பாடல் எண் :2650
கண்டவப் பொழுதே வேந்தன் கையெடுத் தெய்த நோக்கித்
தண்டுணர் முடியின் பாங்கர்த் தமனியப் பீடங் காட்ட
வண்டமிழ் விரகர் மேவி யதன்மிசை யிருந்தார்; மாயை
கொண்டவல் லமண ரெல்லாங் குறிப்பினு ளச்சங் கொண்டார்.
752
(இ-ள்) கண்ட....நோக்கி - கண்ட அப்போதே அரசன் கைகளை எடுத்துத் தூக்கி வழிபடும் பண்பு பொருந்தும்படி நோக்கி; தண்துணர்...காட்ட - குளிர்ந்த மலர்களையுடைய தனது முடியின் பக்கத்தில் இடப்பட்டிருந்த பீடத்தில் எழுந்தருளும் படி கைகளைக் காட்ட; வண்தமிழ்...இருந்தார் - வண்மையுடைய தமிழ் விரகராகிய பிள்ளையார் அதன்மேல் எழுந்தருளி அமர்ந்தருளினர்; மாயை...கொண்டார் - மாயங்களைக் கொண்ட வன்மை யுடைய அமணர்கள் எல்லாரும் குறிப்பினுள்ளே பயங் கொண்டார்கள்.
(வி-ரை) கண்ட அப்பொழுதே...நோக்கி - கண்ட என்றது முன்னர் விருப்பொடு கண்ட காட்சி.
கண்ட - முன்பாட்டில் "கண்டான்" என்றபடி கண்ட; அப்பொழுதே - நோக்கி என்க; அக்காட்சியோடு உடனிகழ்ச்சியாய் நோக்கம் நிகழ்ந்தது; இங்கு நோக்கம் என்பது வழிபடும் பண்பு காட்டும் பார்வை குறித்தது; "கண்ணிற் சொலிச்செவியினோக்கு மிறைமாட்சி "என்புழிப்போலக் கொள்க; நோக்குதல் - ஒரு குறிப்பினொடு பார்த்தல்; எய்த - வழிபடும் பண்பு பொருந்த; வரவேற்கும் தன்மை பொருந்த என்றலுமாம்;
அப்பொழுதே கை எடுத்து - நோக்கி - பீடம் காட்ட- கை எடுத்தலும், நோக்குதலும், பீடம் காட்டுதலும் ஒன்றன்பின் ஒன்றாய் எழும் மன நிகழ்ச்சிகளின் வழி நிகழினும் விரைவு பற்றி ஒருங்கே நிகழ்ந்தனவாகக் காணப்பட்டன என்பது; கை எடுத்து - நேரே எழுந்து கை கூப்பி வணங்கும் ஆற்றல் இல்லாது நோய் மிக்கிருந்தமையால் கைகூப்பி என்னாது கை எடுத்து என்றார்; கை எடுத்தல் வழிபட்ட நிலையுணர்த்தும் வகையால் கையை மேல் எடுத்தல்; நோக்கி என்றதும் பீடம் காட்ட என்றதும் இவ்வாறு அரசன் உட்பட்டுக் கிடந்த நோயினைக் கூடிய நிலையை உணர்த்துதல் காண்க; வெப்பு நோயின் கடுமையால் அரசன் முடியசையும் நிலையிற் கிடந்தான் என்பது "துளங்கும்முடித் தென்னன் முன்னிலை"(கொல்லி - ஆலவாய் - 11) என்று அப்போது அங்கு அருளிய பிள்ளையாரது தேவார அகச் சான்றினால் அறியப்படும். எய்த - அணுக எய்தியபோது என்றலுமாம்.
பீடம் காட்ட - இப்பீடத்தி லமருங்கள் என்று கையினாற் காட்ட; சிவ பூசையில் இறைவரை எழுந்தருளுவிக்கும் முறையில் ஆவாகனம், தாபனம், சன்னிரோசனம் முதலிய கிரியைகளின் பொருட்டுக் கையினால் உரிய முத்திரைகள் காட்டும் தன்மையும் ஈண்டுக் கருதத் தக்கன.,
தண்டுணர் முடியின் பாங்கர் - பீடம் - "முடியின் பக்கத் திடுக என" முன்னர்அரசன் கூற, அமைச்சனார் அவ்வாறே இடுவித்த பீடம்; தண் துணர் முடி - வேப்பமலர்க் கொத்துக்களணிதல் பாண்டியர்க் குரியது; துணர் - இடம் நோக்கி வேப்பமலர்க் கொத்துக் குறித்தது; கடுஞ்சுர நோய் கொண்டார் முடிப்பக்கம் வேப்பிலைக் கொத்துக்களை இட்டு வைக்கும் வழக்கின் குறிப்பும் ஈண்டுக் கொள்ளத் தக்கது; "மருத்து நூலவர் தங்கள்பல் கலைகளின் வகுத்த, திருத்தகுந் தொழில் யாவையும் செய்யவும்" (2612) என்றது காண்க. வெப்பு நீங்க இட்ட வேறு இலைகளுமாம்.
அதன்மிசை மேவி யிருந்தார் என்க; அணைந்து அதன் மேல் எழுந்தருளி அமர்ந்தருளினர்.
மாயை...கொண்டார் - மாயை - முன்கூறிய வஞ்சம் பொய் முதலியவற்றைக் குறித்து நின்றது; வன்மையாவது கன்மனம்; வன்கண்மை; எவ்வாற்றாலும் தமது சமயக் கொள்கையை விடாத வன்மை நிலை எனினுமாம்.
அச்சம் குறிப்பினுட் கொண்டார் - குறிப்பாவது மனத்துள் எழுந்த குறிப்பு. அச்சம் வெளிப்படாமல் உள்ளே கொணடனர் என்க. "அச்சம் மறைத்து"(2653); "பயத்தால் நெஞ்சு சோரவும் பீலிகை சோர்ந்திலர் நின்றார்" (2686); "ஊறுடை நெஞ்சி லச்சம் வெளிப்பட ஒளிப்பார் போன்று"(2715) முதலியவை காண்க; இனி, இவ்வாறன்றித், தென்னவன் கண்டு - நோக்கிக், காட்டிய குறிப்பினாலும், பிள்ளையார் எழுந்தருளிய குறிப்பினாலும், பீடத்தில் மேவியமர்ந்த குறிப்பினாலும் அச்சம் கொண்டனர் என்றலுமாம்; குறிப்பினுள் - முன்பொருளில் உள் - ஏழாம் வேற்றுமைப் பொருளும், பின்னையதில் மூன்றாவதன் பொருளும் கொண்ட தென்க.