1234.
பூணுந் தொழில்வேள் விச்சடங்கு புரிய வோம
                                  தேனுக்கள்
காணும் பொலிவின் முன்னையினு மநேக மடங்கு
                              கறப்பனவாய்ப்
பேணுந் தகுதி யன்பாலிப் பிரம சாரி மேய்த்ததற்பின்
மாணுந் திறத்த வானவென மறையோ ரெல்லா
                             மனமகிழ்ந்தார்.
29

     (இ-ள்.) வெளிப்படை. மறையவர்கள் எல்லாரும் தாம் மேற்
கொள்ளும் தொழிலாகிய வேள்விச் சடங்கு செய்வதற்கு உதவும்
ஓமப் பசுக்கள், கண்ணால் நேரே காணுமாறு மிக அழகுடன்
விளங்கி முன்னையினும் அநேக மடங்கு பால் கறப்பனவாய்ப்,
பசுக்காக்கும் முறையில் தகுதியுடன் அன்பினால் இந்தப் பிரமசாரி
மேய்த்ததற்பின் மாட்சிகொண்ட தன்மையுடையவாயின என்று மன
மகிழ்ந்தார்கள்.

     (வி-ரை.) பூணும் தொழில் வேள்வி - மறையோர் தமது
மரபுரிமையாக மேற்கொள்ளும் தொழிலாகிய வேள்வியில்.
அறுதொழில்களுள் வேட்டல் ஒன்றாகி மறையோரது நியமமாதலிற்
பூணும் என்றார்.

     ஓமதேனு - 1210 பார்க்க.

     காணும் பொலிவின் - வெளிப்படையாகக் கண்ணாற்கண்டு
களிக்கும் அழகினுடன்.

     முன்னையினும் அநேக மடங்கு கறப்பனவாய் - இதற்குக்
காரணம் முன்பாட்டில் மடிபெருகி என்றதனால் உரைக்கப்பட்டது.

     பேணும் தகுதி இப்பிரமசாரி அன்பால் மேய்த்ததற்பின்
- என்க.

     பேணும் தகுதி - பசுக்காத்தற்குத்தக்க தன்மை. இதனை
முன், "மேய்க்கும் பான்மை" (1230) என்றார். இத்தகுதிக்குரிய
செயல்கள் 1230 - 1231 - ல் உரைக்கப்பட்டன. அன்பால் -
பசுக்கள் செழித்து மன மகிழும்படி மேய்ப்பதற்கு இன்றியமையாத
சாதனம் அவற்றினிடத்து அன்புடைமையேயாம் ன்ற துணிபை
வற்புறுத்தியவாறு காண்க. இதனை முன்னர் "மிகும்பரிவால்"
(1222) என்றதும் காண்க.

     இப்பிரமசாரி - விசாரசருமனார் தம்முள் ஒருவராயிருத்தலின்
என்ற அண்மைச் சுட்டினாற் குறித்தார்கள்.

     மாணும் திறத்த ஆன - மாண்பு பொருந்தியதன்மையுடையன
வாயின. மாண்பாவது அழகுடைமையும்மனமகிழ்ந்து பால் அதிகம்
தரும் தன்மையுமாம். ஆன - ஆயின- ஆயன் மேய்த்த போதில்லாத
மாண்பு இப்போது உளதாயிற்று என்பார் மேய்த்ததற்பின் -
ஆயின
என்றார்.

     மறையோர் - பசுக்களை உடையவர்கள். 1233 - ல் பசுக்கள்
ஏய மனங்கொள் பெருமகிழ்ச்சி எய்தினதைக் கூறினார்; இங்கு
அவற்றின் மகிழ்ச்சிகண்டு அவற்றாற் பெறும் வேள்விச் சிறப்பு
நோக்கி மறையோரும் மனமகிழ்ந்தமை கூறினார்.

     எல்லாம் - எல்லாரும், முற்றும்மை தொக்கது. கறப்பனவாய்
- மாணுந் திறத்த ஆயின என்று கூட்டுக. 29