வேறொரு செயலி லாதார் வெருவுற்று நடுங்கித் தம்பால் ஈறுவந் தெய்திற் றென்றே மன்னவ னெதிர்வந் தெய்தி, ஊறுடை நெஞ்சி லச்சம் வெளிப்பட வொளிப்பார் போன்று "மாறுகொண் டவரு மிட்டால் வந்தது காணு" மென்றார். | 817 | (இ-ள்) வேறொரு...நடுங்கி - வேறு செயல் ஒன்றும் இல்லாதவர் களாகிய அமணர்கள் வெருக்கொண்டு நடுங்கி; தம்பால்...எய்தி - தமக்கு முடிவு வந்துவிட்டதென்றே துணிந்து அரசன் முன்பு வந்து சேர்ந்து; ஊறு உடை...போன்று - புண்பட்ட தமது நெஞ்சில் பயம் வெளிப்பட்டு வர அதனை மறைப்பார்போல; மாறு... என்றார் - "மாறுகொண்ட பிள்ளையாரும் ஏட்டினை இட்டால் அதன் பின்னை வரும் முடிவினைக் காணுங்கள்" என்று சொன்னார்கள். (வி-ரை) வேறொரு செயல் இலாதார் - வேறு செயல் ஒன்றும் என்க; செயல் - செயத்தக்கது; செய்யக்கூடியது. முற்றும்மை தொக்கது.வெருவுற்று - வெருவுதல் - சடுதியில் வரும் அபாயத் தோற்றத்தால் வரும் மன நிகழ்ச்சி. "வெருக்கொண்டாற் போலழுவர் குறிப்பயலாய்" (1952). என்றே - ஏகாரம் தேற்றம். எனவே துணிந்து.தம்பால் ஈறுவந்து எய்திற்று - தம்பால் - நான்கனுருபின் பொருளில் வந்தது; தமக்கு. ஈறு - முடிவுகாலம்; சாங்காலம். ஊறு உடை நெஞ்சில் அச்சம் வெளிப்பட - ஊறு - மூன்று முறையும் தோல்வியும், வாய் சோர்ந்து கழுவிலேற ஒட்டிய நிலையும், பற்றிய எண்ணம்; உடை - உடைய - ஈறு கெட்ட பெயரெச்சம்; ஈறு வரும் என்ற எண்ணத்தால் நெஞ்சம் கெட்டதனால் இங்கு பெயரெச்சமும் ஈறு கெட்டது. ஊறு உடை - ஈறு வரும் என்ற எண்ணத்தால் - ஊற்றினால் - உடைந்த என்றலுமாம். ஒளிப்பார் போன்று - என்றார் - நெஞ்சினின்றும் வெளியே அச்சக்குறி காட்ட அதனை மறைப்பவர்போல் "மாறு...காணும்" என்றார். ஒளித்தலாவது தமக்கு வரும் முடிவுபற்றிய எண்ணத்தையும் அதன் விளைவாகிய மெய்ப்பாடுகளையும் புறத்தில் தோற்றாமல் இம்மொழிகளால் மறைத்தல்; இம்மொழிகளால் இன்னும் வாதம் முடியாதது போலவும் அதனால் முடிவு நிச்சயமில்லாததுபோலவும் பேசுதல். மாறு...வந்தது காணும் - மாறுகொள்ளுதல் - தங்களை எதிர்த்து நிற்றல். இட்டால் வந்தது காணும் - அவரும் ஏட்டினை நீரில் இட்டால் அதுவும் ஒருவேளை ஒட்டியபடி அங்கு நில்லாது நீரினோடு சென்றுவிடுமாகில் தோல்வி யிருபுறமுமாகு மாதலின் அதன் பின்பே நாங்கள் தோற்றமை நிச்சயிக்கவேண்டும் என்பது குறிப்பு. இதனால் தமது தோல்வியும் அழிவும் நிச்சயம் என்று மனத்துள் துணிந்துகொண்ட நிலையினையும், அதனால் நேர்ந்த மெய்ப்பாடுகளையும் மறைத்தமை காண்க. காணும் - அரசனையும் மந்திரியாரையும் நோக்கிச் சமணர் கூறியது. காணும் - செய்யுமென்னும் வாய்ப்பாட்டு முற்று முன்னிலை ஏவற் பன்மைக்கண்ணும் அருகி வருதல், "நீர் ஆக்கியவிக் கருவியினைத்தாரும்" (2348) என்றாற்போல்வனவற்றிற் காண்க. மறைப்பார் போன்று - மறைக்க முயன்றுகளேயன்றி மறைக்கக் கூடவில்லை என்பது குறிப்பு. மாறுகொண்டீரும்...காண்டும் என்பது பாடமாயின் பிள்ளையாரை நோக்கி அருகர்கள் உரைத்ததாக உரைத்துக்கொள்க.
|
|
|