"அந்தணர், தேவரா னினங்கள் வாழ்க" வென் றிந்தமெய்ப் மொழிப்பய னுலக மின்புறச் சந்தவேள் விகண்முதற் சங்க ரர்க்குமுன் வந்தவர்ச் சனைவழி பாடு மன்னவாம் ; | 822 | (இ-ள்) அந்தணர்...பயன் - அந்தணர்களும் தேவர்களும் ஆனினங்களும் வாழ்க என்று கூறிய இந்த மெய்ம்மொழியின் பயனாவது; உலகம் இன்புற - உலகுயிர்கள் (துன்ப நீங்கி) இன்பமடையும் பொருட்டு; சந்த வேள்விகள் முதல் - சந்தத்துடன் கூடிய மந்திரங்களையுடைய சிவவேள்விகள் முதலாக; சங்கரர்க்கு - சிவபெருமானுக்கு; முன்வந்த....மன்னவாம் - முதன்மையாகச் சொல்லப்பட்ட அருச்சனைகளும் ஏனை வழிபாடுகளும் ஆகிய இவை நிலைபெறுதலாம். (வி-ரை) என்று இந்த மெய்ம்மொழி - "வாழ்க வந்தணர் வானவர் ஆனினம்" என்ற பதிகத்தின் முதற்பாதம். பதிகம் மெய்ம்மொழி எனப்பட்டது.பயன் - மன்ன ஆம் என்று கூட்டுக. மன்னுதல் மொழியின் பயனாம் என்க. மன்னுதல் பயன் என்பது கருத்து. உலகம் - உயிர்கள், இன்பத் துன்பங்களை அடைவன அவையே யாகலான்.இன்புற - இன்பமடையும் பொருட்டு. இன்புற - வழிபாடு மன்ன என்க. உலக மின்புறும்பொருட்டுச் சிவனது வழிபாடு செய்யக்கடவது என்றபடி; மன்னுதல் - இடையறாது நிகழ்தல். சந்த வேள்விகள் முதல் - அர்ச்சனை - வழிபாடு - என்க. சந்த வேள்வி - சந்தசுகளுடன் கூடிய வேதங்களில் விதிக்கப்பட்டனவும், உரிய சந்தசுடன் உச்சரிக்கப்படும் மந்திரங்களைக் கொண்டனவுமாகிய வேத வேள்விகள். "வேத வேள்வியை நிந்தனை செய்துழல், ஆத மில்லி யமணொடு தேரரை, வாதில் வென்றழிக் கத்திரு வுள்ளமே" என்று தொடக்கத்தில் இறைவர் திருவுள்ளக் குறிப்பு (அனுக்ஞை) பெற்றமை காண்க. அர்ச்சனை வழிபாடு - அர்ச்சனைகளும் ஏனை வழிபாடுகளும். இவை சிவாகமங்களின் விதிக்கப்பட்டன. அந்தணர் - பாரார்த்தமாகிய வேத வேள்விக்குரிய வைதிகர்களும் ஆகம வேள்விக்குரிய சிவ வெதியர்களும் அடங்க அந்தணர் என்றார். உலகமின்புற இவ்வேள்விகள் செய்யப்படுதலின் இவர்கள் முனிவர் - அந்தணர் - எனப்பெறுவர்கள். சிவபாதவிருதயர் - நமிநந்தியார் - திருநீலநக்கர் முதலியோரும், புகழ்த்துணையார் முதலியோருமாம். "மறை முனிவர் மூழ்குதலும்" (1958). "ஆதி மாமறை விதியினா லாறுசூழ் வேணி, நாத னாரைமுன் னாகவே புரியுநல் வேள்வி, தீது நீங்கநீர் செய்யவுந் திருக்கழு மலத்து, வேத வேதிய ரனைவருஞ் செய்யவும்" (2327); "கற்றாங் கெரியோம்பிக் கலியை வராாமே செற்றார்" (தேவா); "தில்லை யந்தணர்" (359) முதலியவற்றின் கருத்துக்கள் காண்க; இக்கருத்தினையே "அந்தண ரென்போ ரறவோர்மற் றெவ்வுயிர்க்குஞ் செந்தண்மை பூண்டொழுக லான்" (குறள்) என்றருளினார் திருவள்ளுவரும். ஈண்டும் "உலகமின்புற" என்றது காண்க. இக்கருத்துக்களை மனங்கொள்ளாது அந்தணர் என்பதனை வெறும் இடுகுறியளவான சாதிப் பெயராகக் கொண்டு போருள்ஞானப் பிழம்பாகிய பிள்ளையார் பாலும் பிணங்கி அபசாரப்படும் மாக்களும் உண்டு; அஃது அவர்தம் ஊழின் வலி என்க. சங்கார்க்குமுன் வந்த - சங்கரர் - சுகத்தைச் செய்பவர் என்பது பொருள். உலகம் இன்புறச் செய்யும் வெள்விக்கும் வழிபாட்டுக்கும் முதல்வாய்க் கருதிய இன்பத்தைச் செய்யவல்லவர் அவரேயாம் என்பார் இப்பெயராற் கூறினார். முன் - முதன்மையாக. வேள்விகள் - சிவவேள்விகள்; சிறுதெய்வங்களைக் குறித்த வேள்விகளல்ல ; சங்கரர்க்கு என்ற குறிப்புமிது; இங்கு இவை சமணர்க்குமுடையதென்று கூறும் சமண்சார்ப்பு பற்றி வீழம் உரைகாரருமுண்டு; அஃது அபிமானம்பற்றிய வெற்றுரையென் றொழிக. சமணரை மறுக்கவந்த இவ்விடத்துப் பிள்ளையாரது மூலநூற் கருத்துக்கும் உரை அருளும் ஆசிரியர்பெருமான் கருத்துக்கும் ஒருசிறிதும் பொருந்தாது தத்தமக்கு வேண்டியவாறே யுரைப்பான்புகும் உரைகாரர்களை இகழ்ந்தொதுக்கு தலேயன்றி வேறு என்னென்று சொல்வது? சங்கரர்க்கு முன்வந்த வேள்விகளைச் சமணரும் செய்வர் என்பது இவர் கருத்தோ? என்று விடுக்க. ஆனினங்கள் - சண்டீசர் சரிதம் காண்க. |
|
|