654.
|
வெல்படைத்
தறுகண் வெஞ்சொல் வேட்டுவர்
கூட்டந்
தோறும்
கொல்லெறி குத்தென் றார்த்துக் குழுமிய வோசை
யன்றிச்
சில்லரித் துடியுங் கொம்புஞ் சிறுகணா குளியுங்
கூடிக்
கல்லெனு மொலியின் மேலுங் கறங்கிசை யருவி
யெங்கும். 5 |
(இ-ள்.)
வெளிப்படை. வெல்லும் படையும், தறுகண்மையும்,
கடிய சொல்லும் உடைய வேட்டுவர் கூட்டங்களி லெங்கும் கொல் -
எறி - குத்து என்றும் ஆரவாரித்துக் கூடுதலால் எழும்
ஓசைகளேயல்லாமல் சிலவாய பரல்களையுடைய உடுக்கையும்,
ஊதுகொம்பும் சிறிய முகமுடைய சிறுபறையும் சேர்ந்து பெருகுகின்ற
ஒலியினும் மிக்குச் சத்தித்து ஓடும் அருவிகள் அங்கே எங்கும்
உள்ளன.
(வி-ரை.)
படை மெய்யின் றொழிலும், தறுகண்மை மனத்தின்
றொழிலும், வெஞ்சொல் வாக்கின் றொழிலுங் நாட்டலின்
இவ்வேடரது மன மொழி மெய் என்ற மூன்று காரணங்களின்
கொடுமைத் தொழிலுங் குறித்தபடி.
கொல்
- எறி - குத்து - இவைகளே இவர்கள்
வாக்கினின்று வரும்சொற்கள். இவற்றை வெஞ்சொற்கள் எனக்
குறித்தபடி. ஒரு கூட்டத்தாரிற் பெரும்பான்மை வழங்கும் வழக்கச்
சொற்களே அவர்தம் வாழ்க்கை நிலையைப் புலப்படுத்துவன
என்பதற்கு இஃது ஏற்றதோ ருதாரணமாதல் காண்க.
ஆர்த்துக்
குழுமிய ஓசை - இச்சொற்களுடன்
ஆரவாரித்துக் கூடுதலால் எழும் ஓசை.
சில் அரி துடி
- சிலவாகிய உருக்குப்பரல் உள்ளே
இடப்பட்ட வெண்டயம் சுற்றிய துடி. இவ்வெண்டய முதலியவை
துடியின் வெளிப்புறம் அடித்தார்ப்பன. சிலம்பு முதலியவை மணி -
பரல் முதலியவற்றை உள்ளே இடப்பட்டு ஆர்ப்பன. இங்குச் சில்லரி
என்பதற்குத் துடியினுள் இடப்பட்ட பரல் என்பாரும் உண்டு.
கொம்பு
- வாய்வைத்து ஊதி முழக்கும் வாத்திய விசேடம்.
கொம்பு போன்றமைதலின் இப்பெயர் பெற்றது.
ஆகுளி
- சிறுபறை. சிறுகண் - துடியின் முகத்தை நோக்க
இவை சிறிய முகமுள்ளன எனக் குறித்தது. இவ்வாத்திய விசேடங்கள்
குன்றவர்களின் வேட்டையிற் பயன்படும் வகை 721 - 726
பாட்டுக்களிலும், குறிஞ்சிநிலத் திருவிழா முதலிய சிறப்புக்களிற்
பயன்படும் வகை 687 - ம் பாட்டிலும் காண்க.
கூடிக்
கல்லெனும் ஒலி - இவ்வாத்திய ஒலிகள் ஒருங்கு
சேர்ந்தபோது உளதாகிய பேரோசை.
துடி
- கொம்பு - ஆகுளி - இவை குறிஞ்சித்திணைக்குரிய
பறை விசேடங்கள்.
கொல்
- எறி - குத்து என்னும் பொருள்பற்றி நிகழும்
சொல்லோசைகளை வேறு பிரித்தும், துடி முதலியவற்றின்
பொருள்பற்றாது நிகழும் ஓசைகளை வேறு பிரித்தும் கூறினார்.
எறி - கையினின்றும் வெளியே எறியப்பட்டு ஊறு செய்யும்
படைவகையின் றொழில் குறித்தது. குந்து - அவ்வாறு வெளிப்
போகாது கையினின்றே ஊறு செய்யும் படைவகைத் தொழில்
பற்றியது. இவ்விருவகைப் படைகளாலும் செய்யுந் தொழிலுடையார்
இக்குன்றவர் என்பது கருத்து.
கறங்கு
இசை அருவி - மிக உயரத்தினின்றும் பள்ளந்தா
முறுபுனலாய் மலையின் வீழருவிகளாதலின் அவற்றின் வேகமும்,
கற்களின் மோதுதல் வளைந்து வளைந்து செல்லுதல் முதலியனவும்
ஒன்று கூடி ஓர் இசைபடஒலிக்கும் அருவி. இவற்றைக் கவி
வல்லோர் பலவாறு சுவைபடக் கூறி அனுபவிப்பர். வேடரின் சொற்
செயல்களுக் கேற்ற துடி முதலியனவும், இவற்றின் மேலாய்க் கறங்கு
மிசை யருவியும் கூடிய மூவகைச் சத்தங்கள் குறித்த நயம் காண்க.
"இமிழிசை யருவியோ டின்னியங் கறங்க" என்று இவற்றைக் குறித்த
திருமுருகாற்றுப் படையுங் காண்க.
அருவி
- குறிஞ்சியின் நீர்நிலை. 5 |