பாடல் எண் :2546
திருநிலவு மணிமுத்தின் சிவிகையின்மேற் சேவித்து
பிள்ளையார் வருநிலவு தருமதிபோல் வளரொளிவெண் குடைநிழற்றப்,
மதுரையை பெருகொளிய திருநீற்றுத் தொண்டர்குழாம் பெருகிவர
அணைதல் அருள்பெருக வருஞானத் தமுதுண்டா ரணைகின்றார்;
648
(இ-ள்) திருநிலவு...குடை நிழற்ற - சிவனது அருட் செல்வம் பொருந்திய ஆகிய முத்துச் சிவிகையின் மேலே நின்று சேவித்துக்கொண்டு வருகின்ற நிலவு பொழிவும் மதிபோல வளரும் ஒளியினை உடைய முத்து வெண்குடை நிழலைச் செய்யவும்; பெருகொளிய...வர - பெருகும் ஒளியினையுடைய திருநீற்றுத் தொண்டர் கூட்டம் பெருகிச் சூழ்ந்து வரவும்; அருள்பெருக...அணைகின்றார் - திரு அருள் பெருகும்படி வந்தவதரித்த சிவஞானத் தமுதுண்ட பிள்ளையார் மதுரையினை வந்தணைகின்றாராயினார்.
(வி-ரை) இப்பாட்டு "மதுரைத் தொன்னகர் வந்தணைகின்றார்"(2528) என்று முன்கூறி விடுத்த இடத்தின் தொடர்ச்சி; செய்யுள் யாப்பும் அதுவே யாகித் தொடர்புபட முன் நிறுத்திய, கொச்சகக் கலிப்பாவினாலே மீண்டும் யாத்த நயமும் காண்க. இடைப்பட்ட எல்லாம் வேறாகிய அறுசீர் விருத்தமாதலும் காண்க.
திருநிலவு - திரு - சிவனது அருட்பெருகும் திரு; சிவனருளால் வந்த திரு; மணி - அழகிய; மணியாகிய என்றலுமாம்.
சிவிகையின்மேற் சேவித்து வரும் மதிபோல் - குடைநிழற்ற - சிவிகையின் மேல் கவித்த முத்துக்குடை ஒரு மதிபோன்றிருந்தது; மதி அங்கு நிற்கும் இயைபு என்னை? எனின் மதியாதலின் மேனின்று சேவித்தது போல நின்றது என்பதாம்; குடைக்கு மதி மெய்பற்றி வந்த உவமம்; சேவித்து வரும் மதி என்றது தற்குறிப்பேற்றம்; மதிமுதல் வானவர் பிள்ளையாரைச் சேவித்து வரத்தக்கார் என்பதும் உட்குறிப்பு; 137, 1395, வெள் - சருக் - 34 முதலியவை பார்க்க. "சதுரானனனுஞ் சக்ராயுதனும், சந்த்ராதவரும் இந்த்ராதியரும், மதுரா புரிவா தறிவா மெனமேமல் வரவந்தனன் வைதிக வாரணமே"(தக்கயா); மதி - பாண்டியர் குல முதல்வன் என்பதும் குறிப்பு.
பெருகுஒளிய திருநீறு - இதுவரை "பூதி சாதன விளக்கம் போற்றல் பெறா தொழிந்த" நிலை மாறி, இனி அத்திருநீற்றின் ஒளி பாண்டிய நாட்டிற் பெருக நிகழ்வது குறிப்பு; ஏனைய ஒளிகள் யாவும் குறைந்தொழிய, அவ்வாறு குறைந்தழியாது நித்தமாய்ப் பெருகும் ஒளியாகிய திருநீறு என்ற கருத்தும் காண்க; ஞானம் பெருகும் ஒளி என்றலும் ஆம்.
பெருகிவர - அங்கங்கும் தொண்டர் கூட்டம் வந்து சார்ந்து பெருக. இனிப் பாண்டி நாட்டிற் பெருகி வரும்படி என்றலுமாம்.
வளரொளி வெண்குடை போல் நிழற்ற - அம்முத்தின் ஒளியே போலப் பெருகொளிய திருநீற்றுத் தொண்டர் குழாம் புடைசூழ என்ற நயமும் காண்க; வெண்ணீற்றொளி போற்றி நின்று"(2214) என்ற கருத்தைச் சிந்திக்க.
அருள்பெருக - அமுதுண்டார் - உலகில் சிவனருள் பெருகும்படி தாம் அமுதுண்டவர்; ஏனையோர் அமுதுண்டால் அது அவ்வவர்க்கே சில நலந் தந்தொழிய இவர் அமுதுண்டமை உலகில் யாவர்க்கும் சிவனருள் பெருகச் செய்தது; "திருத்தோணியமர்ந்த பிரானருள் பெருக"(1924)
வரும் - உலகில் வந்தவதரித்த; அருள்பெருக வரும் - சிவனருள் பெருகிப் பாண்டி நாட்டில் நிகழும் பொருட்டுவரும் என்ற குறிப்பும் காண்க.
வளர்ஞானத்தமுது - என்பதும் பாடம்.