646.
கைவா ளுடன்பலகை நீக்கக் கருதியது
செய்யார் "நிராயுதரைக் கொன்றா ரெனுந் தீமை
யெய்தாமை வேண்டு மிவர்க்"கென் றிரும்பலகை
நெய்வா ளுடனடர்த்து நேர்வார்போ
                        னேர்நின்றார்.   39 

     646. (இ-ள்.) வெளிப்படை. (அவனைக் கொல்லும் இடை
தெரிந்து அடர்க்கக்) கையில் ஏந்திய வாளினையும் பலகையையும்
போக விட்டுவிட முதலிற் கருதினாராயினும் "நிராயுதரைக் கொன்றார்
என்கின்ற பழி இவர்க்கு வராதிருக்கவேண்டு" மென்று எண்ணி
அந்த வலிய பலகையினையும் நெய்யூட்டிய வாளினையும் உடன்
ஏந்தி, எதிர்த்துப் போர்செய்வாரைப் போலக் காட்டி நேரே
நின்றனர். 39
  

     646. (வி-ரை.) நீக்கக்கருதி - இது, இவர் குறிவழி
நிற்பேன் என்று துணிந்த மனநிலையினை அடுத்து, நாயனார்
மனத்துள் நிகழ்ந்த நிகழ்ச்சியாம். நீக்க - தாங்காது போக்க, கருதி
- கருதியும். அது - நீக்குதலை. செய்யார் - செய்யாராகி.
செய்யாமைக்குக் காரணம் மேற் கூறுகின்றார்.

     இவர் கொள்கைக் குறிவழி நிற்றல் மாத்திர மன்றி, அதனை
அவர் பெறுதலில் நீறிட்டு அடியாராயின அவர்க்கு எவ்வகையானும்
பழிவாராமற் காக்கவும் வேண்டும் என்றது நாயனார் மனத்துள்
அடுத்து எழுந்த நினைவு, இதனால் அவரது திருநீற்றுச் சார்வாகிய
அன்பின் உறைப்பினை மேலுங்காண்க.

     நிராயுதரைக் கொன்றார் எனும் தீமை - இவர்
விரும்பியமைந்தபடி என் உயிரைக் கொண்டு தாயமும் கொள்ளுமாறு
வாளும்பலகையும் போக்கி நின்றேனாகில் அந்நிலையிலும் இவர்
கொல்வர்; அப்போது நிராயுதரைக் கொன்றார் என்ற தீமை இவரைச்
சாரும்; நீறு பூசிய ஒரு அடியார்க்கு அப்பழி சாரலாகாது; இவரை
அடியாரெனக் கண்டு இவர் குறிவழிநிற்கத் துணிந்தேனாதலின்
இவர்க்குப் பழி சாரும்படி நான் நிற்கலாகாது என்பன அவர்
கருதியனவாம். நிராயுதரைக் கொல்லலாகாது என்பது போர்வீரர்
கைக்கொண்டொழுக வேண்டிய போர் நீதிகளில் ஒன்று. தாயத்தின்
வைத்த பேராசையால் வஞ்சித் துயிர்கொண்டு அதனைக்
கவரத்துணிந்த இவர் இந்தப் போர் நீதியையுங் கடந்து கொல்வர்
என்பதும் நாயனார் துணிந்தனர்.

     இவன் எவ்வகைப் பழித் தொழிலராயினும், நீறிட்டதனா
லடியாராயின்மையின் இவர் வழி நான் நிற்பேன்; அவ்வாறு
நிற்கும்பொழுது இவர்க்கு எப்பழியும் வாராமலும் நிற்பேன் என்று
துணிந்த திருநீற்றுச் சார்பின் அடிமைத்திறத்தின் மேன்மை
நோக்குக. இதுபற்றியன்றே ஆசிரியர் "திருநீற்றுச் சார்புடைய
எம்பெருமான்" (649) என முடித்தனர்.

     தீமை - பழி. நிராயுதரைக் கொல்லலாகாது என்பது
முன்னைநாள் தமிழரது போர் நீதி. பசுக்கள், முதுவர்,
பிணியுடையோர், பெண்டிர், புதல்வர்ப் பெறாகோர், படையேந்திப்
போர்செய்யாதார், சிறுவர் முதலியோரைக் கொல்லலாகாது என்பது
தமிழரின் நீதிப் போர் ஒழுக்கம். அத்தகையோரைத் தம்மரண்
சேரும்படி போர் தொடங்கு முன்னர்ப் பறைசாற்றுவிப்பதும் வழக்கு.
பொருட் பேராசையால் விழுங்கப்பட்டார்களாகிப், படையெடாதோர்
பாலர், பெண்கள் முதலிய ஒன்றும் பாராது, வெகுதூரம் மறைந்து
நின்று, நச்சுக்காற்று வெடிகுண்டு முதலிய நாசகாரிகளாற்
குடிமக்களைக் கொன்று பொருள்கவர்வதாகிய இந்நாள்
அநாகரிப்போர் முறைக் கொலைக் கொள்ளைகளை நம் பழந்தமிழர்
அறியார். இந்நீதிகளை யெல்லாம் அடியார் பெருமையினில் உள்
அடக்கி இங்கு நாயனார் குறிப்பாகக் கொண்டதனை எடுத்துக்
காட்டும் வகையில் உலகுக்குப் போர்நீதி யறிவித்தனர் சிறந்த
அமைச்சர் பெருமானாகிய ஆசிரியர்.

     நேர்வார்போல் - அமர் விளைப்பார்போல, வாளும்
பலகையும் நீக்கினாருமல்லர்; அவற்றை வாளா தாங்கி
நின்றாருமல்லர்; ஆயின் அமர் செய்வார்போற் பாவனை காட்டி
நின்றனர்.

     நேர் நின்றார் - அவன் எண்ணியபடி செய்யுமளவும்
அவனெதிர் நின்றனர். 39