1226.
"சீல முடைய கோக்குலங்கள் சிறக்குந் தகைமைத்
                               தேவருடன்
கால முழுது முலகனைத்துங் காக்கு முதற்கா ரணராகு நீல கண்டர் செய்யசடை நிருத்தர் சாத்து நீறுதரு
மூல மவதா ரஞ் செய்யு மூர்த்த மென்றால்
                            முடிவென்னோ?; 21

     1226. (இ-ள்.) வெளிப்படை. ‘சிறப்பாந் தன்மையுடைய
தேவரோடு கால முழுதும் எல்லா உலகங்களையும் காக்கின்றமுதற்
காரணராகும் திருநீலகண்டராகிய சிவந்த சடையினையுடைய
திருக்கூத்துடைய பெருமான் சாத்தும் திருநீற்றைத் தருகின்றகோமயம்
எனப்படும் மூலத்தினைத் தருகின்ற மூர்த்தங்கள்சீலமுடைய இந்தப்
பசுக்களேயாகும் என்றால் முடிவு வேறு என்ன உள்ளது? 21

     1226. (வி-ரை.) சீலம் - இங்குத் தூய்மை குறித்தது.

     சிறக்கும் தகைமைத் தேவருடன் - சிறப்பாகிய படைப்பு
முதலிய தொழில்களைச் செய்யும் பெருந்தேவர்களோடு.

     தேவருடன்.......உலகனைத்தும் காக்கும் என்று கூட்டுக.
தேவர்களையும் மற்றும் எல்லா உயிர்களையும் காக்கின்ற.

     காலம் அனைத்தும் என்பது இடையில் நின்று தேவருடன்
உலகனைத்துங் கால முழுதும் என்று கொண்டு கூட்டி
யுரைக்கின்றது. எல்லாக் காலங்களிலும் எல்லா உயிர்களையும்
உலகங்களையும் காக்கின்ற என்க.

     முதற்காரணர் என்பது தமக்கொரு முதல்வரில்லாத
முழுமுதற் காரணர் என்ற பொருளில் வந்தது. காக்கின்ற கடவுளரை
யெல்லாம் தோற்றுவித்துக் காத்து இறுதியில் தன்னகத் தொடுக்கும்
தன்மை பற்றிக் காக்கும் முதற்காரணர் என்றார் என்றலுமொன்று.
"படைப்போற் படைக்கும் பழையோன், காப்போற் காக்குங் கடவுள்"
என்ற திருவாசகம் காண்க.

     சாத்தும் - அணியும். நீறு அணிந்து நிற்பது சிவபெருமானது
சிறப்புத் தன்மை. நீறு - இறுதிக் காலத்திலும் அழியாமலிருப்பது
இறைவன் திருமேனியில் தங்கும் திருநீறாகும். இங்குக் குறித்த நீறு
இறைவர் திருமேனியில் அணிவதற்கு அடியார் பயன் படுத்துவது.
"வள்ளல் சாத்து மதுமலர் மாலையும் அள்ளு நீறும்" (31) என்றது
காண்க.

     நீறுதரும் மூலம் - திருநீறு பெறுதற்கு ஆதாரமாயுள்ளது.
கோமயம் என்பர். பசுவின் சாணம்.

     மூலம் அவதாரம் செய்யும் மூர்த்தம் - கோமயம்
உண்டாகும் இடம். அவதாரம் - மூர்த்தம் என்ற சொற்கள்
அப்பொருள்களின் உயர்வைக் குறித்துநின்றன. மூர்த்தம்
- வடிவம்; இங்கு ஆனினத்தைக் குறித்தது.

     என்றால் முடிவு என்னோ? என்று காண்போமானால் இதன்
ஏற்றத்துக்கு அளவும் உண்டோ? என்பதாம்.

     சைவத்தின் சிறந்த சாதனமாகிய திருநீற்றினுக்கு
ஆதாரமாயுள்ளது பசுக்களது பெருஞ்சிறப்பாம் என்பது.
என்னோ? என்ற வினா வேறின்மை குறித்தது.

     இதனால் திருநீற்றின் சிறப்புப்பற்றி பசுக்களது சிறப்புக்
கூறப்பட்டது. 21