பாடல் எண் :2598
"மந்தி ரச்செயல் வாய்த்தில; மற்றினிச் செய்யும்
புந்தி யாவதிங் கிது"வெனப் பொதிதழல் கொடுபுக்
கந்தண் மாதவர் திருமடப் புறத்தய லிருள்போல்
வந்து தந்தொழில் புரிந்தனர் வஞ்சனை மனத்தோர்
700
(இ-ள்) மந்திரச் செயல்....இது என - மந்திரத்தின் செய்கை குறித்த பயன் தரவில்லை; மற்று இனிமேல் தெரிந்து செய்யும் ஆலோசனையாவது இதுவே யாகும் என்று துணிந்து; பொதிதழல் கொடுபுக்கு - பொதியும் தழலினை எடுத்துக் கொண்டு புகுந்து; அந்தண்...வந்து - அழகிய தண்மையுடைய மாதவர்களாகிய சினடியார்கள் துயில்கின்ற திருமடத்தின் புறத்தின் பக்கத்தில்; வஞ்சனை மனத்தோர் - வஞ்சனை நிறைந்த மனத்தையுடைய அவ்வமணர்கள்; இருள்போல் வந்து தம் தொழில்புரிந்தனர்; இருள் போல் வந்து சேர்ந்து தமது மனங்கொண்ட தீத் தொழிலைச் செய்தனர்.
(வி-ரை) "மந்திரச் செயல்....இது" என - சமணர் மனத்தினுள் எண்ணமிட்டுத் துணிந்த நிலை.
செய்யும் புந்தி ஆவது இங்கு இது - புந்தி - புத்தி தத்துவத்தின் றொழில்; இதுவென - புத்தி தத்துவம் இது செயத்தக்கது என நிச்சயித்தும், இதனை நான் செய்வேன் என்று அகங்காரம் பல்கால் எழுந்திருந்தும், செயல்புரியும்; "அந்தமனம் புத்தியுட னாங் காரஞ் - சிந்தையிவை, பற்றியது நிச்சயித்துப் பல்கா லெழுந்திருந்தங், குற்றது சிந் திக்கு முணர்" (உண்மை விளக்கம் - 16) என்று அந்தக்கரணங்களின் தொழில்களாகிய இவற்றின் றன்மைகளை ஞான சாத்திரம் பேசுதல் காண்க.
இது என - இது என்று துணிந்து; அடியார்பால் வரும் தீமையாதலின் அதனை இன்னதென்று கூறாது அவர்கள் துணிந்து செய்த செயலாற் கருதவைத்த ஆசிரியரது மரபு காண்க; பின்னரும் "பொதிதழல் கொடுபுக்குத் தந்தொழில் புரிந்தனர்" என மறைவுபடக் கூறிய மரபும் காண்க; "தான்முன் நினைத்த அப்பரிசே" (481); "பாதகனுந் தன்கருத்தே முற்றுவித்தான்"(647).
பொதிதழல் - வெளிப்படாது மறைத்த தழல்; கூரையிற் பொதியும் தழல் என்றலுமாம்; தழலை உள்ளே வைத்துப் பின்னர்த் தானே வெளிப்படும் தீக்கந்தகம் (Phoshours) போன்ற நெருப்புப் பொருள்கள் என்றலுமாம். சமணர் இத்தகைய கலை ஞானங்களில் வல்லவர் என்பர்; பின்னர், "மருவு வித்தவத் தொழில்வெளிப்படுதலும்"(2599) என்பதும் இக்குறிப்புத் தருவது.
அந்தண் மாதவர் - அழகிய தட்பமாவது - "யான் பெற்ற வின்பம் பெறுக இவ்வையகம்"(திருமந்திரம்); "வையக முந்துயர் தீர்கவே"(தேவாரம்); "மகவெனப் பல்லுயி ரனைத்தையு மொக்கப் பார்க்குஞ், செல்வக் கடவுட் டொண்டர்" (திருவிடை மருதூர் மும்மணிக் கோவை 7) முதலிய திருவாக்குக்களாலறியப்படும்; மாதவர் - திருமடம் - "மாதவர் துயிலும் இத்திருமடம்"(2600); இத்திருமடம் அமைச்சனார் பிள்ளையார் தங்குதற்காக நிறுவுவித்தது; (2574).
திருமடப்புறத்து அயல் - வந்து - காவல்பற்றித் திருமடத்தின் முன்பேயாயினும் உள்ளேயாயினும் புகுத இயலாதவர்களாகிப் புறத்தில் ஒருபக்கமாகக் சுரந்து வந்து; "திருமடப் புறச் சுற்றினில்"(2599); வந்து - தாம் இருந்து மந்திரத் தொழில் செய்த இடத்தினின்றும் வந்து.
தந்தொழில் புரிந்தனர் - தொழில் - "தொழில் விளைத்தால்"(2586) என்று கூறிய குறிப்புப்படியே செயலிற் செய்தனர்.
வஞ்சனை மனத்தோ ராதலின் புரிந்தனர் என்க; பிறரை வஞ்சித்துத் தாம் பிழைக்கும் வழி தேடுவோர் வஞ்சகர் எனப்படுவர். இங்கு அரசனை வஞ்சித்த செயலும் வந்த அந்தணர்களைத் தீத்தொழில் முயற்சியாலே வஞ்சித்து அச்சுறுத்தி நகரினை விட்டு நீங்கச் செய்தலும் உடைய மனதுடையவர். இருள் போல் - ஒளியை மறைத்தலால் இருள் என்றார். "இருட்கிருளென" (2877); "இருட்குழாம்"(1349) என இவர்களை இருளுக்கே உவமித்தல் கருதுக; "ஞானத்தின், கண்ணை மறைத்த கடியதொழி லாணவம்" (போற்றிப் பஃறொடை) "இருண் மலநிலை" என்றபடி வஞ்சத்தால் ஞானத்தை மறைத்துவிட முயன்றாராதலின் இவ்வாறு ஆசிரியர் ஆணை தந்தருளினர்; ஆணவம் - வஞ்சம் - முதலியன கருநிறமுடையன வென்பது மரபு.