"குண்டிகை தகர்த்துப் பாயும் பீறியோர் குரத்தி யோடப் பண்டிதர் பாழி நின்றுங் கழுதைமேற் படர்வார் தம்பின் ஒண்டொடி யியக்கி யாரு முறையிட்டுப் புலம்பி யோடக் கண்டன; " மென்று சொன்னார் கையறு கவலை யுற்றார்; | 638 | (இ-ள்) குண்டிகை...ஓட-கமண்டலத்தை உடைத்துப் பாயினையுங் கிழித்து ஒரு பெண் குரு ஓடிடவும்; பண்டிதர்...தம்பின்-பண்டிதர்களாகிய சமண முனிவர்கள் தமது குகைகளினின்றும் கழுதைகளினமேலேறிச் செல்வாராகிவும், அவர்களின் பின்னே; ஒண்டொடி...கண்டனம்-ஒள்ளியதொடிகளையணிந்த தவப் பெண்களும் ஊளையிட்டு அழுது ஓடவும் கண்டோம்: என்று...உற்றார்-என கவலைகொண்டார்களாகிச் சொன்னார்கள். இம்மூன்று பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டன. (வி-ரை) குண்டிகை தகர்த்து - கையில் மந்திரித்த நீருடைய குண்டிகை கொண்டிருத்தல் சமண குருமார் வழக்கு. அதைத் தகர்த்தல் - அச்சமயப் பற்றுக்கோடு கைவிட்டமை குறிப்பு: பாயும் பீறி - பாய் - மரவுரியும், உடையாகக் கொள்ளும் தடுக்கும்; பீறுதல் - கிழித்தெறிதல்; தகர்த்துப் பீறி ஓடுதல் - தம் சமயச்சார்புகளைத் தாமே விட்டு இடம் விட்டு நீங்குதல் குறித்தது; "பாய்க ளிழப்பார் பறிதலையர்" (தண்டியடிகள்-22). குரத்தி - பெண்குரு; பெண்துறவி; குருவின் மனைவி என்பாருமுண்டு. பண்டிதர் - கலைவல்ல குருமார்; இவர் குருமார்களுள் ஆண்மக்கள்; பாழி - சமண குருமார் தங்கும் குகை; பாழிநின்றும் கழுதை மேற்படர்தல் - தமதிருக்கையை விட்டுத் தோல்வியும் பரிபவமும் உற்று நீங்குதல்; கழுதை - மூதேவியின் ஊர்தி; இழிபுக் குறிப்புமாம்; "கழுதைமேல் வைத்து ஊர்வலஞ் செய்விப்போம்" என்று வஞ்சினங் கூறும் நாட்டு வழக்கும் காண்க. இயக்கியார் - தவமகளிர்; இயக்கத் தேவதையுமாம். இயக்கர் - கானநூல் முதலிய விஞ்சை வல்லோர்; இப்பொருளில் கழுதை மேற்படரும் பண்டிதர்களின் பின்னே அவர்கள் பசப்பிப் பரப்பிய மயக்கக் கலைகளும் ஓடின என்பதாம்; இயக்கி - தரும தேவதை என்பர் முன் உரைகாரர்; அதன் பொருத்தம் ஆராய்க. உளையிட்டுப் புலம்பி - உளையிடல் - தீயொலி செய்தல்; ஓட - ஓட - நீங்குதலின் விரைவுக் குறிப்பு: கவலையுற்றாராகிச் சொன்னார் - என்க. உற்றார் - உற்று - முற்றெச்சம்; வினைமுற்றாகவே கொண்டுரைப்பினுமிழுக்கில்லை; சொன்னார்; கவலையும் உற்றனர்: கையறுகவலை - கையறும்படி நேர்வதனாற் போதும் கவலை; கையறுதல் - செயலறல். தம்மின் - படர்வார் - உழைவிட்டு - என்பனவும் பாடங்கள். |
|
|