1214.

பண்ணின் பயனா நல்லிசையும் பாலின் பயனா
                              மின்சுவையுங்
கண்ணின் பயனாம் பெருகொளியுங் கருத்தின் பயனா
                              மெழுத்தஞ்சும்
விண்ணின்பயனாம் பொழிமழையும்
                  வேதப்பயனாஞ்சைவமும்போன்
மண்ணின் பயனா மப்பதியின்
              வளத்தின்பெருமைவரம்புடைத்தோ. 9

     (இ-ள்.) வெளிப்படை. பண்ணிற்குப் பயனாகும் நல்ல
இசையினையும், பாலுக்குப் பயனாகும் இனிய சுவையினையும், கண்
பெற்றதற்குப் பயனாகும் பெருகும் ஒளியினையும், கருத்திற்கு உரிய
பயனாகும் திரு அஞ்செழுத்தினையும், விண்ணினுக்குப் பயனாகும்
பொழியும் மழையினையும் வேதத்திற்குப் பயனாகும்சைவத்தினையும்
போல மண்ணிற்குப் பயனாகும் அந்தப் பதியினது வளத்தினது
பெருமை அளவுடையதாகுமோ? (ஆகாது).

     (வி-ரை.) உவமை முகத்தால் பல பெரிய உண்மைகளை
இத்திருப்பாட்டினால் ஆசிரியர், உலகம் பயன்பெறப் போதித்துப்
புகட்டுதல் காணத்தக்கது.

     பண்ணின் பயன் ஆம் நல்இசை - பண் - பாலைப்பண்
முதலாயின. இது தமிழுக்கே சிறப்பாக உரியஇசையமைதி.
"பண்ணிடைத் தமிழ் ஒப்பாய்" (குருகாவூர் - 6) என்ற ஆளுடைய
நம்பிகளது தேவார முதலியவை காண்க. பண்ணின் பயனாம்
நல்இசை
என்றது இசை கூடினாலன்றி வெறும் பண்
பயன்தராதென்பதாம். இசை என்பது இறைவனது புகழ்களை
இசைக்கும் பொருள்கூடிய தொடர்பு. திருஇசைப்பா என்றது
காண்க. இசை அல்லது இறைவன் புகழ்ப் பொருளுடன்
கூடாதவழிப் பண் பாடுதல் வெறும் செவிக்கு ஓசை
இன்பமாயொழியும் என்பதும்,அது மனத்தினுட் சென்று
மனத்தையும் உயிரையும் உருக்கிஇறைவன் திருவடிச் சார்வு
பெறுவிக்காதென்பதும் குறிப்பித்தவாறு. "பண்ணொன்ற
இசைபாடு மடியார்கள் குடியாக, மண்ணிண்றி விண்கொடுக்கும்
மணிகண்டன்" (சீகாமரம் - புள்ளிருக்கு வேளூர் - 8.) என்ற
ஆளுடைய பிள்ளையார் தேவாரமும், "பண்பொருந்த
இசைபாடும்" (பழந்தக்க - பழனம் 5.) என்ற அப்பர் சுவாமிகள்
தேவாரமும்காண்க. இச்சிறப்பினையே "பண்ணி ணேர்மொழி
யாளுமை பங்கரோ" (திருமறைக்காடு - குறுந்தொகை) என்ற
தேவாரமும்," பண்ணி னேர்மொழி யாளென் றெடுத்துப் பாடப்
பயன்றுய்ப்பான்" என்ற மாபுராணமும் விரித்துக் கூறுவனவாம்.
இறைவன் புகழோடு கூடாத வெறும் சங்கீதங்களில் ஈடுபட்டுப்
பணமுந் தந்து போதும் போக்கும் மாக்கள் இதனை உய்த்து
உணர்ந்துய்வார்களாக.

     பாலின் பயனாம் இன்சுவை - "அன்னைமுலைத்
தீம்பாலி னரியசுவைத் திஃது" (மண்சும - பட - 23)
என்ற திருவிளையாடற்புராணங் காண்க. பாலினை ஆட்டி
அதன் பயனாகப்பெற்ற இனிய சுவையாகிய இச்சரித
விளைவினைக் குறிப்பாலுணர்த்துவதும் காண்க.

     கண்ணின் பயனாம் பெருகு ஒளியும் - ஈண்டுக் கண்என்றது
கண்ணுறுப்பினை. காட்டும் ஒளியாகிய ஞாயிறு முதலிய பேரொளிப்
பொருள்களும் கண்ணுக்குப் பயனாகா;காணுமொளியாகிய
கண்ணொளியே கண்ணுக்குப் பயனாம். "ஒளியுமிருளு முலகு மலர்கட், டெளிவி லெனிலென் செய" என்ற திருவருட்பயனும் ஈண்டுக்
கருதத்தக்கது. பெருகொளி என்றதனையே "அலர்கட் டெளிவு"
என்றுஇத் திருவருட்பயன் குறள்வெண்பாவிற் கூறப்பட்டது. பெருகு
ஒளி
என்றது கண்ணுக்குச் சிறப்பாகிய, சேய்மையிலும் சென்று
அறியும் தன்மையினைக் குறிப்பதுமாம்.

     கருத்தின் பயனாம் எழுத்து அஞ்சும் -
திருவைந்தெழுத்தினைக் கருதுவதற்கே கருத்து மக்களுக்குத்
தரப்பட்டிருக்கின்றது என்பது உண்மைநூற் றுணிபு."நினைக்க
மடநெஞ்சம்" (தேவாரம்), "சிந்தனை செய்ய மனமமைத்தேன்"(11-ம்
திருமுறை - பொன்வண் - 92) என்பனவாதி திருவாக்குக்களால்,
சிவனை நினைத்தலே மனம் பெற்றதன்பயனாம்; அல்லாதவழி
கருத்துப் பெற்ற பயன் இல்லையாகும்என்பது. ஐந்தெழுத்து -
சிவன்றிருநாமம்."ஆலைப் படுகரும்பின்சாறுபோல அண்ணிக்கு
மைந்தெழுத்தி னாமத் தான்காண்" (திருத்தாண்டகம் - வீழி - 2)
முதலியவை காண்க. ஐந்தெழுத்தைக் கருதுவதாவது: அவற்றின்
உள்ளீடாய் அறிவிக்கப்படும், சிவன் உயிர்களுக்குச் செய்யும்
பெருங்கருணையை எண்ணி உருகுதல். "விதிஎண்ணுமஞ்செழுத்தே"
என்பது ஞானசாத்திரம்.

     விண்ணின் பயனாம் பொழி மழையும் - ஆகாயம் ஏனை
எல்லாவற்றுக்கும் இடம் கொடுக்கும் என்ப. அவ்வாறுவிண் தனது
தொழிலைச் செய்வதனில் மழைக்கு இடங்கொடுத்த அளவானேஅது
பயனுடைத்தாகும் என்பது. இக்கருத்துப் பற்றியே "வானின் றுலகம்
வழங்கி வருதலால்","விசும்பிற் றுளிவீழினல்லால்" என்ற
திருக்குறள்களும் போந்தன. "வான் சிறப்பு" என்ற கருத்து மிது.

     வேதப்பயனாம் சைவம் -வேதத்தின் முடிந்த பொருள்
சைவம். சைவம் சிவாகமப் பொருள் குறித்தது. "இனி அதர்வசிகை
முதலிய உபநிடதங்களிற் கூறும் பொருளுஞ் சிவாகமப் பொருளை
நோக்கும் வழிச், சூத்திரமும் பாடிய மும்போலத் தூலாருந்ததி
முறைமையாமாகலின், தேவம் பொது நூலெனவும், ஆகமஞ்
சிறப்புநூலெனவுங் கூறப்பட்டன. "வேதாந்தத் தெளிவாஞ் சைவ
சித்தாந்தத் திறனிங்குத் தெரிக்க லுற்றாம்" (சிவப் - பாயி -
7) என்றதூஉம் இம்முறைமை தெரிந்து கோடற்கென்க. "வேதப்
பயனாஞ் சைவமும்போல்
என்பதும் அது" என்று எமது மாதவச்
சிவஞான யோகிகள் சிவஞானமாபாடியச் சிறப்புப் பாயிரத்தினுள்
இதனை விளக்கியருளியது காண்க. 1033 - 1037 - ல்
உரைத்தவையும் பார்க்க.

     மண்ணின் பயனாம் - அப்பதி - மண் - இந்நிலவுலகம்;
மண்ணாலாகிய உலகம். பிருதுவியண்டம் என்பர் வடவர். இந்தப்
பதியில்லையாயின் மண்ணுலகம் வேறெல்லா மிருந்தும்
பயனற்றதாகும்; இப்பதியே மண்ணுலகத்துக்குப் பயன்தருவது
என்பதாம். போக நிலங்களாகிய ஏனை மேல் கீழ் உலகங்கள்
போலல்லாது, இந்நிலவுலகமாகிய புவனியானது உயிர்கள்
இங்குவந்து பிறந்து சிவனைப் பூசித்து முத்தியடைதற் கேதுவாகிய
வுலகமாம். "இந்தப் பூமி சிவனுய்யக் கொள்கின்ற வாறு"
(திருப்பள்ளி யெழுச்சி - 10) என்ற திருவாசக முதலியவை காண்க.
அவ்வாறு வந்து பிறந்து சிவபூசை செய்யும் உயிர்க்கு
அந்தப்பூசையின் பயனைஉதவும் சண்டீச நாயனாரைப் பெறும்
பேறுடையது இப்பதி; ஈதலின் இதனை மண்ணின் பயனாம் பதி
என்றார்.

     உலகத்துயிர்க்கெல்லா மிதுவேபொருள் என்று சிவபூசைசெய்து
வழிகாட்டி முருகக்கடவுள் இப்பதியை நிறுவினர்என்பதனைச்
"சேந்தனளித்த" (1206) என்று முதலிற் கூறி, அச்சிவபூசைப் பயனை
அளிக்கும் தன்மையை இங்குக் கூறி, நகரச் சிறப்பினை "வளத்தின்
பெருமை வரம்புடைத்தோ?"
என முடிக்கு மியைபு காண்க.

     பண்ணினுக்குப் பயன் என்பனவாதியாக எல்லா
இடத்தும் நான்கனுருபுகள் விரித்துக்கொள்க.

     போல் - நல் இசை - இன்சுவை - பெருகொளி -
அஞ்செழுத்து - பொழிமழை - சைவம் என்ற ஆறனையும்போல
இப்பதி உற்றது என்பதாம். பயனாதல் உவமத்துக்குப்பொதுத்தன்மை.
பயன்பற்றி வந்த உவமம். அப்பதியாகிய ஒரு உவமேயப்
பொருளுக்கு ஆறு உவமானப் பொருள்கள் தந்தது அப்பொருளின்
சிறப்புக் குறித்தற்கு. இது பல பொருளுவமை என்னும் அணியின்
பாற்படும். அன்றியும் பண்ணின் பயன் இசை - கருத்தின் பயன்
அஞ்செழுத்து - வேதப்பயன் சைவம் என்ற உண்மைகளை
வற்புறுத்திப் புகட்டுதலும் ஆசிரியர் கருத்தென்க. இப்புராண
முழுமையும் அறுசீர்க்கழி நெடில் விருத்தமாக யாத்து உரைத்ததும்
ஒரு சிறப்புப் பற்றியதென்க.

     இனிப், பண்பொருந்த இசை பாடியும், இறைவரைப் பாலின்
திருமஞ்சன மாட்டியும், கண்ணாரக் கண்டும், அவனது
திருவைந்தெழுத்தை எண்ணார எண்ணியும், விண்ணின் வீழும்
மழையானிறைந்த குளிர்புனல்கொண்டு அருச்சித்தும், வேதாகம
நூல் வழிச் சிவபூசை செய்தால் அதன் பயனை நிலவுலகத்தாருக்கு
அந்தத் தலம் தருகின்ற பெருமையுடையதாம் என்ற தொடர்பாகிய
உள்ளுறைப்பொருளும் படுவது காண்க.

     வரம்புடைத்தோ? ஓகாரம் எதிர்மறை. 9