25. அத்தர் தந்த வருட்பாற் கடலுண்டு
 
  சித்த மார்ந்து தெவிட்டி வளர்ந்தவன்;
பத்த ராய முனிவர்பல் லாயிரர்
சுத்த யோகிகள் சூழ விருந்துழி,
15

     (இ-ள்.) அத்தர் ... உண்டு - அத்தர் அருளினாற் கொடுத்த திருப்பாற் கடலைப் பருகி; சித்தம் ... வளர்ந்தவன் - மனம்
நிறைவுபெற்றுத் தேக்கி அதுவே உருவமாய் வளர்ந்தவர்; பத்தர் ...
இருந்து உழி
- பத்தர்களாக உள்ள முனிவர்கள் பல ஆயிரவர்கள்
சுத்தாவத்தையிற் சிவத்தைச் சார்ந்த யோகிகள் என்ற இவர்கள்
தம்மைச் சூழ்ந்து கொண்டிருக்க அமர்ந்திருந்தபோது.

     (வி-ரை.) இப்பாட்டு முதல் 11 பாட்டுக்கள் குளகம். வரும்
பாட்டிலே தோன்றிட என்பதுடன் கூட்டி இருந்துழித் தோன்றிட
எனக் கூட்டி மேலும் முடித்துரைத்துக் கொள்க.

     அத்தர் தந்த அருட்பாற்கடலுண்டு ... வளர்ந்தவன் -
உபமன்னிய முனிவர் குழந்தைப் பருவத்திலே பால்வேண்டியழுக,
இறைவர் திருப்பாற்கடலையே அக்குழந்தைக்கு உண்ணக்
கொடுத்தருளினார் என்பது வரலாறு. இதனைச் சிவரகசியம்,
கோயிற் புராணம் முதலியவற்றிற் காண்க. “பாலுக்குப் பாலகன்
வேண்டியழுதிடப் பாற்கடல் ஈந்த பிரான்” என்பது
திருப்பல்லாண்டு.

     அருட் பாற்கடல - அருளினாலே அத்தர் தந்த பாற்கடல் எனக் கூட்டுக. அத்தர் - தந்தை; இங்கு யாவர்க்கும் தந்தையாகிய
சிவபெருமானைக் குறித்தது.

     முனிவர் - மனனசீலர்; பத்தராய முனிவர் - முனிவர்களாகிய
அத்தன்மையோடு இறைவனிடத்தே பதிந்த பத்தியையும் வாய்ந்தவர்.
முனிவர்களாகியும் பத்தியில் வராத தாருகவனத்து முனிவர்
போன்றோரை வேறு பிரித்தற்பொருட்டுப் பத்தராய என்றார். இது
பிறிதினியைபு நீக்கிய விசேடணம்.  சுத்த யோகிகள - சுத்த
அவத்தையிலே நின்ற சிவயோகிகள்.

     பல்லாயிரர் - எண்ணில்லாதவர்கள். பத்தராயும் முனிவராயும்
எண்ணிக்கையில் பல்லாயிரவராயும் உள்ள யோகிகள் என்று சேர்த்தி
யுரைத்தலுமாம். பல்லாயிரர் - பல்லாயிர முனிவர் - பல்லாயிர
யோகிகள்
என்றுரைத்துக்கொள்க.

     சூழ - தம்மைச் சூழ்ந்திருக்க.

     இருந்துழி - இருந்தபோது என்றுபொருள் கொள்க. இருந்த
உழி என்பது இருந்துழி என்றாயிற்று. உழி என்று காலத்தையும்
இடத்தையும் காட்டும் உருபு.

     சூழ இருத்தலின் இயல்பை - “அம்மலங் கழீஇ
அன்பரொடு மரீஇ
”என்னும் சிவஞானபோதப் பன்னிரண்டாம்
சூத்திரத்துக் காண்க. முத்தராகிய அணைந்தோர் தன்மைகளில்
அன்பருடன் கூடியிருப்பதும் ஒன்றாதலால் இவ்வாறு எடுத்துக்
கூறினார். “ஒருப்படு சிந்தையினார்கள் உடனுறைவின் பயன்
பெற்றார்”என்பது முதலிய பலஇடங்களிலும் பின்னர்
இப்புராணத்திலே ஆசிரியர் அன்பர் கூட்டத்தின் இயல்பையும்
சிறப்பையும் எடுத்துக் காட்டியுள்ளார். ஆங்காங்குக்
கண்டுகொள்க.   15