உலகியல் வேதநூ லொழுக்க மென்பதும் நிலவுமெய்ந் நெறிசிவ நெறிய தென்பதும் கலதிவா யமணர்காண் கிலார்க ளாயினும் பலர்புகழ் தென்னவ னறியும் பான்மையால், | 820 | (இ-ள்) உலகியல்....என்பதும் - உலகாசாரமாகிய நடை வேதநூலின் விதித்த ஒழுக்கமே என்பதனையும்; நிலவும்....நெறியாது என்பதும் - அழியாது நிலவுகின்ற வீடுபேறடையும் உண்மைநெறி சிவநெறியேயாகு மென்பதனையும்; கலதி...ஆயினும் - கேடு பெறும் வாய்ப்பினை யுடையராகிய சமணர்கள் அறிய மாட்டார்களாயினும்; பலர்புகழ்...பானமையால் - பலராலும் புகழப்படும் பாண்டியன் அறியும் பான்மையினாலே, (வி-ரை) உலகியல் வேதநூல் ஒழுக்கம் - வேதநெறி. மய்ந்நெறி சிவநெறியே - சைவநெறி; சிவாகநெறி. "வேதநெறி தழைத்தோங்க மிகுசைவத்துறைவிளங்க" (1899); "சைவமுதல் வைதிகமுந் தழைத்தோங்க" (1920) என்று இப்புராணத்தொடக்கத்திலும் பிள்ளையார் திருவவதாரத்தினும் குறிப்பித்த இருபெரும்பொருள்களும் விளக்கமுற்று உலகுய்யவரும் இடம் இஃதே ஆதலின் ஈண்டு இத்திருபபாசுரக் கருத்தாக இவற்றை எடுத்துக்காட்டியருளியது ஆசிரியரது தெய்விகக் கவிநலம். இறைவர் வேதங்களை உலகர்க்காக உணர்த்தியருளினார் எனவும், ஆகமங்களைச் சத்திநிபாதமுடைய பக்குவான்மாக்களுக்காக உணர்த்தி யருளினார் எனவும் காண்பர். கலதிவாய் அமணர் காண்கிலார்கள் - அமணர்கள் வைதிகநெறி ஒழுக்கின் வாராதவர் ; அதனால் அதனின் மேம்பட்ட சைவநெறியினும் வாரார்; ஆதலின் அவற்றின் உண்மைத் திறத்தை உணராத புறச்சமயிகளாவர்; ஆதலின் இந்த இருநெறியினையும் உணர்த்த அருளப்பட்ட இத்திருப்பதிகம் அமணர்களுக்கு அறிவுறுத்துதற்கன்றி, ஈதல்வனையறியும் தன்மை துன்னிய பக்குவமுடைய தென்னவனை அறிவுறுத்தித் தேற்றுதற்கெழுந்த ஞானோ பதேசமாம் என்பது ; "மன்ற பாண்டியன் கேட்கக் கிளக்கும் மெய்ஞ்ஞானம்" (இருபா -2) என்பது ஞானசாத்திரம்; "தென்னவ னறியும் பான்மையால்" என்பதும் காண்க. அமணர் காண்கிலார்க ளாயினும் - தென்னவன் அறியும் பான்மையால் - வைகைக் கரையில் நின்று இத்திருப்பதிகம் அருளப்பட்டது; நீரில் உடன் ஓடாது நிற்கவல்லது மெய்ப்பொருள் என்று வாதத்தின்முற்பட்ட அமணர்முன்பு அரசனுக்கு மெய்ப்பொரு ளிதுவென்று காட்டி அறிவுறுத்துதற் கெழுந்தது; அமணர்களும் முன்னின்றனர்; அருளிப்பாட்டினையும் கேட்டனர். ஆனால் பக்குவமின்மையின் அவர்கள் அதன் உண்மையினைக் காணும் ஆற்றலிலர்; ஆதலின் அரசன் அறியும் பான்மையாற் பிள்ளையா ரருளினர் என்க. அமணர் தேற்றவும் தேறாத அபக்குவ நிலையுடைய ஈனர்களாதலின் (2741) பிள்ளையார் அவர்களைப் பொருட்படுத்தாது அரசனை அறிவுறுத்தியருளினர்; பக்குவமில்லாதார்க்கு ஞான ழணர்த்தற்பாலதன்று என்றும்,உணர்த்தினும் அவர்கள் காணும் ஆற்றலிலர் என்றும், வரும் உண்மைகளும் உணர்த்தப்பட்டன. கலதி - கேடு; வாய்; வாய்ப்பினையுடைய, கலதி - மூதேவி என்றுரைப்பாரும், கலகஞ் செய்யும் என்றுரைப்பாருமுண்டு; காண்கிலார் - காணும் வல்லமையில்லாதார்; "அருக்கனேர் நிற்பினுமல்லிருளே காணார்க்கு" (போதம் 11 - 2) என்றபடி ஞாயிறு முன்னின்று ஒளி செய்யினும் குருடர் காணமாட்டாமைபோல; கில் - ஆற்றலுணர்த்தும் இடைச்சொல். பலர் புகழ் - பலராலும் என்க முற்றும்மை தொக்கது. புகழ் - புகழப்படும். செயப்பாட்டுவினைவிகுதியும் தொக்கது. "பலர்புகழ் ஞாயிறு" (முருகு); பலர் - உண்மை அறியும் பான்மையால் - பகர்ந்து என வரும் பாட்டுடன் கூட்டுக. பான்மை - பண்பு; அறியும்படி என்க. பான்மை - நியதி - பக்குவம் - ஊழ் என்றுகொண்டு அப்பான்மை பொருந்தியமையினாலே என்றலுமாம். |
|
|