406திருஞானசம்பந்தநாயனார் புராணம்

திறம்பயில் ஞானசம் பந்தன செந்தமிழ் பத்தும்வல்லார்
நிறைந்த வுலகினில் வானவர் கோனொடுங் கூடுவரே.
(11)
திருச்சிற்றம்பலம்
     பதிகக் குறிப்பு :- எவ்விடத்தும் அடியாரிடர் காப்பது. திருநீலகண்டம் என்று ஆனையிட்டருளியது. ஆசிரியர் காட்டியருளியது 2233-ல் பார்க்க. இப்பதிகம் தீவினை வயத்தான் வரும் துன்பங்களெல்லாம் வராமற் காக்கும் பயனுடையது. இதனுள் ஒரு திருப்பாட்டுச் சிதலமாயழிந்தது! நளிர் சுரம் அடியாரை நலியாதபடி ஆணை தந்தருளினர்.
     பதிகப்பாட்டுக் குறிப்பு :- (1) அவ்வினை....அறிவீர் - துன்பானுபவம் முன்னைத் தீவினை வயத்தான் வருவதென்றும், அஃது அனுபவித்தன்றித் தவிர்க்கலாகா தென்றும் கூறும் அறிவுடையீர்களே; உய்வினை - அதனின்றும் உய்தி - தீர்வு - பெறும் வழி; கைவினை - கையினாற் செய்யும் தொண்டு - சரியை முதலாயின;- (2) கா - குளம் - இவை சிவனை நினைந்து சிவன் பொருட்டுச் செய்யும் பதிதருமங்கள். இவ்வாறு உயிர்களின் பொருட்டுச் செய்யப்படுவனவற்றி னின்றும் பிரித்துணரத் தக்கன. "காவளர்த்தும் குளந்தொட்டும்" (1301) என்றதும் ஆண்டுரைத்தவையும் பார்க்க. கா - சோலை; இடுதல் - வைத்துக் காத்தல்; தொடுதல் - தோண்டுதல். இருபொழுதும் - வழிபடும் காலமுறை; பூவினைக் கொய்து - தாமே கொய்தல் முறை; கவினை இடுதல் - பூக்கொய்தற்கு - (3) போகங்கள் - பெண் போகம்; முலைத்தடம் - முலையாகிய தடம்; தடம் - உயர்வும் அகலமுமாம்; மற்றெவையும் - வேறு எல்லா வகையான போகங்கள்; "மடவாரோடும் பொருந்தணைமேல் வரும்பயனைப் போக மாற்றிப் பொதுநீக்கித் தனைநினைய வல்லார்க்கென்றும், பெருந்துணையை" (அரசு - தாண் - கோயில்). விலைத்தலை ஆவணம் கொண்டு - ஆவணத்தால் விலைப்படுத்தப்பெற்று. விலை செய்தல் - அப் போகங்களைத் தமது சிவபோகத்துக்கா விலை கொள்ளுதல். சிலைத்து - சினந்து.- (4) திண்ணிய - ஏனையோர்க்குத் திண்மையாகிய; - (5) கிற்றெமை ஆட்கொண்டு - வலிமையால் எம்மை ஆளாகக் கொண்டும்; சொற்றுணை வாழ்க்கை - சொல்லளவாய்க் கழிகின்ற வாழ்க்கை! "சொல்லாய்க் கழிகின்ற தறிந்தடியே னுயப் போவதோர்சூழல்" (நம்பி -நெல் வாயிலரத் துறை - 1); துணை - அளவு; (6) வற்புறுத்தி - தவவலிமை பெற்றதாக்கி; பறித்தமலர் - தாமே பறித்த; "பூவினைக்கொய்து" (2); சிறப்பில் இத்தீவினை - சிறப்பினை இல்லையாகச் செய்யும்; சிறப்பிலி - சிறப்பில்லாதது - சிறப்பிலியாகிய தீவினை என்றலுமாம்.- (8) கரு - இனிப் பிறவிக்கு வித்தாகும் வினைகள். வாழ்க்கை கடிதல் - துறவு மேற்கொள்ளுதல். திருவிலித் தீவினை - சிவனடிமைத் திறத்தில் ஆகாவண்ணம் செய்யும் தீவினை. "உருவிலான் பெருமையை யுளங்கொ ளாதவத் திருவிலார்" (தேவா - பைஞ்).- (9) தோற்றம் - தொடக்கம்.- (10) இருதலைப் போகம் - இம்மை மறுமையின்பங்கள். பற்று - உலகப்பற்று; இல்லறப் பற்று.- (11) பிறந்தபிறவி - பெறுதற்கரிதாக மக்களுட் பிறந்த பிறப்பு. இறத்த பிறவி - துறந்தார். "செத்தாரைப் போலே திரி"; நிறைந்தவுலகு - சிவனுலகு.
     தலவிசேடம் : - திருக்கொடிமாடச் செங்குன்றூர் (திருச்செங்கோடு) - இது கொங்கு நாட்டுப் பாடல் பெற்ற தலங்கள் ஏழனுள் நான்காவது. அந்நாட்டில் காவிரிக்கு வடபுறம் (கீழ்புறம்) உள்ளது இஃது ஒன்றே; ஏனையவை காவிரிக்குத் தென்புறம் உள்ளன. திருச்செங்கோடு என்று விளக்கமாய் வழங்கப்படுவது மலை