண்ணிக்கையானும் உணரலாம். அவ்விருவர் முகம் விழி மலர்க்கை மூன்றும் தனித்தனி முப்பது, செந்தமிழுக்குரிய இயற்கைச் சீரிய எழுத்தும் முப்பதே. இவ் வுண்மையை விளக்கும் திருப்பாட்டு வருமாறு: "முகம்விழி மலர்க்கை மூன்று முப்பது முன்பு நாம்செய் மகவினைக் கருள வந்த வள்ளலுக் கீண்டுச் சாடப் புகுமிறைக் கவைகள் மூன்றும் முப்பதே பொலிவும் அற்றே திகழுரு வானும் சேயைச் சிவனெனத் தெளிய லாமே." -தணிகைப்புராணம், சீபரிபூரண நாமப்படலம், 183. இதனாலன்றோ 'திருமுருகன்' அறுமுகச்சிவன் என்று அழைக்கப்படுகின்றனன். அவனுக்குரிய ஆறெழுத்து அருமறையும் 'ஓம் சிவயநம' என்று வழங்கப்பெறுகின்றது. வம்பவிழ் - மணநிறைந்த மாலையணிந்த அசுரன் - சூரபன்மன். அவர்தம் பகை - தேவர்பகை. தற்பரன் - தானே முழுமுதல்; சிவபெருமான். பொருளோன் - மகன். 'தம்பொரு ளென்பதம் மக்கள் அவர்பொருள் தந்தம் வினையான் வரும்' திருக். - 63 என்னும் செந்தமிழ்ப் பொதுமறையின்கண் மக்களைப் பொருளென வழங்கியிருப்பதூஉம் காண்க. மேலு ம் இவ்வுண்மை வரும் நம்பி ஆரூரர் திருப்பாட்டானும் உணர்க: 'பொ ரும்பலம துடையசுரன் றாரகனைப் பொருது பொன்றுவித்த பொருளினைமுன் படைத்துகந்த புனிதன் கரும்புவிலின் மலர்வாளிக் காமனுடல் வேவக் கனல்விழித்த கண்ணுதலோன் கருதுமூர் வினவில்
1. சமர. அப்பர், 5. 64 - 10.
|