பாடல் எண் :2695
என்றமண் கையர் கூற வேறுசீர்ப் புகலி வேந்தர்
"நன்றது செய்வோ" மென்றங் கருள்செய, நணுக வந்து
வென்றிவே லமைச்ச னார்தாம் "வேறினிச் செய்யு மிவ்வா
தொன்றினுந் தோற்றார் செய்வ தொட்டியே செய்வ"தென்றார்.
797
(இ-ள்) என்று அமண்கையர் கூற - முன்கூறிய அவ்வாறு அமண்கையர்கள் சொல்ல; ஏறுசீர்....அருள்செய - மிக்கு ஏறுகின்ற சிறப்பையுடைய சீகாழித் தலைவர் "நன்று; அதன்படியே செய்வோம்" என்று அங்கு அருளிச்செய்ய; நணுகவந்து...என்றார் - வெற்றியுடைய வேலேந்திய அமைச்சனாராகிய குலச்சிறையார் தாம் பக்கத்தில் வந்து வேறு இனிச் செய்யப்புகும் இந்த வாதம் ஒன்றிலும் தோற்பவர்கள் அதன்மேற் செய்யவேண்டுவது இது என்று ஒட்டியே செய்தல் வேண்டும்" என்றார்.
(வி-ரை) ஏறுநீர் - வேந்தர் என்க; முன்னர் இரண்டு முறையினும் வெற்றி பெற்ற சிறப்பு இனியும் இவ்வாதத்தின் வெற்றியாலும் மேல்ஏறி மிகுவதாகும் என்பது சிறப்பு. சீர் - வெற்றியின் சிறப்பு; ஏறும் - இனியும் மேன்மேல் மிகுவதாகும்; வேந்தர் - முன் "மன்னர்" (2693) என்பதற்கேற்ப அதனைத் தொடர்ந்து சொல்லிய ஈண்டும் கூறப்பட்டது காண்க.
நன்று அது செய்வோம் - நன்று - இசைவுகாட்டும் மொழி; அது - அதனையே - அதன்படியே; தேற்றேகாரம் தொக்கது.
அருள் செய - அருள் காரணமாகக் கூற.
அமைச்சனார்தாம் நணுக வந்து - என்றார் என்க; நணுக - "அகலா தணுகாது தீக்காய்வார்போல்க, விகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார்"(குறள்) என்றபடி மன்னரை மிக அணுகாமலும் மிக அகலாமலும் நின்ற தூரத்தினின்றும் பக்கத்தில் வந்து; பிள்ளையார்பாலும் நெருங்காது தூரத்தில் நின்ற முறையினின்றும் அணுக வந்து என்றலுமாம்.
நணுக வந்து - இவ்வாறு ஒட்டியே செய்வது - என்றார் - இவ்வாறு அமைச்சர் சொல்வதற்குரிய குறிப்பு முன் உரைக்கப்பட்டது. இவ்வாதத்திற்கும் அதன் முடிபினால் அமணர் சார்பினுக்கும் எல்லைகண்டு முடிக்கவேண்டுமென்பது அரசாங்க நிலையிற் றாம் மேற்கொண்ட கடமையினால் இவ்வாறு அமைச்சர் முன்வந்து கூறினார் என்க. இதற்கும் பிள்ளையாரது திருவுளப் பாங்காகிய சொற்செயல்களுக்கும் எவ்விதத் தொடர்புமில்லாமை கண்டுகொள்க; "வென்றீவேல் அமைச்சனார்தாம்" என்று அமைச்சுத் தன்மைபற்றிக் கூறியது மிக்கருத்து; "கோற்றொமில் திருத்தவல்ல குலச்சிறையார்"(2747) என்றும், "மருப்புடைக் கழுக்கோல் செய்தார் மந்திரியார் தாம்" (2704) என்றும் பின்னர்க் கூறும் கருத்தும் காண்க.
வேறு.....செய்வது - வேறு - முன்வாதங்கள் முடிந்த நிலையின் அமையாது இது வேறாமென்று கருதி; ஒன்றினும் - "இனி ஒன்று காண்பது"(2692) என்று அமணர் கேட்டதில் வாது ஒன்று என்பதனை வற்புறுத்தியபடி; ஒன்றினும் - உம்மை, முன் இருமுறை தோற்றபடி இவ்வொன்றினும் என இறந்தது தழுவியது; தோற்றார் செய்வது - தோற்றவர் அதன்மேற் செய்வது; உட்படும் தண்டம்; ஒட்டி- (பந்தயம்) இகலிக் கூறி இசைந்து - ஒட்டுதல் - பணையம் வைத்தல்போல ஒன்றினை இசைதல்; ஒட்டியே - ஒட்டியன்றிச் செய்யத்தகாது என ஏனையதனை விலக்குதலின் பிரிநிலை; தேற்றமுமாம்.செய்வது - வாது செய்யக்கடவது.