பாடல் எண் :2803
புல்லறிவிற் சாக்கியர்க ளறிந்தார் கூடிப்
புகலியர்தம் புரவலனார் புகுந்து தங்கள்
எல்லையினி லெழுந்தருளும் பொழுது தொண்ட
ரெடுத்தவார்ப் பொலியாலு மெதிர்முன் சென்று
மல்கியெழுந் திருச்சின்ன வொலிக ளாலு
மனங்கொண்ட பொறாமையினான் மருண்ட தங்கள்
கல்வியினின் மேம்பட்ட புத்த நந்தி
முதலான தேரர்க்குங் கனன்று சொன்னார்.
905
(இ-ள்) புல்லறிவில்...கூடி - புன்மையான அறிவுடைய சாக்கியர் களுள் அறிந்தவர்கள் சேர்ந்து; புகலியர்தம்...மருண்டு - சீகாழியவர்களது காவலராகிய பிள்ளையார் தமது ஊரின் எல்லையில் புகுந்து எழுந்தருளும்பொழுது திருத்தொண்டர்கள் எடுத்த சிவவொலிகளின் முழக்கத் தாலும், அவர்களின் எதிரே முன்னணியில் சென்று திரண்டு எழுந்து ஒலிக்கும் திருச்சின்னம் எக்காளம் என்ற இவற்றின் ஒலிகளாலும் தம் மனத்துள் மேற்கொண்ட பொறாமையினாலே மருட்சியடைந்து; தங்கள்.... சொன்னார் - தங்கள் சமயக் கல்வியினின் மேம்பட்ட புத்தநந்தி முதலாகிய புத்தர்களுக்கும் அச்செய்தியைக் கோபமுடனே சொன்னார்கள்.
(வி-ரை) புல்லறிவிற் சாக்கியர்கள் - முன் "சார்வறியாச் சாக்கியர் (2802) என்றார். அவர்கள் கொள்கைப்படி அறிவுதானும் கணபங்கமாயொழியு மாதலின் அக்குறிப்பும் பெற இவ்வாறு கூறியதும் கருதுக.
அறிந்தார் - பிள்ளையாரது எழுச்சியின் நிலையில் முன்கூறிய முழக்கங்களையும் பொருளையும் அறிந்தவர்.
எதிர்முன் சென்று - பிள்ளையார் எதிரே முன் அணியிற் சென்று; எதிர் என்றது சின்னம் காளம் முதலியவை ஒலிப்போர் தலைவர்க்குப் புறகு காட்டாது எதிர்முகமாக நின்று முழக்கும் மரபு குறித்தது; எதிர் - அவ்வாறு அறிந்தார் எதிரில் என்றுரைப்பாருமுண்டு.
திருச்சின்ன ஒலிகள் - திருச்சின்னம் எக்காளம் இவைகளில் பொருள் தரும் மொழிகளே தனித்தனி ஒலிக்கப்படுதலின் ஒலிகள் என்றார்; ஏனை இயங்களின் ஒலி அவ்வாறின்றிப் பொருளற்ற ஒலியாய்ச் சேர முழக்கப்படுதலின் அவற்றை ஒன்றாகத் திரட்டி ஆர்ப்பு ஒலியாலும் என ஒருமையிற் கூறினார். இது சாதியொருமை என்றலுமாம்.
மனங்கொண்ட பொறாமையினால் மருண்டு - மனங்கொண்ட - மனத்துள் எழுந்த. மருண்டு - மயக்கமடைந்து; பொறாமை - அழுக்காறு; "அழுக்காறெனவொரு பாலி திருச்செற்றுத், தீயுழி யுய்த்து விடும்"(குறள்) என்ற பாட்டின் படிப்பினையைக் கருதுக. மருளுதல் - ஒன்றைப் பிறிதொன்றாக மயங்குதல்; "பொருளல்லவற்றைப் பொருளென் றுணரும், மருள்"(குறள்).
தங்கள் கல்வி - தமது சமயக் கோட்பாடுகளின் கல்வி.
புத்தநந்தி - புத்தருட் சிறந்தோர் - துறந்தோர் - புனையும் பெயர் மரபு. "புத்தநந்தியும்...முதலதாகிய பெயர்கொளா"(தேவா - பண் - கொல்லி).
கனன்று சொன்னார் - சினமீக்கூர்தலினால் அமைதியாக நினைந்து உண்மையுணர மாட்டாதவராயினர் என்பது குறிப்பு. "உள்ளங் கவர்ந்தெழுந் தோங்குசினம்"; மேல் "வெகுண்டு சொன்னான்" என்பதும் காண்க.