இப்பரி சணையுஞ் சண்பையர் பெருமா னெழுந்தரு ளும்பொழு திசைக்கும் ஒப்பினித் திலப்பொற் றனிப்பெருங்காளமுல குய்ய வொலித்தெழு மோசை செப்பரும் பெருமைக் குலச்சிறை யார்தஞ் செவிநிறை யமுதெனத்தேக்க அப்பொழு தறிந்து தலத்தின்மேற் பணிந்தே யளப்பருங் களிப்பினரானார்.
| 656 | (இ-ள்) இப்பரிசு...எழுந்தருளும்பொழுது - இவ்வாறாகிய பரிசுகளுடன் அணைகின்ற சீகாழித் தலைவர் எழுந்தருளிவரும் அப்பொழுது; இசைக்கும்...ஓசை - இசைக்கின்ற ஒப்பில்லாத முத்துக்களாலாகிய அழகிய தனிக்காளமானவை உலகமுய்ய எடுத்துச் சொல்லுதலால் எழுகின்ற ஓசையானது; செப்பரும்...தேக்க - சொல்லுதற்கரிதாகிய பெருமையுடைய குலச்சிறை நாயனாரது திருச்செவிகளில் நிறையும் அமுதம் போலப் பெருகியிட; அப்பொழுது...ஆனார் - அப்பொழுது அறிந்து நிலத்தின்மேல் மேனிபட வீழ்ந்து பணிந்தே அளத்தற்கரிய மகிழ்ச்சியையுடையவராயினார். (வி-ரை) இப்பரிசு - முன் ஐந்து பாட்டுக்களிலும் கூறிய தன்மை பொருந்த; இப்பரிசு - அணையும் பெருமான் - எழுந்தருளும்பொழுது என்க. எழுந்தருளும் பொழுது - அவர் என்ற எழுவாய் வருவித்துக் கொள்க; அணையும் - அணைகின்ற என எச்சமாக உரைக்க. ஒப்பில்...ஓசை - காளம் - எக்காளம் என்பர்; இதுமிக உரத்த ஓசையுடன் பிள்ளையாரது திருநாமத்தை எடுத்துக்கூறி "இவர் உலகுய்ய வந்தார்" என்ற பொருள்பட இசைப்பது; நெடுந்தூரத்துள்ளோரும் செவிப்புலப்படக் கேட்க உள்ளது; உருவத்தானும் பெரிது; ஆதலின் இதனை வேறு பிரித்துத் தனிப்பெருங் காளம் என்ற சிறப்படைமொழி தந்தோதினர்; "முன் தனிக்காளம் வைய மேழுடன் மறைகளு நிறைதவத் தோரு, முய்ய ஞானசம்பந்தன் வந்தான்" (2119) என்றதற் கேற்ப ஈண்டும் உலகுய்ய ஒலித்து எழும் ஓசை என்றார்; உலகுய்ய ஓசை எழுதலாவது அதனைக்கேட்டு மக்கள் வந்தணைந்து உய்தி பெறுதல். செவிநிறை அமுதுஎன - பயன்பற்றி வந்த உவமை; தேக்குதல் - நிறைதல்; ஓசை - தேக்க - என்க; அப்பொழுது - அப்பொழுதே ஏகாரம் தொக்கது; தலத்தின் மேற் பணிந்தே - கண்ணாற் காணாராயினும் ஓசை கேட்ட பொழுதே நினைவு பிள்ளையார்பாலும் திருக்கூட்டத்தின் பாலும் சென்று சேர கேக் கண்ணாற் கண்டு நிலத்தின் வீழ்ந்து வணங்கினார். "நெஞ்சினி னிறைந்த வார்வமுன் செல்லக் கண்டு"(2553) என்பது காண்க; கேட்ட பொழுதே அன்பு பெருகும் நிகழ்ச்சியுண்டாதல் தலையன்பின்றிறம். தூரத்தே கண்டபோது வணங்குதல் மேற்பாட்டிற் கூறுவார்; "வேற்றவே யடியா ரடிமிசை வீழும் விருப்பினன்"(தேவா) என்று இவரது விருப்பமாகிய திருவுள்ளநிலைபற்றிப் பிள்ளையார் திருவாக்காற் பாராட்டப்பட்டதும், இவர் தம் புராணத் துரைத்தனவும் பார்க்க. அறிந்து அப்பொழுதே பணிந்து என்க. இப்பரிசு - தூரியங்கள் கிளராமே மறைகள் எடுப்பவும்; தென்றல் எதிர்கொண்டு சேவிப்பவும்(2547); அமண் பாவச்சேனை இரிந்தோட மண்ணும் விண்ணும் செய்த புண்ணியப் படை எழுச்சி போலப் பொலியவும்(2548); அமண் மாசு கழுவக் கங்கை அணைந்ததெனும் கவின் காட்டவும்(2549); அமண வல்லிருள் போய்மாய்வதற்கு அண்டமெலாம் பரந்த ஞானமணி விளக்கு எழுந்து வருவது எனும் நலம் படைப்பவும் (2550); சைவம் ஓங்கப் பரசமய கோளரிவந்தான் என்று சின்னமெல்லாம் பணிமாறவும்(2551); ஆக இப்பரிசு என்று இவ்வாறு பாட்டுக்களைத் தொடர்புபடுத்திக் கொள்க. இவ்வாறன்றிச் சேவிப்ப அணைகின்றார்; பொலிவெய்த அணைகின்றார்; கவின்காட்ட அணைகின்றார்; நலம்படைப்ப அணைகின்றார் என்று தனித்தனி முடித்தலும், சேவிப்ப-எய்த-காட்ட-படைப்ப-பணிமாற அணைகின்றார் என்று முன் பாட்டுடன் கூட்டி முடித்தமாம். அணையும் - அணைகின்றார் என முன் நிகழ்காலத்தாற் கூறினார்; பிள்ளையாரது அணைதலாகிய செயலின் பயன் அன்று மட்டுமன்றி முக்காலமுந் தோன்று மியற்கை யுடையதாதலின் மீண்டும் நிகழ்காலத்துப் பொருணிலைமையுடைய செய்யு மென்னும்வாய்பாட்டினல் அணையும் என்றார்; "முந்நிலைக் காலமுந் தோன்று மியற்கை, யெம்முறைச் சொல்லு நிகழுங் காலத்து, மெய்ந்நிலைப் பொதுச்சொற் கிளத்தல் வேண்டும்" (தொல் - சொல் - வினை 43) என்பதிலக்கணம்; இது முக்காலமுந் தோன்று மியல்பினை, இக்கருத்துப் பற்றியே பின்னர்க் குலச்சிறையாரது திருவாக்கில் விரித்தல் (2557) காண்க; அன்று பிள்ளையாரது அணைதலே இன்றும் சைவம நிகழ்வதற்குக் காரணமா யுள்ளது என்பது தேற்றம். |
|
|