356. ஞானமே முதலா நான்கு நவையறத் தெரிந்து
                                 மிக்கார்;
 
  தானமுந் தவமும் வல்லார்; தகுதியின் பகுதி
                               சார்ந்தார்;
ஊனமே லொன்று மில்லா; ருலகெலாம் புகழ்ந்து
                                 போற்று
மானமும் பொறைபுந் தாங்கி மனையறம் புரிந்து
                                வாழ்வார்;
7

     (இ-ள்.) ஞானமே......மிக்கார் - ஞானம் முதலாக வைத்து
எண்ணப்பட்ட நான்கினையும் குற்றம் நீங்கத் தெரிந்து அவற்றிலே
மிகுதியும் திறமை பெற்றுள்ளவர்கள்; தானமும்.....வல்லார் -
தானத்திலும் தவத்திலும் சிறந்தவர்கள்; தகுதியின் பகுதி சார்ந்தார் -
எல்லாவற்றிலும் தக்கவற்றையே சார்ந்தவர்கள்; ஊனமேல்
ஒன்றுமில்லார் - ஒருகுறைவும் இல்லாதவர்கள்; உலகெலாம்....
வாழ்வார் - உலகங்களெல்லாம் போற்றும் மானத்தினையும்
பொறுமையினையும் மேற்கொண்டு இல்லறத்தை வழுவாது இயற்றி
வாழ்கின்றவர்கள் (இவர்கள்);

     (வி-ரை.) ஞானமே முதலா நான்கு - ஞானம் - யோகம் -
கிரியை - சரியை என்பன. ஞானத்தை முதலாக வைத்துச் சொன்ன
தென்னையெனின், ஞானமே கனி - பலன் என்பர். அதுவே முடிந்த
பயனாம். ஆயின் இந்தப் பலனைப் பெறுதற்கு முன், கனியை
வேண்டுவான் ஒருவன் கனியே தனது விருப்பில்முதன்மை
பெற்றதாயினும் அதற்கு முன்னதாகக் காயும், மலரும், அரும்பும்
இன்றியமையாது வேண்டப்படுதலின் அவற்றை முன்னர்க்
காப்பவனாவன். அதுபோலவே இதுவுமாதலின் முதலா நான்கும்
என்றார். முதல் - முதன்மையாகக் கொள்ளப்பட்டது.

“விரும்புஞ் சரியைமுதல் மெய்ஞ்ஞான நான்கும்
அரும்புமலர் காய்கனிபோ லன்றோ பராபரமே“

என்றார் தாயுமானார். இக்கருத்துப் பற்றியே திருமூல நாயனார் புராணத்துள்,

     “ஞானமுத னான்குமலர் நற்றிருமந் திரமாலை“ (26)

     “நலஞ்சிறந்த ஞானயோ கக்கிரியா சரியையெலாம்“ (28)

என்று ஆசிரியர் வரம்புபடுத்திக் கூறியருளினார். இவ்வாறறியாது
ஞானமுதல் நான்கு என்றதற்கு ஞானத்தை அந்தமாகவுடைய
நான்கென்று கூறுவாருமுளர். முதல் அந்தமென்று பொருள்படாமை
காண்க. ஞானம் முதல் நான்கும் நான்கு பாதம் நெறி - என்பர்.
இவையே சன்மார்க்கம் - சகமார்க்கம் - புத்திரமார்க்கம் -
தாசமார்க்கம் என்று கூறுவர். இவற்றின் விரிவுகளைத்
திருமந்திரத்துட் காண்க.

     நவையற - ஐயந்திரிபு நீங்க. நவையறும் பொருட்டு என்று
கூறலுமாம். “கற்க கசடற“ என்ற இடத்து விபரீதவையங்களை நீக்கி
மெய்ப்பொருளை நல்லோர் பலருடனும் பலகாலும் பயிறல்
என்றுரைத்தது காண்க.

     தானம - சற்பாத்திரமறிந்து செய்தல். அதாவது
சிவஞானிகளிடத்துச் செய்தல்.

“அகர மாயிர மந்தணர்க் கீயிலென்? - சிகர மாயிரஞ்
                         செய்து முடிக்கிலென்?,
பகரு ஞானி பகலூண் பலத்துக்கு - நிகரிலை யென்பது                                நிச்சயத் தானே“
                          - ஏழாந்தந்திரம் - 157

“திலமத் தனையே சிவஞானிக் கீந்தால் - பலமுத்தி                       சித்திபரபோக முந்தரும்
நிலமத் தனைபொன்னை நின்மூடர்க் கீந்தால்
பலமுமற் றேபர போகமுங் குன்றுமே“

                      - இரண்டாந் தந்திரம் - 165

முதலிய திருமந்திரங்கள் காண்க.

     தவம - சிவபூசை. முன்னர் உரைத்தவை காண்க. தவங்களிற்
சிறந்ததாய்ச் சிவனை நேரே கூட்டுவதால் தவமாவது சிவபூசை என்க.
உற்ற நோய்நோன்றலும் உயிர்க்குறுகண் செய்யாமையுமாம். மிக்கார்
தானம் எனக்கூட்டி (நூல்) வல்லார்கள் உரைத்த பகுதிப்படி தானம்
தவம் சார்ந்தவர் எனக் கூட்டி யுரைத்தனர். மகாலிங்கையர்.

     ஊனம் - குற்றம் - அதனாலாகிய பிறவி. இல்லார் - பிறவி
விதையைத் தானந் தவமாதிகளால் மேல் முளையாது செய்தவர்.
342 பார்க்க.

     மானம் - “மயிர்நீப்பின் வாழாக் கவரிமா வன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின்“ - குறள்.என்றபடி உயிர் கொடுத்தும்
தமது கொள்கையைத் தவறாது காப்பவர்.

     பொறை - “பொறையுடைய பூமிநீ ரானாய் போற்றி“
- ஸ்ரீ கயிலாயம் போற்றித் திருத்தாண்டகம் - 5
  என்றபடி பூமி
பொறையுடைமைக்கு இலக்கியமாவது.

“அகழ்வாரைத் தாங்கு நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்த றலை“ என்றார் நாயனார்.

     மனையறம - இல்லறம். இது, “இல்லற மல்லது நல்லற மன்று“,
“முயல்வாரு ளெல்லாந் தலை“, “புறத்தாற்றிற் போஒய்ப் பெறுவ
தெவன்“, “நோற்பாரி னோன்மை யுடைத்து“, “வானுறையுந்
தெய்வத்துள் வைக்கப்படும்“ என்பனவாதி புகழ்களாலே பெரியோர்
பாராட்டும் பண்புடையதாய், நூல்களில் விதித்தபடி ஒழுகும்
இல்வாழ்க்கையாம். 7