பாடல் எண் :2555
சிரபுரச் செல்வ ரவருரை கேட்டுத்
திருமுகத் தாமரை மலர்ந்து
விரவொளி முத்தின் சிவிகைநின் றிழிந்து
விரைந்துசென் றவர்தமை யணைந்து
கரகம லங்கள் பற்றியே யெடுப்பக்,
கைதொழு தவருமுன் னிற்ப,
வரமிகு தவத்தா லவரையே நோக்கி
வள்ளலார் மமுரவாக் களிப்பார்,
657
(இ-ள்) சிரபுரச் செல்வர்...அணைந்து - சீகாழிச் செல்வராகிய பிள்ளையார் அவர்களது சொற்களைக் கேட்டுத், திருமுகமாகிய தாமரை மலர்ந்து, பொருந்திய ஒளியினையுடைய முத்துச் சிவிகையினின்றும் இறங்கி விரைவுடன் சென்று அவரை அணைந்து; கரகமலங்கள்...எடுப்ப - கைகளாகிய தாமரைகளாற் பற்றியே மேல் எடுப்ப; அவரும் கைதொழுது முன்நிற்ப - அக் குலச்சிறையாரும் கைதொழுது திரு முன்பு நிற்க; வரமிகு...அளிப்பார் - வரம்மிகும் செவ்வியினின்ற அவரது தவங் காரணமாக அவரையே நோக்கி வள்ளலாராகிய பிள்ளையார் இனிய திருவாக்கினை அளிப்பாராகி,
(வி-ரை) திருமுகத்தாமரை மலர்ந்து - முகமிக மலர்ந்து; மலர்ந்து என்பதற்கேற்ப முகத்தைத் தாமரை என்று உருவதித்தார். முகமலர்தல் - அகமலர்ச்சி காட்டும் குறிப்பாதலின் அகமும் மலர்ந்து என்பதும் உடன் கூறியதாயிற்று; முக மலர்தர் என்ற வழக்கும் காண்க; ஈண்டுக் கருணை கூர்ந்து என்க.
சிவிகை நின்றிழிந்து விரைந்து சென்று அவர்தமை அணைந்து - தாம் எழுந்தருளியிருக்கும் இடத்தில் வந்து வணங்க வேண்டிய அவர், நெடுந்தூரத்தே வணங்கியபடி கிடத்தலின் அவரிருக்குமிடந்தேடி வந்தணைந்தனர் குருநாதராகிய பிள்ளையார்; இது குலச்சிறையாரது வணக்கத்தின் அழுத்தத்தாற் போந்த பயன் என்க; திருமறைக்காட்டினின்று பாண்டி நாட்டினுக்கும் மதுரையம்பதிக்கும் பிள்ளையாரை வந்தணையப் பண்ணியது போலச், சிவிகையினின்றும் இழிந்து மந்திரியார் இருந்து வணங்கிக்கிடந்த இடத்துக்கும் எழுந்தருருளியணையச் செய்தது அவர்களது திருத்தொண்டின் உறைப்பாகும்; அப்பூதி நாயனார் திருமனைக் கடையினில் அரசுகள் அவரைத் தேடிச் சென்றருளுமாறு செய்தது அவரது அழுந்திய நினைவேயாம் என்ற வரலாறும் இங்கு நினைவு கூர்தற்பாலது; "குழு மாகிய பரசமயத்திடைத் தொண்டு, வாழு நீர்மையீருமைக்காண வந்தனம்" (2571) என்று பிள்ளையார் அருளுவதனையும் காண்க; விரைந்து சென்று - அவரை எடுத்து அருளும் கருணையின் விரைவு.
கரகமலங்கள் பற்றியே எடுப்ப - கரகமலங்கள் - கைகளாகிய தாமரைகள்; "திருமுகத்தாமரை, "என்றதற்கேற்பக் கைகளையும் தாமரைகள் என்றார்; கரகமலங்களாற் பற்றியே என்ப; "இன்ன ருட்பெருஞ் சிறப்பொடுந் திருக்கையா லெடுத்தார்"(2569); "இருவரையுந் திருக்கையா லெடுத்தருளி"(2629) என்று பின்னர் வருவனவும் காண்க; குலச்சிறையாரது கரகமலங்களைப்பற்றி என்று இரட்டுற மொழிந்து கொள்ளவும் நின்றது;
எடுப்ப - "எழுக" என்று திருவாக்கினாலருளாது கைகளால் எடுத்தல் "அவர் தாம் படியினின் றெழாவகை கண்டு" தொண்டர்கள் அறிவித்தபடி தாமும் கண்டமையானும், எடுத்தாலன்றி எழார் என்று கண்டருளினமையானுமாம்; இது மந்திரியாரது திருத்தொண்டினது உறைப்பும், மந்திரத் தொழில் வன்னையுமாம்; என்னை? 'எழுக' என்ற சொல்லின் அருளளவினன்றிச் செயலினானும் மேல் எடுக்கப்பெறும் அருளைப் பெறும் துணை என்க. எங்கள் நாடு கீழே கிடக்கின்றது; அதனை மேல் எடுத்தருளல் வேண்டுமென்று வாக்கினாற் கூறாது தாம் வணங்கிச் செயலால் விண்ணப்பித்தனர் அமைச்சர் பெருமான்; அதற்கு அவ்வாறேயாகுக என்று பிள்ளையார் தமது வாக்கினாற் கூறாது கைகளால் எடுத்த செயலால் அருள் புரிந்தனர்; எனவே பாண்டிநாட்டினை ஈண்டு வினைப்பரசமயக் குழிநின்றும் மேல் எடுக்கும் அருட்செயல் அதன் மந்திரியாரை எடுத்த செயலானே ஈண்டே நிகழ்ந்துவிட்டதென்க; பின்னர் நிகழ்பவை எல்லாம் இதன் தொடர்ச்சியாகிய சடங்குகளே என்பதாம்; எடுப்ப என்ப து "என்னையிப் பவத்திற் சேரா வகையெடுத்து" (சித்தி - சுபக் - பாயி 2) என்புழிப்போலப் பரசமயத் தீமை காத்து எடுத்த குறிப்புருவகப் பொருளும்பட நின்றது.
கைதொழுது அவரும் முன் நிற்ப - பிள்ளையார் கரகமலங்கள் பற்றி எடுப்ப எழுந்து அவர் திருமுன்பு தொழுத படியே நின்றனர். அவரது அருட் செயவினைப்பெற்ற வண்ணமே அருட்டிருவாக்கினையும் பெறுதலை வேண்டி என்க; அக்கருத்தினை அறிந்த வள்ளலாரும் அவ்வாறே தாம் முற்பட்டு மதுர வாக்களித்தல் மேற்கூறப் படுதல் காண்க.
வரமிகு தவத்தால் - வாக்களிப்பார் - வரம் பெறுதற்கு உரியதாய் மிகுந்து பக்குவ காலம் வந்த தவம் காரணமாக - வரைம் தரும் வாக்களிக்கப் பெற்றார் என்க. "தமிழ் நாட்டுத் தரைசெய் தவப்பயன் விளங்க"(2551) என்றதும், மேல் "தம் பெருந்தவத்தின் பயனனையார்க்கு"(2570) என்பனவும் கருதுக; வரமிகு தவமாவது வரம் பெறுதற் கணித்தாக மிகுதி பெற்ற தவம்.
வள்ளலார்--அளிப்பார் - வள்ளலாராதலின் அளிசெய்து தாமே முற்பட வாக்கருளினார் என்பது.
அவ்வுரை - இவருரை - என்பனவும் பாடங்கள்.