1131. ஏத மில்பல யோனியெண் பத்து
     நான்கு நூறாயி ரந்தனுள் வைத்த
பேத மும்புரந் தருளுமக் கருணைப்
     பிரான்மொ ழிந்தவா கமவழி பேணிப்
போது நீர்மையிற் றொழுதனள் போதப்,
     பொருப்பில் வேந்தனும் விருப்பில்வந்
                             தெய்தி
மாத வம்புரிந் தருளுதற் கமைந்த
     வளத்தொ டும்பரி சனங்களை விடுத்தான்.
54

     (இ-ள்.) வெளிப்படை. மலம் நீங்கும் பலவகைப்பட்ட
யோனிபேதமாகிய எண்பத்துநான்கு நூறாயிரம் வகைகளினுள்ளும்
வைக்கப்பட்ட உயிர்களை எல்லாம் காப்பாற்றி அருளும்
கருணையினையுடைய சிவபெருமான், உபதேசித்த அந்தஆகமங்களிற்
கூறப்படும் நெறியே பூசை செய்தலை விரும்பிச் செல்கின்ற
தன்மையினாலே, தொழுதுகொண்டு உமையம்மையார் செல்ல,
மலையரசனும்விருப்பத்தோடும் வந்து அடைந்துஅம்மையார்
மாதவத்தைச் செய்தருளுவதற்கேற்ற வளங்களுடன் பரிசனங்களை
விடுத்தனன்.

     (வி-ரை.) ஏதம் இல் - ஏதம் - குற்றம்; அநாதியே
உயிர்களைப் பந் தித்த ஆணவ மலக் கட்டு. இல் - இல்லையாகப்
பெறும். உயிர்கள் அவ்வவற்றின் கன்மத்துக் கேற்றபடி ஒத்தது -
என்றிவ்வாறு காரணப்பொருள்கள் பலவும் பொருந்தப் பெயர்
வழங்கப்படுவது. காஞ்சிப்புராணம் - திருவேகம்பப்படலம் 34 - 35 -
36 பாட்டுக்கள் பார்க்க.

     மா அமர்ந்த நம் இருக்கை - மா - மாமரம். அமர்தல்
- விரும்புதல். "ஆயினவற் றுயர்காசி காஞ்சியெனு மிரண்டதிக
மறிவான் மிக்கோ, ராயினவை யிரண்டுள்ளுஞ் சாலநமக் கினிய
நக ரணிநீர்க் காஞ்சி"
(காஞ்சிப்புரா - தழுவக் - 48) என்றது
காண்க. இருக்கை - எழுந்தருளியிருக்குமிடம். "மாவின் மூலத்தில்
வந்து தோன்றினார்" (1134), "மாவடி வைகுஞ் செவ்வேள்"
(கந்தபுராணம்).

     இந்த மாமரம் நான்கு மறைகளின் உருவமுடையது.
நால்வகையான கனிகளைத் தருவது. இம்மரம் இன்றும் நாம் கண்டு
வணங்கத்தக்கதாய்த் தழைத்து ஓங்கி விளங்குதல் நமது பேறேயாகும்.
வேதங்களே இந்த மாவாய் ஓங்கியன என்பது "தாவ ரும்பழ மாமறை
தம்பிரா னருளால்,மேவ ருந்தனிச் சூதமாய்...ஓங்கிய தன்றே"
(திருவேகம்பப்படலம் - 4) என்ற காஞ்சிப்புராணத்தால்
அறியப்படும்.

     மன்னுபூசனை - "நின் பூசனை யென்றும் முடிவ தில்லைநம்
பால்" (1145) என்றபடி என்றைக்கும் முடிதலில்லாது சத்தியமாய்
நிகழும் பூசை.

     மன்னுதல் - நிலைபெறுதல். பூசிக்கும் உயிர்களும்,
பூசிக்கப்படும் இறைவனும் நித்தியர்கள். "என்றுநீ அன்றுநான்;
நின்னடிமை யல்லவோ?" (தாயுமானார்) என்றபடி முத்திநிலையிலும்
உயிர்கள் சிவனுக்கு அடிமை செய்வன. அவ்வாறு உயிர்கள்
நித்தியமாய் இறைவனைப் பூசித்து உய்யும்பொருட்டு இறைவியார்தாம்
நிலைத்த பூசையினைச் செய்கின்றார் என்பதும் குறிப்பு.
இப்பொருளில்மன்னு என்பதற்கு மன்னுவிக்கும் -உயிர்களை
நிலைபேறு பெறுவிக்கும் என்றுரைத்துக்கொள்க.

     பிரியா இசைவு கொண்டு - பிரியமாட்டாதவராயும், இறைவரது ஏவுதலின் படி கயிலையினின்றும் பிரிந்து காஞ்சி செல்வதற்கு
உடன்பட்டு, "தாழ்ந்துதாழ்ந் தெழுந்துநின்று, கொம்பரி னொல்கிப்
பல்காற் புறவிடை கொண்டு" என்ற காஞ்சிபுராணமும் காண்க.

     எழுந்தருளுதற்கு - கயிலையினின்றும் செல்வதற்கு.
53