| 146. 
           | 
          இந்த 
            மாதவர் கூட்டத்தை யெம்பிரான் | 
            | 
         
         
          |   | 
          அந்த 
            மில்புக ழாலால சுந்தரன் 
            சுந்த ரத்திருத் தொண்டத் தொகைத்தமிழ் 
            வந்து பாடிய வண்ண முரைசெய்வாம். | 
           
            11 | 
         
       
       
           (இ-ள்.) 
      வெளிப்படை. (மேலே பொது இலக்கணத்தாலும்  
      சிறப்பிலக்கணத்தாலும் எடுத்துக் கூறப்பெற்ற) இந்த மாதவர்களுடைய  
      திருக்கூட்டத்தை எமது பெருமானாகிய அளவில்லாத புகழையுடைய  
      ஆலால சுந்தரர் இவ்வுலகிலே வந்து சுந்தரத் திருத்தொண்டத்  
      தொகைத் தமிழ் பாடிய வரலாற்றை மேலே சொல்லத்  
      தொடங்குகின்றோம். 
       
           (வி-ரை.) 
      இந்த - இந்தப் பகுதியில் 3 முதல் 10 வரை  
      திருப்பாட்டுக்களிற் கூறப்பெற்ற. மாதவர் 
      - தவஞ் செய்வோரில்  
      தலைமையானவர். 
       
           ஆலாலசுந்தரன் வந்து கூட்டத்தைத் தமிழ்பாடிய வண்ணம் 
       
      என்று கூட்டுக. 
       
           வண்ணம் 
      - வரலாறு, வந்து பாடிய வரலாற்றை இனிச்  
      சொல்வோம் என்று அடுத்துக்கூறும் தடுத்தாட்கொண்ட  
      புராணத்திற்குத் தோற்றுவாய் செய்தவாறு. 
       
           வந்து பாடிய வண்ணம் 
      - வந்த வண்ணமும் - பாடிய  
      வண்ணமும் என்று பிரித்து உரைத்துக்கொள்ளத் தக்கது. முன்னர்த்  
      திருமலைச் சிறப்பிலே 29-வது திருப்பாட்டில், நம்பிமற்றத் திசை,  
      தங்கு தோற்றத்தில் என்றமட்டில் உபமன்ய முனிவர் தம்மைச்  
      சூழவிருந்த சுத்தயோகியர்களுக்குச் சொல்லியருளினார்.  
      ஆலாலசுந்தரர் இப்பூவுலகில் அவதரிக்கக் காரணமாய்க் கயிலையில்  
      நிகழ்ந்த நிகழ்ச்சிகளை மட்டும் அங்கு விரித்துக்கூறினார்.  
      ஆலாலசுந்தரர் உலகில் அவதரித்துப் பாடியருளிய  
      திருத்தொண்டத்தொகையில் துதித்த அடியார்களை அதையே  
      பின்பற்றித் துதிக்கின்றேன் என்று ஆசிரியர் தொடங்கிக்கொண்டனர்.  
      ஆதலின் கயிலையிலிருந்து வந்து அவதரித்த பின்பு  
      திருத்தொண்டத்தொகை பாடுகின்ற வரை இங்குப் பாயிரத்துடன்  
      சேர்த்துச் சொல்லவேண்டியது அவசியமாயிற்று. அதனைத்  
      தடுத்தாட்கொண்ட புராணத்திலே இங்குப் பாயிரப்பகுதியில்  
      வைத்துக் கூறிப் பின் நூல் தொடங்கி ஓதுவதற்குக் காரணம்  
      கூறியவாறு. முன்பாட்டிலே ஈண்டு வாழ்த்துகேன் என்று தமது  
      விரிநூலைத் தொடங்கிக் கொண்ட ஆசிரியர், நூல் சொல்வதற்கு  
      முன்னர்த் தடுத்தாட்கொண்ட புராணத்தை அமைத்ததற்குக் காரணம்  
      இது என்கின்றார். மேலும் ஈண்டு ‘வாழ்த்துகேன்' என்று முன்  
      பாட்டில் தொடங்கிக் கொண்டதையே அனுவதித்துத்  
      தடுத்தாட்கொண்ட புராணத்தின் இறுதியில் எம்பிரான்  
      தமர்கள் திருத்தொண்டேத்தல் உறுகின்றேன் என்று பின்னரும்  
      தோற்றுவாய் செய்து விரிநூல் தொடங்கிக் கூறப்புகுகின்றதும் காண்க. 
       
           ‘வந்து பாடிய வண்ண' மென்றதற்கு மேலே கூறியபடி  
      வண்ணத்தை என்று கொள்ளாது வண்ணத்தின்படி கொண்டு -  
      என்னறிந் தேத்துகேன்? அவர் வந்து பாடிய வண்ணத்தின்படிச்  
      சொல்லுவேன் என்று முன் பாட்டோடு கூட்டி உரை  
      செய்வாருமுண்டு. மேற்காட்டியவாற்றால் அது பொருளன்றென்றுணர்க. 
       
           வந்து - 
      (1) திருக்கயிலையிலிருந்து இதன் பொருட்டு  
      இத்தென்றிசைக்கு வந்து என்க. (2) பண்ணையாரூரில் வருக  
      நம்பால் எனத் தில்லையிற் கூத்தபபெருமான் ஆணையிட்டபடியே  
      ஆரூருக்கு வந்து என்பதுமொன்று. (3) இவர்க்கு (இவ்வடியவர்க்கு)  
      நான் அடியேனாகப் பண்ணுநாள் எந்நாள் என்று மனத்தால்  
      துதித்துத் திருக்கோயிலுக்குட் சென்ற சுந்தரமூர்த்தி சுவாமிகள்  
      அங்கே இறைவர் தந்த எதிர்காட்சியும் திருவருளும் பெற்றவராய்  
      அவர் அருளின்வழி மீண்டும் தேவாசிரியனுக்கு எதிரே வந்து  
      (பாடிய) என்று கொள்ளலும் ஒன்று. 
       
           இவற்றுள் கயிலையிலிருந்து வந்த வரலாறு திருமலைச் 
       
      சிறப்பிலும், தில்லையிலிருந்து வந்ததும் பின்னர்க் கோயிலிலிருந்து  
      வந்ததுமாகிய இரண்டும் பின்னர்த் தடுத்தாட்கொண்ட புராணத்தும்  
      கூறுதலின் இங்கு இஃது அவையிரண்டிற்கும் இடையில் வைத்து  
      வந்து பாடிய என்று கூறியருளினார் ஆகும். 
       
           அந்தமில் புகழ் ஆலால சுந்தரன் - ஆலால 
      சுந்தரர்  
      என்ற பெயரைப்பற்றியும், அவரது புகழின் பெருமையைப் பற்றியும்  
      திருமலைச் சிறப்பு 16, 17, 19, 21, 22 முதலிய திருப்பாட்டுக்களிலும்  
      அவற்றின் உரையிலும் காண்க. இப்பெயர் அவருக்குக் கயிலாயத்தில்  
      வழங்கிய பெயர். இங்கு அவருக்குப் பெரும்பாலும் வழங்கும்பெயர்  
      சுந்தரர் என்பது. ஆலாலசுந்தரராகிக் கயிலையில் இருந்த அவர்  
      இங்குவந்து அவதரித்துச் சுந்தரமூர்த்திகள் என்ற நிலையில் பாடி  
      யருளினார்; ஆதலின் ஆலால சுந்தரன் சுந்தரத் திருத்  
      தொண்டத்தொகை பாடியருளிய என்றார். சுந்தரத்  
      திருத்தொண்டத்தொகை என்பதற்கு அழகிய திருத்தொண்டத்  
      தொகை எனவும் ஆம். இது பின் வரும் தடுத்தாட்கொண்ட புராணப்  
      பகுதியின் உள்ளுறையைச் சுருக்கி எடுத்துக் காட்டியவாறு. 11 
   |  
	 
	 |   
				
				 | 
				 
			 
			 |