526. நின்ற வேதியர் வெகுண்“டமர் நீதியார்! நிலைமை  
  நன்று!; சாலவு நாளிடை கழிந்தது மன்றா;
லின்று நான்வைத்த கோவணங் கொண்டதற்
                              கெதிர்வே
றொன்று கொள்கென வுரைப்பதே! நீ“ரென
                              வுரையா,
25

     (இ-ள்.) வெளிப்படை. நின்ற வேதியர் சினந்து,
“அமர்நீதியாரே! நீர் சொல்லும் நிலை மிக நன்று!; இடையில் அதிக
நாள்கள் கழிந்ததுமில்லையே!; இன்றைக்கு நான் உம்மிடத்தில்
கொடுத்து வைத்த கோவணத்தை நீரே கொண்டு, அதற்கு எதிராக
வேறு ஒரு கோவணங் கொள்க என்று சொல்வதா?“ என்று சொல்லி,

     (வி-ரை.) நின்ற வேதியர் - அங்கு ஈரக்கோவணத்துடன்
நின்ற மறையவர்.

     அமர்நீதியார்! - அமர்நீதியாரே! - அண்மை விளி.
நிலைமை நன்று!
- நீர் கூறிய படிக்கு உள்ள உம்முடைய நிலைமை
நன்றாயிருக்கின்றது!. நன்று! - ஆச்சரியக் குறிப்பு; நன்றன்று என
எதிர்மறை குறித்தது. உடன்பாட்டுத் தொனிப்பொருளும்பெறக் கூறிய
சுவை காண்க.

     நாள் சாலவும் இடை கழிந்ததும் அன்றால் என
மாற்றியுரைக்க. நான் தந்ததற்கும் இங்கு அதனைக் காணவில்லை
என்று நீர் சொல்வதற்கும் இடையில் பல நாள்கள் கழிந்ததில்லை.
சாலவும் நன்று - மிகவும் நன்று எனக் கூட்டியுரைப்பது மொன்று.
உம்மை - இழிவு சிறப்பு. இடைகழிதல் - இடையிற் செல்லுதல்.
சாலவும் - மிகுதியும் “சாலநாள் கழிந்த பின்னர்“ (378)
என்றதனோடு இதனை ஒப்பிடுக. “சாராதே சாலநாள் போக்கி
னேனே“ - திருத்தலையாலங் காட்டுத் திருத்தாண்டகம்.

     இன்று - சாலவும் நாளிடை கழிந்ததுமன்று என்றதனையே,
அநுவதித்துஇன்று நான் வைத்த என்று வற்புறுத்தியபடி.

     கொண்டு - கைக்கொண்டு. 516 - காண்க. வாங்கிக்கொண்டு
- பெற்றுக்கொண்டு - ஒப்புக்கொண்டு - என்க. கொண்டு - இங்கு,
மறைத்துக்கொண்டு - களவு செய்து என்ற மற்றொரு பொருளும்
பெறப் பிரமசாரியார் கூறியது காண்க.

     அதற்கெதிர் - எதிராக - பிரதியாக - ஒப்பாக. “மாறு
சாத்தி“ - (525) என்று நாயனார் சொல்லிய அதனையே அநுவதித்து
எதிர்
என்றார்.

     வேறு ஒன்று - “வேறு நல்லது ஓர் கோவணம்“ (525)
என்பதனையே பின் பற்றிக் கூறியபடி - ஒன்று கொள்கென
உரைப்பதே நீர்?
- இஃதொன்று மட்டோ? உம்மையும்
உம்முடையதென்ற எல்லாமும் கொண்டு செல்ல உள்ளேன்.
அங்ஙனமாகவும் நீர் ஒன்று கொள்க எனச் சொல்வதென்னை? என்ற
குறிப்புமாம். ஏகார வினா. ஆச்சரியக் குறிப்பும் பெற நின்றது. நீர்
உரைப்பதே
என மாற்றுக. சினக் குறிப்புப் பற்றி எழுவாய்
பயனிலைகளை நிலைமாறி வழங்கினர். உரையா - உரைத்து.

     உரைப்பதென் - என்பதும் பாடம். 25