152. பெருமைசா லரசர் காதற் பிள்ளையாய்ப் பின்னுந்
                                தங்கள்
 
  வருமுறை மரபின் வைகி வளர்ந்துமங் கலஞ்செய்
                                கோலத்
தருமறை முந்நூல் சாத்தி யளவிறொல் கலைக
                                ளாய்ந்து
திருமலி சிறப்பி னோங்கிச் சீர்மணப் பருவஞ்
                                சேர்ந்தார்.
6

     (இ-ள்.) பெருமை............வளர்ந்து - பெருமை சான்ற அரசரது
அன்புக்குரிய மகனான பின்னரும் தமது சைவ அந்தணர் மரபுக்குரிய
ஒழுக்கத்திலே நின்று வளர்ந்து; மங்கலம்........ஆய்ந்து - அவ்வொழுக்
கத்திற்குரியபடி உரிய வயதளவிலே பூணூல் சாத்தும் சடங்கும்
பள்ளியில் வைக்கும் சடங்கும் செய்யப் பெற்றாராய் அளவற்ற
கலைகளை எல்லாம் ஆராய்ந்து; திருமலி சிறப்பின் ஓங்கி - அந்தக்
கலைஞானங்களாகிய கல்விச் செல்வமும், அன்பினாற் கொண்ட
அரசகுமாரனுக்குரிய பொருட் செல்வமும் கூடி மிகுந்த சிறப்பினால்
உயர்ந்து; சீர்......... சேர்ந்தார் - சீருடைய மணஞ்செய் பருவத்தை
அடைந்தார்.

     (வி-ரை.) பெருமை சால் - பெருமை பொருந்திய - பெருமை
மிகுந்த.

     பிள்ளையாய்ப் பின்னும் - அரசரது காதலுக்குரிய
பிள்ளையாயின பின்னரும். உம்மை சிறப்பும்மை. அரசர்
பிள்ளையாயின பின்னரும் தமது குலத்துக்கு உரிய ஒழுக்கத்தைக்
கைவிடாது கொண்டனர். செல்வம் - பதவி முதலிய, உடம்போடு
போய்விடத்தக்க, உலகப் பெருமைகள் வந்தபோது, உயிரோடு
செல்லும் குல ஒழுக்கத்தை வழுவவிட்டுவிடுவார் அனேகர்.
அதுபோலல்லாமல் - என்று குறிக்கப்பின்னரும் என்று சிறப்பும்மை
தந்து கூறி உலகுக்கு அறிவுறுத்தினார் ஆசிரியர்.

     மங்கலஞ் செய் கோலத்து முந்நூல் சாத்தி - உபநயனமாகிய
சடங்கு முடித்துப் பூணூல் சாத்தக் கொண்டு. இதன் விரிவுகள்
திருஞானசம்பந்த சுவாமிகள் புராணத்திலே,

“தோலொடு நூல் தாங்கினார்..........“ (263)

     “உபநயன முறைமையாகும் இருபிறப்பினிலைமையினைச்
சடங்கு காட்டி ......“ (264) என்று வரும் பாட்டுக்களிற் காண்க.
இங்குக் குறித்த (வித்தியாரம்பம் என்ற) கலை பயிற்றுவித்தல்
ஐந்தாவது வயதிலும், உபநயனம் என்ற பூணூல் சாத்துதல் ஏழாவது
வயதிலும் செய்யப் பெறுவன.

“ஐந்து வருடம் அவர்க்கணைய ...... செவ்வியுணர்வு சிறந்ததால்“               - சண்டீ - புரா - 13

“நிகழும் முறைமை யாண்டேழு நிரம்பும் பருவம்
                              வந்தெய்தப்
புகழும் பெருமை யுபநயனப் பொருவில் சடங்கு முடித்து“
                            - சண்டீ - புரா - 14.

உபநயனம் முடிந்தபின் தாங்குவது பிரமசரியநிலை.

“...............................குழைக் குடுமி யலையக் குலவுமான்
றோலு நூலுஞ் சிறுமார்பிற் றுவன அரைக்கோ
                               வணஞ்சுடர.....“
                                - சண்டீ - 25

என்றதும், அமர்நீதி நாயனார் புராணம், 7, 8, 9, பாட்டுக்களும்,
பிறவும் இந்நிலைக்குரிய திருவேடத்தின் இயல்பை நன்கு விளக்குவன.

     சிகை - திருநீறு - முந்நூல் - மான்றோல் - முஞ்சிப்புல்
திரித்து முடிந்த அரைநாண் - கோவணவுடை - பவித்திரம்
முதலியன. இக்கோலத்திற்குரிய அங்கங்கள். இக் கோலங்களைவிட்டு
இவற்றிற்கு மாறாய் இக்காலத்துச் சிகை கத்திரித்தல் முதலிய
அலங்கோலங்களைத் தாங்கித் திரியும் வேதியர் கோலம் யாவும்
அமங்கலக்கோலம் என்பது மங்கலஞ் செய்கோலம் என்பதனாற்
காண்க. இதனை இந்நாள் மக்கள் உய்த்துணர்ந்து திருந்த
ஒழுகுவார்களாக.

     உபநயனம் என்பது (உப + நயனம் - மேலும் பெறும் கண்.
இயல்பாய் உள்ள இரண்டு கண்களுடன் மேலாகிய ஒரு கண்வருதல்.
இது புருவமத்தியில் தியானத்தால் திறக்கப்படுவது. மேனோக்கிய
நெற்றிக்கண். இது சிவபெருமானுக்கே உரியது. பஞ்ச சிகை - பூணூல்
- மான்றோல் முதலியனவும் அவ்வாறே அவருக்கே உரிய
கோலங்கள். இந்தக்கோலம் செய்தலால் சிவக்கோலமாயிற்று. சிவம் -
மங்கலம் என்ற பொருளும் தருதலால் இதனை மங்கலஞ்
செய்கோலத்து என்றார். இந்நிலைக்குரிய முந்நூலைச் சொல்லவே
மற்றவையெல்லாம் உடன் கொள்ளப்பெறும். (துவம் - ஏவ -
பிராமண:) நீயே சிவ(னே) ஒருவனே பிராமணன் என்பது வேதம்.

     மறை முந்நூல்
- மறைவிதிவழி வேத இதய மந்திரமாகிய
காயத்திரி மந்திர உபதேசத்தோடு தாங்கும் முந்நூல். காயத்திரி
என்பதற்கு அடைந்தோரது வினைமுளையை வறுத்துச்
சென்மமில்லாது செய்வது என்று பொருள் கூறுவர். காயத்திரியினாற்
குறிக்கப்பெறுபவன் சிவபெருமானே என்க. இதனுள் நின்ற - பார்க்க
-பதத்திற்கு அவரே உரியவர் என்பது “உயர்கா
யத்திரிக்குரிப்பொரு ளாதலின்“ என்ற அரதத்த சிவாசாரியார்
ஆணைமொழியினாற் காண்க.

     அளவில் தொல்லைகள் ஆய்ந்து - கரையில்லனவும்
பண்டைநாட் டொடங்கி வருவனவும் ஆகிய கலைகள். இவற்றை
முற்ற ஆய்ந்து விளக்கினவர் நமது நம்பியாரூரரே யாவர் என்பது.
இவர்க்கு நாவலர் என்ற பெயர் வந்ததுங் காண்க. “உறழ்ந்த
கல்வியுடையானு மொருவன் வேண்டுமெனவிருந்து..........நினைத்
தோழமை கொண்டான்.....“ என்று இதனையே எடுத்துக் காட்டினாற்
சிவப்பிரகாச சுவாமிகள்.

     மணப்பருவம்
- தமிழர் இலக்கண அமைவின்படி இது
ஆண்மக்களுக்குப் பதினாறு வயதின் அளவினதாம் - எனவே,
நம்பிகள் சிறுதேர் உருட்டிய மூன்று வயது முதல் மணப்பருவமாகிய
பதினாறு வயது வரை அரசர் அரண்மனையிலே காதற் பிள்ளையாய்
வளர்ந்தசரிதம் இப்பாட்டாற் கூறப்பெற்றது. பிள்ளையாய்ப் பின்னும்
- வைகி - சாத்தி ஆய்ந்து - ஓங்கிச் - சேர்ந்தார் என்று முடிக்க.

     சீர்மணம் - இந்த மணம் அதற்காகச் செய்யப்பெற்ற
சடங்குகளில் நின்றது என்பதும் குறிப்பாம். சீர்மணம் - நம்பிஆரூரர்
இனி மேற்கொள்ளும் திருமணம் இறைவனே வலிய வந்து அடிமை
கொள்வதற்கு ஏதுவாயிருத்தலால் சீர் என்னும் அடைகொடுத்து
ஓதினார் - என்பது இராமநாதச் செட்டியார் உரைக்குறிப்பு. 6