936.



கன்றொடு பான்மறை நாகு கறப்பன பாலாவும்
புன்றலை மென்சினை யானொடு நீடு புனிற்றாவும்
வென்றி விடைக்குல மோடு மினந்தொறும்
                              வெவ்வேறே
துன்றி நிறைந்துள சூழ லுடன்பல தோழங்கள்.
  11

      (இ-ள்.) வெளிப்படை. கன்றுகளோடு, பால் கறவை மாறிய
இளம்பசு, பால் கறக்கும் பசு, சிறிய மயிருள்ள தலையினையும்
மென்மையையும் உடைய சினைப்பசு, ஈன்றணிய பசு என்றிவையும்,
வெற்றியுடைய விடைகளின் கூட்டத்தோடு இவ்வாறு இனங்கள்
தனித்தனியாக நெருங்கி நிறைந்துள்ள இடங்களுடன் கூடிய பல
தொழுவங்கள் உள்ளன.

     (வி-ரை.) மேற்பாட்டில் "ஆயம் - பல்க - அளித்துள்ளார்"
என்றதனை, அளித்தது இவ்வாறென இப்பாட்டால் விரித்துக்
கூறுகின்றார்.

     கன்றொடு - ஒடு உருபு தந்தோதியது, கன்றுகளைப்
பாதுகாக்கும் போது பசுக்கள் - எருதுகளின் வேறாகப்பிரித்துக்
காக்கப்பட்டன என்பது குறிக்க. இவ்வாறே "விடைக்குல மோடும்"
என்று எருதுக்கூட்டம் வேறு பிரித்து அளிக்கப்பட்டதனையும் ஓடும்
என்றதனாற் பிரித்துக் காட்டியதும் காண்க. முதலிற்காக்கப்பட
வேண்டிய தகுதி நோக்கிக் கன்றுகளை முதலில் வைத்துக்
கூறினார். விடைகள் வலிமையால் தம்மையும் ஏனையவற்றையும்
காக்கும் தன்மை காட்டவென்றி என்ற அடை தந்து இறுதியில்
வைத்தார்.

     நாகு - பாலா - சினைஆன் - புனிற்றா - என்பன பசுக்
கூட்டங்களின் பல வேறுவகை குறித்தன. தொக்க இடங்களிலும்
எண்ணும்மைகள் விரித்துரைக்க. பால் மறை நாகு - பால் கறக்கும்
பருவம் மாறிய நாகு; வினைத்தொகை. மறை - மறைந்த - மறைத்த.
பால் மறை - பெயர் எனக்கொண்டு பால்வற்றிய பசு என்றலுமாம்.
நாகு - இளம்பசு. கறப்பன - கறப்பனவாகிய, பால் ஆ -
பால்தரும் பருவத்துள்ள பசு, மென்மை - சினைப்பசுக்கள்
கருப்பொறையினால் உடல் வலிமை தளர்தல் குறித்தது. நீடு
புனிற்று ஆ
ஈன்றணிய பசுக்கள் பால்தரும் காலம் நீடியிருக்கும்
நிலைகுறிக்க நீடு என்றார்; பெருமையுடைய என்றும், கன்றினிடத்து
அன்பு மிக்க என்றும் கொள்ளுதலும் ஆம். மிகவும் ஈன்றணிய
என்றலுமாம்.

     வென்றி விடைக்குலம் - சிவபெருமான்
உமையம்மையாரோடும் எழுந்தருளி வந்து அடியார்க்கு வேண்டும்
வரங்கொடுத்துக் கருணைசெய் நிலையில் ஊர்தியாகிய
விடைத்தேவரின் குலம் என்பது குறிப்பு. வென்றி - வலிய
பாசக்கூட்டத்தின் வன்மைகள் யாவும் சிதைவுபடுத்தி நன்மை
முழுதும் தரும் வெற்றி குறித்தது. "சடையார் தேவர்கடம் பிராட்டி
யுடனே சேரமிசைக், கொள்ளுஞ் சினமால் விடைத்தேவர் குலமன்
றோவிச் சுரபிகுலம்" (22) என்ற சண்டீசநாயனார் புராணத்தின்
கருத்து நோக்குக.

     இனந்தொறும் வெவ்வேறே துன்றி நிறைந்துள - கன்று
இனம் - பசு வகையினங்கள் - எருதுகளின் இனம் என்றிவற்றின்
கூட்டங்கள் வெவ்வேறாகப் பிரித்துத் தொழுவங்களில்
காக்கப்பட்டன. அவ்வவற்றின் தகுதிக்கேற்ப நோய் கடிந்தும்
உணவு தந்தும் பாதுகாக்கப் படுவதனுக்கு இவ்வாறு இனம் பிரித்து
அளிக்கப்படுதல் பெரிதும் துணைசெய்யுமாதலின் முன்னோர்கள்
இம்முறையினைக் கையாண்டனர். இவ்விதியும் மரபும் இந்நாளில்
புறக்கணிக்கப்பட்டும் மறந்துபட்டும் போயினமை வருந்தத்தக்கதாம்.
இவ்வாறு இனம் பிரிக்காமற் காக்கப் படுதலால் நன்மை
பெறாததுமன்றி, உளவாகும் கேடுகளும் பல. துன்றுதல் - கூட்டம்
நெருங்குதலும், நிறைதல் - அக்கூட்டத்தினுள் இனம் நிறைதலும்
குறித்தன.

     ஆனினங்களை இவ்வாறு இனம்பற்றி வெவ்வேறாகப்
பிரித்துக்காத்தல், அவை பல்கிப் பெருகுதலுக்கு இன்றியமையாததாம்
ஆதலின் இது விதியும் மரபும் ஆயிற்று. மேற்பாட்டிற் கூறியபடி
தீமை கடிந்து நல்லுணவு ஊட்டி மேய்த்துக் காத்தலும்
இன்றியமையாததாம். இவற்றின் இன்றியமையாமைபற்றிச்
சண்டீசநாயனார் புராணத்தினுள்ளும் ஆசிரியர் தேற்றம் பெற
எடுத்துக்காட்டி வற்புறுத்துகின்றமை காணலாம்.

     ஊர்களின் பக்கத்துப் புறவில் ஆனிரைகளுக்காக
இருக்கவேண்டிய ஊர் மந்தை, மேய்ச்சற் காடு முதலியவை,
மக்களின் தகாத பேராசையால் விழுங்கப்பட்டுக் கால் நடைகளுக்கு
மேய்ச்சலிடமென்பதே யில்லாமற் போயிற்று. முன்னோர்
ஒழுக்கங்களையும் நல்வாழ்க்கை விதிகளையும் கடந்து மக்கள்
ஒழுகுவதனால் நீர்த்துறைகள் யாவும் அசுத்தமான அழுக்குநீர்
நிலைகளாய் மாறிவிட்டன. இத்தவறுகளைத் திருத்துவதற்கு மக்கள்
கவலைகொள்ளாமையினால் பசுக்கள் பாலும் பயனும் பெருகவரும்
நிலை மாறிற்று. "தோற்கன்று காட்டிக்கறவார்; கறந்தபால் பாற்பட்டா
ருண்ணார்" என்று நீதி நூல்களால் விலக்கப்பட்ட பாவங்கள் நமது
"நாகரிக" நகரங்களில் மலிந்து காணும் காட்சிகளாயின. ஆனிரைகள்
(காமதேனுக்கள்) மக்களின் உடலையும் உயிரையும் காத்து ஈடேற்றக்
கடவுளால், கொடுக்கப்பட்ட சேமவைப்புக்களாம் என்பது உலக
நூல்களாலும், சண்டீச நாயனார் புராணம் முதலிய உண்மை
நூல்களாலும் அறியப்படும் உண்மை. இதனை முற்றிலும் மறந்து
பசுக்களையே தின்று உழலும் பெரும் பாவம் பெருக நிகழும்
இந்நாளில், உலகம் செழித்து உய்வதெங்ஙனமோ? என்பது
அறிஞர்களின் வினா. ஆனிரைகள் செழிக்காது நடையுடற்
கூடுகளாய்த் திரியக்காணும் இந்நாளில் மக்களின் சுகமும்
அதற்குத்தக மெலிந்துகாண்பதாம் என்பது அறிஞர் கண்ட உண்மை.
இவற்றையெல்லாம் சிந்தித்து உலகம் திருந்த ஒழுகி உய்வதாக.