ஆராய்ந்தால்பரவெளி என்னும் ஆகாயம் ஏதொரு தாங்குதலுமின்றி நின்றது. இவ் வுண்மைகளை அருளால் நானறிந்து அகத்துள் நாடிக் கொண்டேன். (அ. சி.) கால் - பிராணவாயு. அண்டம் - ஆகாயம். சிறகற - ஆதாரம் இன்றி. (3) 994. கொண்டஇக் குண்டத்தின் உள்ளெழு சோதியாய் அண்டங்கள் ஈரேழு மாக்கி அழிக்கலாம் பண்டையுள் வேதம் பரந்த பரப்பெலாம் இன்றுசொல் நூலாய் எடுத்துரைத் தேனே. (ப. இ.) இக் குண்டத்தினுள் அனலோம்பும் அந்தணர், அவ் ஆற்றலால் உள்ளெழும் ஒளியாய்த் திகழ்வர். அத் தன்மையால் பதினான்கென்னும் எண்ணுள் அடங்கிய உலகங்களெல்லாவற்றையும் ஆக்கி நிறுத்தி அழிக்கும் வலிமை உண்டாகும். விரிந்த அண்டங்கள் எங்கணும் விரிந்து நிலவியுள்ள பண்டைச் செந்தமிழ் அறிவுநூல்களின் பொருளெல்லாம் திருவருள் துணையால் இந் நாள் இந்நூலாக எடுத்துரைத்தேன். பரந்த பரப்பெலாம் என்பதனைப் பரப்பெலாம் பரந்த என மாறுக. நூல் - திருமந்திரம். (அ. சி.) அண்டங்கள் ஈரேழு - 14 உலகங்கள். பண்டையுள - முன்னிருந்து இறந்துபோன. வேதம் பரந்த பரப்பு - வேதங்களிற் கண்ட பொருள்களை விளக்கிநின்ற ஆகமங்கள் கூறிய பொருள்களை எல்லாம். இன்றுசொல் நூல் - தமிழ் மூவாயிரம். (4) 995. எடுத்தவக் குண்டத் திடம்பதி னாறிற் பதித்த கலைகளும் பாலித்து நிற்குங் கதித்தனல் உள்ளெழக் கண்டுகொள் வார்க்கே கொதித்தெழும் வல்வினை கூடகி லாவே. (ப. இ.) முறையான் அமைக்கப்பட்ட அனற்குண்டத்துள் பதினாறிதழ்களில் உரிய எழுத்துக்கள் வரையப்படும். கொழுந்துவிட்டெரியும் அச் சுடரினைக் காணும் பேற்றினர்பால், மிக்க கொதிப்புடன் தோன்றும் தீவினைகள் சேரமாட்டா. (அ. சி.) பதினாறு - பதினாறு இதழ். கலைகள் - அக்கரங்கள். (5) 996. கூடமுக் கூடத்தின் உள்ளெழு குண்டத்துள் ஆடிய ஐந்தும் அகம்புறம் பாய்நிற்கும் பாடிய பன்னீ ரிராசியும் அங்கெழ நாடிக்கொள் வார்கட்கு நற்சுடர் தானே. (ப. இ.) முச்சந்திப்புக்களோடு கூடிய முக்கோணத்துள் கூத்தப் பெருமான் ஆற்றியருளும் ஐந்தொழிலும் அகம்புறமாய் நிற்கும். சிறப்பித்துச் சொல்லப்படும் பன்னிரண்டு கலையுள்ள உயிர்ப்பும் அங்குத் தோன்றும். அந் நிலையினை எண்ணிப் பார்ப்பார்க்குச் சிவஒளி தோன்றும்.
|