பாடல் எண் :2735
"மாதுக்க நீங்க லுறுவீர் மனம்பற்று" மென்ப
தாதிச் சுடர்ச்சோ தியையன்பி னகத்துள் ளாக்கப்
போதித்த நோக்குற் றொழியாமற் பொருந்தி வாழ்ந்து
பேதித்த பந்தப் பிறப்பின்னெறி பேர்மி னென்றாம்.
837
(இ-ள்) மாதுக்க நீங்கல்...என்பது - "மாதுக்க நீங்க லுறுவீர் மனம்பற்றி வாழ்மின்" என்ற பதிகப் பகுதி; ஆதிச்சுடர்ச் சோதியை - மூலமாகிய சுடர்ச் சோதியினை(சிவபரஞ்சுடரினை); அன்பின்....வாழ்ந்து - அன்பினாலே ஆன்மாவிற் கண்டு அஞ்செழுத்தால் அகப்பூசை செய்து ஞானாசிரியரால் போதிக்கப்பட்ட திருவருள் வழித்தாகிய அகநோக்கத்திற் கண்டு கூடிய சிவயோகத்தால் இடையறாமற் கூடிச் சிவஞான வாழ்க்கையில் வாழ்ந்து; பேதித்த...பேர்மின் என்றாம் - அநாதியே தொடர்ந்து அறிவை மறைத்து வேறுபடுத்திய ஆணவத்தாலாகிய பிறவியில் வரும் நெறியினின்று நீங்குவீர்கள் என்றபடியாம்.
(வி-ரை) "மாதுக்க நீங்க லுறுவீர் மனம் பற்றும்" என்பது; "மாதுக்க நீங்க லுறுவீர் மனம் பற்றி வாழ்மின்" என்ற பதிகப் பகுதியின் பொருளாவது.
ஆதிச் சுடர்ச் சோதியை - ஆதியாகிய "சுடர்விட்டுளன்" "எங்கள் சோதி" என்று முன்பாட்டில் விரித்துக் காட்டிய அந்த சோதிப்பொருளை.
அகத்துள்ளாக்கி - மனத்துள் விளங்கியெழச் செய்து; "அன்பில் ஊன்றுதலால் விளங்க எழுவித்தல்; மூளுவித்தல்; கோல்கொண்டு கடைந்து மூட்டுதல்போல; "அகனமர்ந்த வன்பினரா யறுபகைசெற் றைம்புலனு மடக்கி ஞானப், புகலுடையோர் தம்முள்ளப் புண்டரிகத் துள்ளிருக்கும் புராணர்" (பிள். தேவா) என்றருளியபடி ஆன்மாவிற் கண்டு அஞ்செழுத்தாற் பூசித்தலைக் குறித்தது; இஃது அந்தரியாக பூசை எனப்படும். "அந்தரி யாகந்தன்னை முத்திசாதனமா யறைந் திடுவரதுதானு மான்மசுத்தி யாகும்"(சித்தி - 9) என்றதும் காண்க. "விறகிற் றீயினன்......முன்னிற்குமே" (அரசு தேவா) என்ற திருப்பாட்டும் சிந்திக்க.
போதித்த நோக்கு உற்று - ஞானாசாரியர் அனுபூதியில் வரும்படி காட்டியருளிய ஞானநாட்டக் காட்சியைப் பொருந்தி; போதித்தல் - போதம் - அனுபவ ஞானம்; போதித்தல் - அனுபவத்தில் வரச் செய்வித்தல்; "நிச்சயப் பொருள் இதுவென்று உணர்த்துதல்" (மாபாடியம் - சிறப்புப் பாயிரம்) என்பர் சிவஞான முனிவர். நோக்கு - அகக்ண்ணினருக்குக் காட்சிப் புலப்படும் நிலை. உறுதல் - வரப் பொருந்துதல்.
ஒழியாமற் பொருந்துதல் - அக்காட்சி இடையறாது கண்டுகொண்டு அதனொடு பொருந்தி நிற்றல்; சிவயோகத்தாற் கூறி நிற்றல்; "மற்றொன் றறிந்திலரால்" (1254); "வேறுணரார்" (1255).
வாழ்தல் - அந்நிலையின் பயனை விடாது அனுபவித்துக் கூடிநிற்றல்.
பேதித்த பந்தப் பிறப்பின் நெறி - மாதுக்கம் என்றதனை விளக்கியவாறு; பேதித்தல் - உயிர் சார்ந்து நிற்கவேண்டிய சார்புணர்ந்து சாரவொட்டாது தடுத்து நிற்றல். பந்தம் - மூலமலம்; பந்தப் பிறப்பின் நெறி மலத்தினால் வரும் பிறவி வழி; நெறி என்றார் பிறவியில் இடையறாது செலுத்துதலின்.
பேர்மின் - அந்நெறியினின்று விலகிச் சிவநெறி சேர்தல். "மனம் பற்றி வாழ்மின்" என்ற பதிகக்கருத் துரைத்தவாறு; வாழ்மின் என்றது சிவச் சார்பு பெற்று வாழ்மின் என்றதாம்; அது பந்தப் பிறப்பின் நெறி பெயர்தலால் வருதலால் பிறப்பின் நெறி பெயர்தலே வாழ்வென்றார். என்னை? பந்தப் பிறப்பின் நெறி பெயரும் உயிர், சார்ந்ததன் வண்ணமாந் தன்மை யுடைமையானும், பந்தத்தைப் பெயர்ந்த வழிச் சிவனையன்றி வேறு சார்பு இன்மையானும், சிவனையே சாருமாதலின் பந்தநெறி பெயர்தலே வாழ்வாம் என்க; "இவ்வான்மாத் தன்னை யிந்திரியத்தின் வேறாவான் காணவே முதல்வனது சீபாதத்தையணையும் - "ஊசல் கயிறற்றால்தாய் தரையேயாந்துணையால்" என்ற உண்மை காண்க.
போதித்த நோக்கு - ஞானகுரு அறிவிற் பொருந்தக் கொளுவிய உள்நோக்கம்; உற்று - அதனுள் அழுந்தி; போதித்த என்றதற்கு ஞானகுரு என்ற எழுவாய் அவாய்நிலையான் வந்தது. "தம்முதல் குருவுமாய்த் தவத்தினி லுணர்த்த" என்றது இக்கருத்தை விளக்கியது. ஈண்டுச் சகலான்மாக்களுக்குப் பிள்ளையார் ஞானஉபதேசம் செய்தருள்கின்றா ராதலானும், சகலர்க்குக் குருவேடத்தினுள் மறைந்தே முதல்வன் அருளுவானாதலானும், இங்கு எழுவாய் மறைந்து நின்றது.
போதித்த நோக்கு உற்று ஒழியாமற் பொருந்தி வாழ்ந்து - "ஞானக் கண்ணினிற் சிந்தை நாடி" என்ற சிவஞானபோதம் ஒன்பதாஞ் சூத்திரம் இக்கருத்தையே விளக்குதல் காண்க.
போதித்த நோக்குறுதலும் (1), ஒழியாமற் பொருந்துதலும் (2), வாழ்தலும் (3) என்ற இம்மூன்றும் முன் கூறியபடி சிவஞானபோதம் ஒன்பதாஞ் சூத்திரத்தினுள் (1) அம்முதலை ஞானக்கண்ணாலே காண்க எனவும், (2) அசத்தாயுள்ள வன்னபேதங்களை அசத்தென்று காண உளதாய் நிற்பது ஞானசொரூபம் எனவும், (3) இனி இவ்விடத்து ஸ்ரீ பஞ்சாக்கரத்தை விதிப்படி உச்சரிக்க எனவும் முறையே மூன்றதிகரணங்களால் விரித்துப் போதிக்கப்பட்டமை காண்க. "அண்டனை யான்மாவி லாய்ந்துணரப்பண்டணைந்த, வூனத்தைத் தான்விடுமா றுத்தமனி லொண்கருட, சானத்திற் றீர்விடம் போற்றான்"(9 - 2) என்றவிடத்து அச் சிவஞானத்தானே, ஆசாரியன் "சிவோயம்" எனத் தன்னுள்ளே பாவித்துச் "சிவத்துவமசி" என்றறிவுறுக்கும் மகா வாக்கியப் பொருளை நாடோறும் பயின்று, சிவோகம் எனப் பாவிப்பானாயின், அந்தப் பாவனைக்குள் விளங்கும் முதல்வனால் அநாதியே கூடிய பொதுவியல்பையும், அதற்கேதுவாகிய மல மாயா கன்மங்களையும் தான் விட்டு நீங்குமாறு, ஒள்ளிய கருட தியானத்தில் விளங்குங் கருடனால் அப்பாவகன்ம விடத்தைத் தீர்த்துக் கொள்ளுமாறு போலாமென்க" (மாபாடியம்) எனவரும் உரையும் காண்க; அச்சூத்திரப் பிண்டப் பொழிப்புரைக்கும் வழிப் (1)பசுஞானத்தானும் பாசஞானத்தானும் அறியப்படாத முதல்வனை அம்முதல்வனது ஞானக்கண்ணானே தன் அறிவின்கண்ணே ஆராய்ந்தறிக (2); அப் பதிஞானத்தைப் பெறுமாறு யாங்ஙனமெனின் நிலமுதல் நாதமீறாகிய பாசக் கூட்டம் நின்றுழி நில்லாது பரந்து திரிதற்கண் அதிவேகமுடைய பேய்த்தேரினியல்பிற்றாய்க் கழிவதென் றறிந்து நீங்கவே, அப்பதிஞானம் பிறவித் துயராகிய வெப்பத்துக்குக் குளிர்ந்த நிழலாய் வெளிப்பட்டு விளங்கும். (3) அங்ஙனம் விளங்கிய ஞானத்தால் ஞேயத்தைக் கண்ட காட்சி சலியாமைப்பொருட்டு அப்பொருள் பயக்குந் திருவஞ்செழுத்து, அவ்விதிப்படி அறிந்து கணிக்கப்படும்" என்றுரைத்ததும் இங்கு வைத்துக் காண்க.
ஒழியாமற் பொருந்திவாழ்தல்
- "அஞ்செழுத்தா லுள்ள மானுடையை கண்டரனை, யஞ்செழுத்தா லர்ச்சித் திதயத்தில் - அஞ்செழுத்தாற், குண்டலியிற் செய்தோமங் கோதண்டஞ் சானிக்கில், அண்டனாஞ் சேடனா மங்கு"(9 -3) என்று இதன் பொருள் விரிக்கப்பட்டதும் கருதுக. ஈண்டு, "ஆரியனா மாசான்வந் தருளாற்றோன்ற வடிஞான மான்மாவிற் றோன்றுந் தோன்றத், தூரியனாஞ் சிவன் றோன்றும்" (சித்தி - 8 . 28); "சங்கரனோ, டொக்கவுறைந் திவரவனை யவனிவரை விடாதே யுடந்தையாய்ச் சிவன்றோற்ற மொன்றுமே காண்பர்" (மேற்படி - 8 -29); "சோதிக்குட் சோதியாய்த் தோன்றிடுவன் காணே" (மேற்படி (8-38) என்பனவாதியாக வரும் எட்டாஞ் சூத்திரத்துள் கேட்டல் சிந்தித்தல் முதலிய ஞான சாதனைகளையும், அவற்றைத் தொடர்ந்து ஒன்பதாஞ் சூத்திரத்துள் சாதிக்குமாறுணர்த்தும் வகைகளையும் ஈண்டுக் கருதுக. "நினைந்திருக்க...நேர்பட வந்துள்ளே, பெறுப்பரிய பேரன்பை யருளியதன் வழியே, புகுந்திடுவ னெங்குமிலாப் போதத்தைப் புரிந்தே" (மேற்படி - 9-6); "சோகமெனப் பாவிக்கத் தோன்றுவன் வேறின்றி" (மேற்படி - 9-7) என்பனவாதி உண்மை நூலின் றிருவாக்குக்கள் ஈண்டு உணர்ந்து சிந்திக்கத் தக்கன.
"மனம் பற்றும்" என்ற பகுதியின் பொருள் சோகம்பாவனையின் தன்மையும் அது பிறவிநீக்கு முத்திசாதனமாமாறுங் கூறியதாமென்க.