பூழியன் மதுரை யுள்ளார் புறத்துளா ரமணர் சேரும் பாழியு மருகர் மேவும் பள்ளியு மான வெல்லாங் கீழுறப் பறித்துப் போக்கிக், கிளரொளித் தூய்மை செய்தே வாழியப் பதிக ளெல்லா மங்கலம் பொலியச் செய்தார். | 871 | (இ-ள்) பூழியன்...புறத்துளார் - பாண்டியனது மதுரை யிலுள்ளார்களும் மதுரையின் புறத்துப் பல இடங்களிலும் உள்ள மாந்தர்களும்; அமணர்.....நோக்கி - சமண குருமார் தங்கிய பாழிகளும் அவர்தங் கடவுள் இடங்கொண்ட பள்ளிகளும் ஆகிய எல்லாவற்றையும் கீழ்நிலங் காண அகழ்ந்து போக்கி; கிளரொளித் தூய்மை செய்தே-ஒளிபெருகத் தூய்மைப்படுத்தி; வாழி....செய்தார் - வாழ்வுபெறும் அப் பதிகளெல்லாவற்றிலும் சிவத்துவமாகிய சின்னங்களை விளங்கச் செய்தனர். (வி-ரை) பூழியன் - பாண்டியனுடைய; ஆறனுருபு தொக்கது. மதுரையுள்ளார் - புறத்துளார் - மதுரை மாநகரத்திலும், நகரத்துப் புறம்பு பாண்டிநாட்டிலும் உள்ள மாந்தர்கள்; பொலியச்செய்தார் என்ற வினையுடன் கூட்டி முடிக்க. அமணர் சேரும் பாழி - அமண குருமார் தங்கும் மடங்கள். அருகர் மேவும் பள்ளி - அருகக் கடவுள் கோயில்; "பள்ளியொடு பாழிகளும் கூடவிடித் துக்கொணர்ந்து குணபரவீச் சரமெடுத்தான்"(1411). ஆன எல்லாம் - ஆன - முன் இல்லாது இடையில் தோற்றலாயின். கீழுறப் பறித்துப் போக்கி - அவர்கள் கட்டிய அடிமட்டம் கீழ்அளவு காணப்பறித்து அப்புறப்படுத்தி. போக்குதல் - இருந்தவாறே வேறு பயன்படுத்திக் கொள்ளலாமே? எனின், பின் ஒருகால் இவை முன்னைநிலைமை பெற உதவவும் கூடுமாதலின் அவ்வாறு அக்கேட்டிற்குத் துணைபுரியாவண்ணம் போக்குதல் வேண்டப்பட்டதென்க. கீழுறப் பறித்தல் எற்றுக்கெனின், அவற்றின் தூய்மையற்ற தன்மை மீண்டும் முளையாவண்ணம் வேரறக் களைதற்கென்க; இந்நாளினும் உருகியா நாட்டினர் முன்னிருந்த அரச குடும்பத்தைக் களைந்து குடித்தனியரசு நாட்டியபின் அவர்தம் முன்னைத் தொழுமிடங்களை யெல்லாம் வேரற இடித்து மண்ணையும் அகழ்ந்து எறிந்து பின்னரே அவ்விடத்துத் தம் அரசாங்கக் கட்டிடங்களை அமைத்த சரித நிகழ்ச்சிகள் அம் மனப்பான்மையின் உறைப்பினை விளக்கும். கிளரொளித் தூய்மை செய்தே - ஒளி கிளரும் தூய்மையாக்கி; முன்னர் உண்மைவிளக்கமின்றி அஞ்ஞானஇருள் நிறைந்திருந்தமையால் அவ்விடத்தை உண்மை விளங்கும் இடங்களாக ஆக்கி; ஏகாரம் - தேற்றம்; செய்த பின்பே. வாழி அப்பதிகள் - வாழி - வாழ்வு பொருந்திய. மங்கலம் - சிவத்தன்மை காட்டும் குறிகள்; சைவ அடையாளங்கள்; சிவச் சின்னங்களாகிய இடபக்கொடி, சூலம், இடப இலச்சினை முதலியவை நாட்டுதலும், மெழுகுதலும் வெண்சுதை போக்குதலும் முதலாயின. |
|
|