பாடல் எண் :2809
அஞ்சியகன் றோடியவப் புத்த ரெல்லா
மதிசயித்து மீண்டுமுட னணைந்து கூடி,
"வஞ்சனையோ? விதுதான்மற் றவர்தஞ் சைவ,
வாய்மையோ?" வெனமருண்டு மனத்திற் கொள்வார்
"எஞ்சலின்மந் திரவாத மன்றி யெம்மோ
டெதிர்ந்துபொருள் பேசுவதற் கிசைவ" தென்று
தஞ்செயலின் மிக்குள்ள சாரி புத்தன்
றன்னையே முன்கொண்டு பின்னுஞ் சார்ந்தார்.
911
(இ-ள்) அஞ்சி....கூடி - பயந்து அவ்விடத்தினின்றும் நீங்கி ஓடிய அந்தப் புத்தர்கள் எல்லாரும் அதிசயமடைந்து மீளவும் தம்முள் வந்தணைந்து ஒன்றுகூடி; வஞ்சனையோ...மருண்டு - அந்நிகழ்ச்சிதான் வஞ்சனையால் விளைந்ததோ? அன்றி மற்று அவர்களுடைய சைவ சமயத்தின் உண்மைத் திறத்தினால் விளைந்ததோ? என்று மனமருட்சியடைந்து; மனத்திற் கொள்வார் - மனத்திலே எண்ணினார்களாகி; எஞ்சலின்....என்று - குறைவில்லாத மந்திர வாதத்தாலன்றி - மந்திரவாதத்தினிற் செல்லாது எங்களோடு எதிர்த்து உண்மைப்பொருளிது என்று பொருணிச்சயம் பேசி வாதம் செய்வதற்கு இசைவீர்களாக" என்று சொல்லி; தம் செயலின்.....சார்ந்தார் - தமது சமயநிலைச் செயலில் மிக வன்மையுடைய சாரிபுத்தன் என்பவனையே தலைவனாக முன் வைத்துக் கொண்டு பின்னும் வந்து சார்ந்தார்கள்.
(வி-ரை) அதிசயித்து - "அதிசயம் கண்டாமே"(திருவா) என்றபடி நேரிற் கண்டார்களாதலின் இனைத்தென் றறியாவகை அதிசயித்தார்கள்.
வஞ்சனையோ?...வாய்மையோ?...என மருண்டு - இந்நிகழ்ச்சி இந்த இரண்டனுள் ஒருகாரணத்தால் நிகழ்ந்திருத்தல் வேண்டும்; அவற்றுள் இன்னதென்று துணிய மாட்டாமையின் மருண்டனர். இரண்டனுள் எவ்வகையாயினும் இது மந்திர வாதத்தின்பாற் பட்டதேயன்றி வேறில்லை எனக் கொண்டு, அவ்வாறு மந்திர வாதம் செய்யாது பொருள் பேசி நிச்சயிக்கும் வாக்கின் வாதம் வேண்டுவோம் என நிச்சயித்து அதனை வேண்டினர் என்க. இசைவது - இசைவீராக என்று சொல்லி.
தஞ்செயல் - தம் சமயநூல் அறிவும் தொழிலும். ஓடி அவப்புத்தர் - அவம் - தவமல்லாதது - என்று பிரித்துரைக்கவும் நின்றது; (வ.சு.செ.)
உடன் அணைந்து கூடிஎன்றதனால் முன் சிதறுண்டமை பெறப்படும்.
சாரிபுத்தன் - புத்தநந்தி இறந்த பின்னர் அப்புத்தர் தமது தலைவனாகக் கொண்ட புத்தனுடைய பெயர்.
முன்கொண்டு பின்னும் - முன்வரினும் பின்னடையவே - தோல்வியுறவே - செல்கின்றார் என்பது குறிப்பு.
எஞ்சலில் - எஞ்சுதல் - கெடுதல்; குறைதல். பொய்யாத - குறிதவறாத - மந்திர வாதம்.
மந்திரவாதமன்றி - இப்போது நேரிற் கண்டது பிழையாத மந்திரவாதம்; முன்னர்ச் சமணர் பட்டதாகக் கேட்டதும் அவ்வாறே; ஆதலின் அதனைத் தவிர்த்துச் சமய வாதமாகிய வாக்கின் வாதத்தை ஏற்றனர்; அதனில் தம்மினு மிக்காரிலர் என்னும் துணிபினால் என்க.