துந்துபிகண் முதலாய தூரியங்கள் கிளராமே அந்தணரா மாதவர்க ளாயிரமா மறையெடுப்ப, வந்தெழுமங் கலநாத மாதிரமுட் படமுழங்கச் செந்தமிழ்மா ருதமெதிர்கொண் டெம்மருங்குஞ் சேவிப்ப, | 649 | (இ-ள்) துந்துபிகள்...மறை எடுப்ப - துந்துபி முதலாகிய வாத்தியங்களின் ஓசை மேலெழாமல் அந்தணர்களாகிய மறை முனிவர்கள் அனந்தமாகிய வேதங்களை எடுத்தியம்பவும்; வந்தெழும்...முழங்க - வந்து எழுகின்ற மங்கல நாதங்கள் எல்லாத் திசைகளும் உட்பட முழங்கவும்; செந்தமிழ்...சேவிப்ப - செந்தமிழுடன் பொருந்தி வரும் தென்றற் காற்றும் எதிர்கொண்டு வரவேற்று எப்பக்கமும் சேவிப்பவும், (வி-ரை) தூரியங்கள் கிளராமே மறை எடுப்ப - தூரியங்கள் - மங்கலம் முழக்கும் பல வகைப் பெருவாத்தியங்கள்; கிளராமே - ஓசை மேலோங்காத படி; உச்சசுரத்தில் மறை முழுக்குதலால் தூரியங்களின் ஓசை கீழ்ப்பட்டன என்பதாம்; ஆயிரம் மாமறைகள் - ஆயிரம் - மிகுதி குறித்தது; தூரியங்கள் கிளராமைக்குக் காரணம் காட்டியபடி; எடுப்ப - இனி அந்நாட்டில் எடுக்கும் பொருட்டு என்ற குறிப்பும், மறையொலியின் மிகுதிக் குறிப்புமாம். மங்கல நாதம் - மங்கல ஓசை முழக்கும் சங்கு, முரசம் முதலியவற்றின் நாதங்கள்; மாதிரம் - திக்குக்கள்; உட்படுதல் - நாதத்தின் பரப்பினால் திக்குக்களும் அதனுட்படும்படி விரிந்து செல்லுதல். செந்தமிழ்மாருதம் எம்மருங்கும் சேவிப்ப - செந்தமிழ் மாருதம் - செந்தமிழுடன் பொருந்தி வருகின்ற தென்றல்; தமிழுடன் பொருந்துதலாவது - செந்தமிழ் முனிவனது இருக்கையாகிய பொதிகையின்றும் பிறந்து வருதல். "பிறந்த தெங்கள் பிரான் மலயத்திடை...மறம் பயின்றதெங் கோதமிழ் மாருதம்" (313) என்றதும் ஆண்டுரைத்தவையும் பார்க்க; தமிழ் மலையிற் பிறந்து தமிழ் நாட்டிற் பயின்று தமிழுடன் விரவி வருதலால் செந்தமிழ் ஞானசம்பந்தரைச் சேவிக்க வந்தது என்ற நயமும் காண்க; செந்தமிழ் ஞானத்தமிழைச் சேவித்தல் முறையாதலும் குறிப்பு. எம்மருங்கும் - மாருதம் தென்றற் காற்றாகலின் தெற்கு நின்று வடக்கு நோக்கிப் பிள்ளையாரையும் உடன்வரும் நற்றவர் கூட்டத்தையும் எல்லாப் பக்கமும் சூழ்ந்து கொண்டு சேவித்தது. மாருதம் - பாண்டி நாட்டுக் குரித்தாதலும் குறிப்பு. எதிர்கொண்டு - எதிர் வரவேற்றல்போல; மாருதம் எதிர்கொண்டு சேவிப்ப என்றது தற்குறிபற்றம். எதிர் கொள்ளுதல் - வடக்கினின்றும் தெற்கு நோக்கி மதுரைக்கு வருவாரைத், தெற்கினின்றும் வடக்கு நோக்கிச் சென்று சூழும நிலை உண்மையில் எதிர் கொண்டதாம் என்க. |
|
|