1125. இவ்வ ளந்தரு பெருந்திரு நாட்டிடை யென்றும்
மெய்வ ளந்தரு சிறப்பினா லுலகெலாம் வியப்ப
"வெவ்வு கங்களு முள்ள" தென் றியாவரு மேத்துங்
கைவி ளங்கிய நிலையது காஞ்சிமா நகரம்
. 48

     (இ-ள்.) வெளிப்படை. இந்த வளங்களைத்தரும்
பெருமையுடைய திருநாட்டில் பெருமையுடைய காஞ்சிபுரத்
திருநகரமானது, உண்மையாகிய வளங்களைத் தரும் சிறப்பினாலே
உலகங்களெல்லாம் வியக்கும்படி எல்லா வுகங்களினும் அழியாமல்
நிலைத்துள்ளதென்று எல்லாரும் துதிக்கின்ற ஒழுக்கத்தினால்
விளங்கிய நிலைமையினையுடையது.

     (வி-ரை.) பெரும் - திரு நாடு - பெருமை என்றது
மேற்கூறிய நானிலத்தைந் திணையின் முதற்பொருள் கருப்
பொருள்களின் வளங்களாகிய உலகநிலைப் பெருமை. திரு
என்றது அவ்வளங்களோடு கூடிய சிவச்சார்பினாலாகிய செம்மை.

     மெய் வளம் - என்றும் அழிவில்லாத சத்து எனப்படும்
செம்மையாகிய முத்திவளம். காசி முதலாக எண்ணப்படும்
முத்தித்தலங்கள் ஏழனுள் காஞ்சிபுரமும் ஒன்றாதலின் என்றும்
மெய் வளந்தரு சிறப்பினால்
என்றார் "நகரேஷு காஞ்சி"
என்பதும்காண்க.

     யாவரும் ஏத்தும் - எல்லாச் சமயத்தாரும் என்பாரும்
உண்டு. இத்தலத்தில் 20 சிவதலங்களும், 8 வைணவ தலங்களும்
உண்டு. சைவர்களேயன்றி வைணவர்களும் பௌத்தர்
முதலாயினோரும் போற்றினர் என்பர். மணிமேகலை கச்சி
மாநகரம் புக்ககாதை, தவத்திறமுரைத்த காதை முதலாயினவும்
காண்க.

     எவ்வுகங்களும் உள்ளது - உகாந்த காலத்தில் ஏனைய
உலகங்களெல்லாம் அழியினும் இஃது அழியாமல் நிலை
பெற்றுள்ளதுஎன்ற காரணத்தால் இதற்குப் பிரளயசித்து என்ற
பெயரும்வழங்கும். கைவிளங்கிய - கை - ஒழுக்கம்.
"கையொன்றறிகல்லாய்" (கலித் - 95).

     மெய்வளந்தரு சிறப்பினால் எவ்வுகங்களும் உள்ளது -
என்றும் அழிவில்லாத முத்தியைத் தருதலால் என்றும் அழியாதது
என்பதாம். காரணகாரிய முறை பெறக் கூறினார்.

     இந்நகரச் சிறப்பினைக் "கச்சிமா நகரோர் தட்டுங் கடவுள
ருலகோர் தட்டும், வைச்சுமுன் னயனார் தூக்க மற்றது மீது
செல்ல, நிச்சய முறுகித் தாழ்ந்து நிலமிசை விழுமிவ் வூரை, யிச்சகத்
தூர்களோடு மெண்ணுதன் மடமைப் பாற்றே" (திருநகரப்பட - 1)
என்று காஞ்சிப்புராணமுடையார் பாராட்டிய திறமும் காண்க. 48