659.
பொருவருஞ் சிறப்பின் மிக்கா ரிவர்க்கினிப்
                            புதல்வர்ப் பேறே
யரியதென் றெவருஞ் சொல்ல வதற்படு காதல லாலே
முருகல ரலங்கற் செவ்வேல் முருகவேள் முன்றிற்
                                  சென்று
பரவுதல் செய்து நாளும் பராய்க்கட னெறியி
                                னிற்பார், 10

     659. (இ-ள்.) வெளிப்படை. ஒப்பற்ற சிறப்பினால்
மிக்கார்களாகிய இவர்க்கு இனிப் புதல்வர்பே றென்பதே
கிடைத்தற்கரியதாம் என்று எல்லாருங் கூற, அப்பேற்றிலே பட்ட
ஆசை மிகுதியாலே வாசமிக்கலர்ந்த மாலையணிந்த
செவ்வேலேந்திய முருகவேளினது திருமுன்றிலிற் சென்று
பரவி நாடோறும் பரவுக்கடன் பூண்ட நெறியிலே நிற்பார்களாகி, 10

     659. (வி-ரை.) பொருவரும் சிறப்பு என்றது பெற்றியால்
(657), அரும்பெறல் - (658) என முன்னர்க் குறித்தபடி நாயனாரை
மகனாகப் பெறும் சிறப்பு.

     இவர்க்கு இனிப் புதல்வர்ப்பேறே அரியது - இது
அந்நாட்டவர் இவர்களைச் சுட்டிக் கூறும் கூற்று. இனி அரியது -
இவர்களது வயது மிக முதிர்ந்த நிலை குறித்தது. புதல்வர்ப்பேறே
- மக்களைப் பெறுதலாகிய செயலே. ஏகாரம் தேற்றம். அரியது -
இன்மை குறித்தது.

     அதன் படு காதல் - அதன் - அதனில். அந்தப்
புதல்வர்ப்பேற்றிலே. படு - உண்டாகிய. படுதல் - உண்டாதல்; "ஈத
லிசைபட வாழ்தல்" என்புழிப்போல. காதல் - ஆசை பலவற்றுள்
ஒருவகை. காதலன் என்பது காதலுக்கிடமாகியவன். மகன் - என்ற
பொருளில் வழங்குதல் காண்க.

     முருகு அலர் அலங்கல் - முருகு - வாசனை. மணம்
விரியும் மாலை. இங்குக் குமாரக் கடவுட்குரிய கடம்பமலர்
மாலையைக் குறித்தது. "இருள்படப் பொதுளிய பராரை மராஅத்,
துருள்பூந் தண்டார் புரளு மார்பினன்" - என இதனை முதலிற்
றேற்றம்பெறத் திருமுருகாற்றுப்படையினுட் கூறியது காண்க.

     செவ்வேல் - செவ்வொளி வீசும் வேலினையேந்திய. வேல் -
முருகப்பெருமானது ஞானசக்தி யென்ப.

     முருகவேள் - முருகு - இளமை. எஞ்ஞான்றும் மாறாத -
அழியாத - இளமையுள்ள வேள். வேள் - விரும்பப்படுபவன். இப்
பெயரானறியப்படும் கரிய வேளாகிய அழகிய மன்மதனுமுளனாதலின்
அவனினின்றும் பிரிந்துணரும் பொருட்டு முருகவேள் - எனப்
பிரிதினியையு நீக்கிய விசேடணந் தந்தோதினார். இவரது இளமையும்
பேரழகும்பற்றி இவர்க்குக் குமரன் - இளையோன் - முருகன் -
குழகன் - முதலியவாக வழங்கும் பெயர்களும் காண்க.

"ஆயிர கோடி காம ரழகெலாந் திரண்டொன் றாகி
மேவிய வெனினுஞ் செவ்வேள் விமலமாஞ் சரணந் தன்னிற்றூயநல் லெழிலுக் காற்றா தென்றிமா னைய
                                   தொல்லோன்
மாயிரு வடிவிற் கெல்லா முவமையார் வகுக்க வல்லார்"

என்பது முதலிய கந்தபுராணத் திருவாக்கும் பிறவுங் காண்க.

     முன்றில் - சந்நிதி. பரவுதல்செய்து - துதித்து;
விண்ணப்பித்து. நாளும் - தனது கருத்து நிறைவேறும் வரை
ஒவ்வொரு நாளும்.

     பராய்க்கடன் நெறி - பிரார்த்தனை நேர்ச்சியின்வழி ஒரு
குறிக்கோளை உட்கொண்டு செய்யும் வழிபாட்டு நெறி.

     நிற்பார் - நிற்பாராகி. முற்றெச்சம். நிற்பாராயினர் என
வினைமுற்றாகக் கொண்டுரைப்பாருமுண்டு. ஒவ்வொரு நாளும்
குமாரக் கடவுளின் கோயிலிற்சென்று நேர்ச்சிக்கடன் விதியின்படி
ஒழுகி வந்தாராகி என்க. இந்நெறியினை வரும் பாட்டில்
விரிக்கின்றார். இக்காலத்துப் பலர் தாம் கோயிலுக்குச் சென்று
நின்றொழுகாமலே பிறர் வாயிலாகச் செலுத்தும் நேர்ச்சிகள் பெரும்
பயன் றரா என்பதுணர்க. 10