114. ஆங்கது கேட்ட வேந்த னரியணை யிழிந்து
                                 போந்து
 
  பூங்கொடி வாயி னண்ணக், காவல ரெதிரே
                                 போற்றி
“ஈங்கிதோர் பசுவந் தெய்தி யிறைவ! நின் கொற்ற
                                 வாயிற்
றூங்கிய மணியைக் கோட்டாற் றுளக்கிய“ தென்று
                              சொன்னார்.
29

     (இ-ள்.) ஆங்கது...நண்ண - அவ்வோசை கேட்ட அரசன்
தன் சிங்கா சனத்திலிருந்து இழிந்து போய் வாயிலில் வந்தான்;
அவ்வளவிலே; காவலர்...சொன்னார் - வாயிற்காவலாளர்கள் எதிரே
வந்து அவனை வணங்கி “இறைவனே! இங்கு இது ஓர் பசு வந்து
நினது வெற்றி பொருந்திய வாயிலிலே தூங்கும் மணியை எய்தித்
தனது கொம்பினால் அசைத்தது“ என்று சொன்னார்கள்.

     (வி-ரை.) ஆங்கு - அது - கேட்டவேந்தன் -
செவிபுக்கபோது அந்த மணி ஓசையை அங்குக் கேட்ட அரசன்.
இருந்து - போந்து...நண்ண - இந்நிகழ்ச்சியை நேரிற் கண்டபோதே
அரசிளங்குமரன் தேரினின்றும் இழிந்து வீழ்ந்ததுபோல, அரசன்
கேட்டபோதே ஐயுற்று அரியணையினின்றும் இழிந்து புறம்போந்து
வாயில் நண்ணினான். இது இவன் இயல்பு. பெருங் காவலான் -
மேலே என்பது காண்க.

     “கோச்சோழர் குலத்தரசு கொடுத்தார் போலும்“, “வளவர்
கோன் பாவை“, “கலந்தநீர்க் காவிரிசூழ் சோணாட்டுச் சோழர்
தங்கள் குலம்...“ என்பனவாதி தேவாரத் தமிழ்மறைகள்
இக்குலத்தைச் சிறப்பித்தமையும் காண்க. ஆங்கது ஒரு சொல்;
அதனை.

     இழிந்து - நீதியே செய்தலினான் அரியணையில் உயர்வுடன்
வீற்றிருந்தவன் அந்நிலையினின்றுந் தாழ்ந்து இழிவை அடைந்தனன்
என்பதும் குறிப்பு. இழிதல் - மேலிருந்து கீழே இறங்குதல். 109-ம்
பாட்டு உரையிற் காண்க.

     கொடி வாயில் - கொடி அரசு அடையாளங்களுள் ஒன்று;
தசாங்கத்தொன்று; கொடியுயர்த்துதல், வெற்றி குறிக்கும். கொற்ற
வாயில் என்றமை காண்க; கொடியைத் தாழ்த்தலும், முடக்குதலும்,
கொற்றத்தின் மறுதலையைக் குறிப்பனவாம்.

“கொடிநுடங்கு திருவாயிற் புறத்தணைந்தார்“
                   (திருநா - புரா - 86)
    
என்னும் பாட்டின் குறிப்பும் ஒப்பு நோக்குக.

     எதிரே - அறியும் ஆவல்கொண்டு நண்ணிய அரசரைவிட,
அவருக்கு அறிவிக்கும் ஆவல் மிகவுடையவராய் அவர் கேட்கும்
முன்னரே எதிரே சென்று. ஈங்கு - அரசர்களும் வருதற்கு
அஞ்சுகின்ற இவ்விடத்தில். இது - முன் நிற்கின்ற இது. (முன்னால்
நிற்கும் பசுவைச்சுட்டி) இதோ தேவரீர் முன் நிற்கும் இப்பசு -
அண்மைச் சுட்டு.

     ஓர் பசு
- ஒரு பசு; அஃறிணை என்று இலகுபெறக்
கூறினார்கள் என்க. ஒன்றாகிய - தனித்த - ஒப்பற்ற - பசு என்ற
குறிப்பும் பெறுகின்றோம். இதற்கு முன் எந்தப் பசுவும் இவ்வாறு
செய்யாமையால் இது தனித்தன்மையாயிற்று என்பதாம். ஓர் -
வினைத்தொகையாக்கி, ஓர்ந்து தக்கது செய்யும் பசு - என்றுரைத்தலுமாம்.

     வந்து
- செலுத்துவாரின்றித் தானே வந்து; எய்தி - மணியை
எய்தி எனக்கூட்டுக.

     தூங்கிய மணி
- இதுவரை அடிபடும் காரணம் நிகழாததால்
தூங்கிக்கொண்டிருந்த மணி என்றலுமாம். தொங்கிய மணி என்க.
இப்பொருட்குத் தொங்க. வைக்கப்பட்ட என்றது செயப்படு பொருள் செய்ததுபோலக் கூறப்பட்டது. தூக்கிய எனும் சொல் எதுகைநோக்கித்
தூங்கிய என மாறித் தன்வினையாக வந்தது என்றுங் கூறுவர்.
மேற்பாட்டின் உரையிற் குறித்த அரசுகள் தேவாரத்திலும் “கடை
தூங்கு மணியை“ என்றது காண்க.

     மணியைக் கோட்டால் துளக்கியது
- தனது துயரத்தை
அரசனுக்கு அறிவித்து அதற்குத் தீர்வு தேடிக்கொள்ளும் பொருட்டுச்
“சென்று மணியைக் கோட்டினாற் புடைத்தது“ என்று (112) கூறிய
ஆசிரியர் இங்கு முன்னிகழ்ச்சியையும் அதுபற்றிய பசுவின்
செய்கையையும் அறியாத வாயிற் காவலாளர் வாக்கில் வைத்துக்
கூறினாராதலின் புடைத்து என்னாது துளக்கியது என்றார். புடைத்தல்
- அடித்தல்; துளக்குதல் - அசைத்தல்.

     காவலர் - அரச அரண்மனை வாயிற்காவல் செய்வோர்.
இவர்கள் முன்னிகழ்ச்சியை அறியாராதலாலும், கண்டது கொண்டு
காணாதவற்றை அறியும் ஆற்றல் இல்லாதவராதலாலும், ஓசை கேட்டு
அரசன் நண்ணியபோது, மணி ஓசைக்குத் தாம் கண்டதே காரணமாக்
கொண்டு இவ்வாறு உரைத்துக், கவலை கொள்ளத்தக்க பொருள்
வேறொன்றுமில்லை என்று குறித்தனர். இது கேட்டும், பசுவைக்
கண்டும், மணி ஓசைக்குக் காரணம் பசுத் துளக்கியது ஆயினும், அது
துளக்கியதற்குக் காரணம் யாது? என்றறிய அரசன் மனத்தே கவலை
கொண்டவனாய், அதனை உணர்த்தவல்லார் மதிநூல்வல்ல
அமைச்சரே யாதலின், மேலும் காவலரை நோக்காது, அமைச்சரை
நோக்கினான்.

     மனவுணர்வில்லாத பசு மணியை எப்படி அடிக்கக்கூடும்?
எனின்,
     1. மனிதர் தன் வரவு காணாவண்ணம் கன்றைச் செலுத்தியும், மனிதர் காட்சிப் புலனை மறைத்தும், செய்வித்தது இறைவனது
திரோதான சத்தியாகிய மறைப்புச் சத்தியேயாகும். அதுவே
பசுவையும் இப்படி அடிக்கச் செய்தது.

     2. இறைவனுடைய நீதி என்கிற அறக்கடவுளே இவ்வாறு
பசுவாய் வந்தது - என்ற வரலாறும் காணப்பெறும். “தனிபெருந்
தருமம்“ (22) என்றதுங் காண்க.

     3. புண்ணிய பாவங்களுக்கு ஈடாக ஒரு ஆன்மா பலபல
உடலெடுக்கும். “இயக்கர் கின்னரர்“ என்னும் சுந்தரமூர்த்திகள்
தேவாரத்தாலும், மாபுராணங்களாலும், புலி, வானரம், நாகம், ஈ,
எறும்பு முதலிய அஃறிணைகளும் பூர்வ சென்மத்தில் எஞ்சிநின்ற
கருமங்காரணமாக இழிந்த பிறவியடைந்தாலும், புண்ணியச்
சிறப்பினால் ஈசனை அறிந்து பூசை செய்தன என்று அறிகின்றோம். இவ்வாறு அறிவு விசேடித்த அஃறிணை உயிர்களும் உண்டு என்பது
அறியப்படுகின்றபடியால் அதுபோலவே இப்பசுவும் ஆம்.

     அஃறிணையாய் நில்லாமல் இப்பசு அறிவு விசேடத்தினாற்
சிறந்த உயிரென்று அரசன் முடித்துக் காட்டியதை 125-வது பாட்டிற் காண்க.   29