| 300.  
           | 
           பந்தம் 
            வீடு தரும்பர மன்கழல் 
             | 
            | 
         
         
          |   | 
           சிந்தை 
            யாரவு முன்னுமென் சிந்தையை 
            வந்து மால்செய்து மானென வேவிழித் 
            தெந்தை யாரரு ளெந்நெறிச் சென்றதே.  | 
          154 | 
         
       
           (இ-ள்.) 
        பந்தம்......சிந்தையை - பந்தத்தையும் 
        வீட்டையும்  
        தரும் இறைவனது சீபாதங்களை என்னுள்ளே பொருந்தி நிறையும்படி  
        எண்ணுகின்ற எனது சித்தத்திற்குள்ளே; வந்து.....விழித்து -  
        தானேவந்து புகுந்து மயக்கத்தைச் செய்து மான்போலப் பார்வை  
        செய்து; எந்தையார்.......சென்றது? - எமது இறைவனது அருளுருவாகிய  
        பரவை எங்கே சென்றது, (ஏ - அசை). 
         
             (வி-ரை.) 
        பந்தம் - மறைப்பு. இது அநாதியாய மூலமலத்தின் 
         
        காரியம். இங்குப் பந்தம் தரும் பரமன் - என்றது என்னை எனின்,  
        கையில் ஏந்திய தீயின் சூட்டினை நிகழவொட்டாது தனக்கு மாறாகிய  
        மந்திரம் உச்சரிக்குங்காறும் தடுத்து நிற்கும் குளிகைபோல,  
        அம்முதல்வனது பெருங்கருணை உயிர்களிடத்தில் ஒருங்கே நிகழா  
        வண்ணந் தடுத்து நிற்கும் உயிர்க்குற்றமாகிய அவ்வம் மலசத்தியின்  
        வழியே நின்று அவற்றை நடாத்துவதாகிய அவனது சங்கற்பமே  
        அன்றிப் பிறிதில்லை என்பது பெறப்படும். ஆதலின்  
        வினைநுகர்ச்சிக்கண் அதன்வழி நின்று நடாத்துவதாகிய  
        முதல்வனது சங்கற்பமே இங்குப் பத்தம் - மறைப்பு எனப்படும்.  
        பந்தமுமாய் வீடு மாயினார்க்கு (திருப்பொற் - 20), பந்தமும் 
         
        வீடும் படைப்போன்காண் (திருவண்டம்பகுதி - 52) என்ற  
        திருவாசகங்களும் இக்கருத்தேபற்றின. எனவே பந்தம் தருதலும்  
        பரமன் றொழிலாதலால் காண்க. இதனாலன்றோ, உயிர்களுக்கு  
        அறிவும் தொழிலும் இடையிடையே விளங்கியும் அடங்கியும்  
        படிமுறையிலே மேற்பட்டு நிகழ்வதுமாம். 
         
              வீடு 
        - விடு என்னும் பகுதி முதல் நீண்ட முதனிலைத்  
        தொழிற்பெயர். (விடுதலையைச் செய்வது.) பரமன் வீடு தருதலாவது -  
        உயிர்களை மீட்சியின்றித் தன்னுள்ளே இலயிக்கச் செய்தல். மறைப்பு  
        - அருள் - என்பனவே இங்குப் பந்தம் வீடு எனப்பெற்றன.  
        ஆகமங்களில் முதல்வனுக்குக் கூறிய இலயம், போகம், அதிகாரம்  
        என்ற முத்தொழிலுடன் மறைப்பு - அருள் - என இரண்டும் கூட்டி  
        ஐந்தொழில் என்பர். இவையே, மறைப்புத் திதியிலும், வீடு  
        சங்காரத்திலும் அடங்குதல்பற்றி முத்தொழில் என்று தொகுத்துக்  
        கூறப்படும். மறைப்பினுள் ஏனை மூன்றும் அடங்குதல் பற்றி  
        இவையே பந்தம் வீடு என இரண்டு தொழிலாக வைத்து ஓதப்படும் 
        என, இப்பாட்டினையே உதகரித்து, ஆசிரியர் எமது மாதவச்  
        சிவஞான முனிவர் மாபாடியும் இரண்டாம் சூத்திரத்தில் போக்கு  
        வரவு புரிய என்றதன்கீழ்க் கூறிப்போந்தமை காண்க. விரிவு  
        அங்குக் கண்டுகொள்க. 
         
              கழல் 
        - திருவடி. சிவபிரானது ஞானக்கிரியா சத்திகளே  
        திருவடியாக உபசரித்துக் கூறப்படும். கழல் - வீரத்திற்கறிகுறியாக  
        ஆடவர் அணிவதோர் காலணி. ஆகுபெயராய் அடியை  
        உணர்த்திற்று. 
         
              சிந்தை ஆரவும் உன்னும் என்சிந்தையை வந்து மால்செய்து 
        -  
        எண்ணார எண்ணத்தால் எண்ணியும் எனும் அற்புதத் திருவந்தாதி  
        காண்க. முதற் சிந்தை எண்ணுதலாகிய தொழிலின்மேலும்,  
        இரண்டாவது சிந்தை அதனைச் செய்யும் காணத்தின் மேலும் வந்தன.  
        ஆரவும் - நிறைவெய்த. சிந்தையும் ஆர என உம்மை பிரித்துக்  
        கூட்டுக. சிந்தையை........செய்து - வந்து - சிந்தைக்குள்ளும் வந்து  
        அதனை மயங்கச் செய்து. எனது எண்ணம் முழுதும் கழலின்  
        எண்ணமே நிறைவாய் இருந்தபோதிலும் அதற்குள்ளும் இடம்செய்து  
        புகுந்து, அதனோடு நில்லாமல், மாலும் செய்தது என்க. கழல் நிறைவு  
        உள்ள இடத்தில் வேறொன்றும் வருமாறு இல்லையாதலின் இதுவும்  
        ஆர் அருளே என்பது குறிப்பாம். 
         
              மானெனவே விழித்து 
        - ஒன்றுநோய் நோக்கு என்றபடி  
        இந்நோக்கு மால் செய்தது என்பார் - மால்செய்து விழித்து என்றார்.  
        விழித்து மால்செய்து என்று கூட்டியுரைக்க. மானிளம்பிணையோ  
        என்றும், விற்குவளை என்றும் முன்னர்க் குறித்தமை காண்க. 
         
              சிந்தை யார்வுற........சிந்தையை - வேல்விழித்து 
        - எனவும்  
        பாடங்கள்.      154 
	 |