பாடல் எண் :2824
அன்றவர்க்குக் காழியர்கோன் கருணை நோக்க
மணைதலினா லறிவின்மை யகன்று நீங்கி
முன்றொழுது விழுந்தெழுந்து சைவ ரானார்;
முகைமலர்மா ரியின்வெள்ளம் பொழிந்த தெங்கும்;
நின்றனவுஞ் சரிப்பனவுஞ் சைவ மேயாம்
நிலைமையவர்க் கருள்செய்து, சண்பை வேந்தர்
சென்றுசிவ னார்பதிகள் பணிய வேண்டித்
திருக்கடவூ ரதன்மருங்கு சேர வந்தார்.
926
(இ-ள்) அன்று....அணைதலினால் - அன்று அந்தப் புத்தர்களுக்குச் சீகாழித் தலைவராகிய பரமாசாரியரது அருட்பார்வை அணைந்தபடியினாலே; அறிவின்மை அகன்று நீங்கி - அறிவை மறைக்கும் தன்மையுடைய பாசவீட்டம் தம்மைவிட்டு நீங்கியமையால்; (அப்புத்தர்கள்) முன்...ஆனார் - பிள்ளையார் திருமுன்பு தொழுது நிலமுற விழுந்து எழுந்து (அவரால் திருநீறு தரப்பெற்று அணிந்து) சைவர்களாயினர்; முகை மலர்....எங்கும் - தேவ மலர்மழை எங்கும் பொழிந்தது; நின்றனவும்...அருள் செய்து - நின்றன என்றும் வந்தியங்குவன என்றும் கூறப்படும் எல்லா உயிர்வகைகளும் சைவமேயாகும் என்ற நிலைமையினை அந்தப் புத்தர்கள் அறிந்துய்யும்படி அருளிச் செய்து: சண்பை வேந்தர்....வந்தார் - சீகாழித்தலைவராகிய பிள்ளையார் சிவபெருமான் எழுந்தருளிய பதிகளைச் சென்று பணியும்பொருட்டுத் திருக்கடவூரின் பக்கத்திற் சேரும்படி எழுந்தருளி வந்தனர்.
(வி-ரை) அன்று - கருணை நோக்கம் - அணைதலினால் - முன்னர்ப் புல்லறிவினராய்ப் பெருமைகொண்டு கனன்று வலிந்த முறையில், திருச்சின்னம் ஊதித் தெருவிற் செல்வதைத் தடை செய்தனர்(2804); பின்னர் வாக்கின் போர் ஏற்று எதிர்ந்து வந்தனர்(2809); இவ்வாறு மந்த உணர்வுடையவர்கள் இப்போது புண்ணியப் பேறாகிய பக்குவம் வரப் பிள்ளையாரது கருணைநோக்கம் எய்தப்பெற்றனர்; அதனால் என்க. அன்று - அப்பொழுது. கருணை நோக்கம் - பக்குவம் வரும் நிலையில் ஆசாரியன் செய்யும் தீக்கைகளுள் ஒன்ற. சாட்சுஷி தீக்கை என்பர். "பார்த்த பார்வையாலிரும்புண்ட நீரெனப் பருகும் தீர்த்தன்" (திருவிளை. புரா); "வானோன் பவனி வரக்கண்டு வல்வினையேன், ஏனோரு மேத்துதல்கண் டேத்தினேன் - றானென்னைப், பார்த்தான் பழையவினைப் பஞ்சமலக் கொத்தையெல்லா, நீத்தான் நினைவுவே றாக்கினான்" (நெஞ்சுவிடு தூது - 89-90).
அறிவின்மை அகன்று நீங்கி - "சேவடிக்கீழ்ச் சென்று தாழ்ந்தார்க" ளாதலின் "பக்குவநிலை வரப்பெற்றபோது ஆசாரியரது அருட்பார்வை அணையப் பெற்றனர்; பெறவே, முன்னிருந்த "மந்த வுணர்வு"(2823) நீங்கப்பெற்று அறிவின்மையாகிய ஆணவமலப் பிணிப்பும் சிறிது நீங்கலாயிற்று என்பார் அறிவின்மை அகன்று என்றார். அறிவின்மை - அறிவை மறைக்கும் ஆணவமலச் செயல்.
முன் தொழுது விழுந்து எழுந்து - சம்பந்த சரணாலயர் வாதத்தில் தெருட்டிய வகையால் தமது பொருள் பொருளன்றாம்படி கண்டு தமது பான்மை அழிந்தனர்; அதன்பின் சைவம் அல்லது மற்றொன்றுமில்லை என்ற பொது உபதேச மொழியாற் றெளிவுபெற்றுத் தாழ்ந்தனர்; அதனால் அருட்பார்வை பெற்றனர்; அதனால் அறியாமை நீங்கி தொழுது வீழ்ந்தனர்; அதனால் தீக்கையும் நீறும் பெற்றுச் சைவராயினர் என்று இவ்வாறு படிமுறையால் உய்திபெறும் வகை கண்டுகொள்க; "பெயர்த்து மவனுக்கே பி்ச்சியானாள்.... அன்னையையு மத்தனையு மன்றே நீத்தாள்...தலைப்பட்டாள் நங்கை தலைவன் றாளே" (தேவா) என்றவாறு உண்மை காண்க.
சைவரானார் - திருநீறு தரப்பெற்று என்பது அவாய்நிலை. "பரசமய நிராகரித்து நீறு ஆக்கும்" (1917) என்றதும், பிறவும் நினைவு கூர்க. நீற்று நெறியே சைவநெறி என்பதும் கருதுக. பௌத்தநெறி விட்டுச் சைவராயினார் என்றமையாலே இதனை வேறு கூறிற்றிலர்; சிறப்புப்பற்றிச் சைவராயினமை கூறி விடுத்தனர். "விதிநிலவு வேதநூ னெறியே யாக்கி வெண்ணீற்றின் சார்வினான் மிக்குயர்ந்த கதியருளி" (2790) என்றது கருதுக.
நின்றனவுஞ் சரிப்பனவுஞ் சைவமேயாம் நிலைமை - முன்பாட்டிற் கூறிய உண்மைப்பொருளை விரித்து உடன்பாட்டு வகையால் உபதேசித்தருளியது. இதனாற் சைவத்தின் பொருணிச்சயம் கூறியபடி.
நின்றனவும் சரிப்பனவும் - நின்றன - எண்ணிறந்த உயிர்களின் தொகையாகி நின்றன. இவை பசுக்கூட்டம். சரிப்பன - இவை இறைவனது படைப்புத் தொழிலிற்பட்டுப் பிறவிகொண்டு பாசநீக்கம் பெரும் வழியில் ஈடுபடுத்தப்பட்ட உயிர்த்தொகை. இவை யிரண்டாலும் "ஆருயிர்த்தொகை - வான்திகழ் தளை" என இரண்டு பொருளும் பெறுவிக்கப்பட்டன.
நின்றனவும் சரிப்பனவும் சைவமேயாம் என்றதனால் உயிர்கட்கெல்லாம் அருள் வைத்துப் படைப்பு முதல் அருளுதல் வரை ஐந்தொழிலும் செய்யும் "ஆன்றதோர் தொல்பதி"யும், அவனது சைவநெறித் திறமும் பெறுவிக்கப்பட்டன. நிற்பன என்னாது நின்றன என்ற கருத்தும் இது. இங்கு இவ்வாறன்றி நின்றன என்பதற்கு நிற்பன என்ற பொருளே கொண்டு அதற்கேற்ப அசரம் சரம் எனப் பொருள்கொள்வாருமுண்டு. "தாவில் சராசரங்க ளெல்லாம் சிவம்பெருக்கும் பிள்ளையார்"(1924) என்ற கருத்தினையும், திருவோத்தூரில் பனைகள் சிவப்பேற்றினை அடையும் நிலையினையும் இங்கு வைத்துக் காண்பர். சைவம் - முன்பாட்டிற் சைவம் என்றது கொள்கையினை; இங்குச் சைவம் என்றது பொருளாகிய சிவப்பேற்றினை.
நிலைமை - நிலைபேறாந் தன்மை; மாறுபாடின்றி நிறுவப்பெறுதல்; ஒழியாத பேரின்பம்.
சென்று சிவனார் பதிகள் பணியவேண்டி - சென்று - பிள்ளையார் திருநள்ளாறு பணிந்து பதி பிறவும் வணங்கச் செல்லும் வழியில் போதிமங்கையில் இப்புத்தர்களது தடைநிகழ, அதில் அவர்கள் தோல்வியுற்றுச் சைவர்களாகியுய்ய, அதன்பின் அத்தடை நீங்கியபடியால் தமது வழிச்செலவை மீண்டும் தொடங்கிப் பிள்ளையார் சென்றுஎன்க. பணிய வேண்டி - முன் கொண்டு வழிபட்ட கருத்தினையே தொடர்ந்து விரும்பி என்க.
முகைமலர்மாரியின் வெள்ளம் எங்கும் பொழிந்தது - திருவருள் வெளிப்பாட்டின் நிகழும் தெளிவப் பூமாரி; திருவருள் வெளிப்பாடாவது பிள்ளையார் அவதரித்த கருத்து நிறைவேறப்பெறுதல். அஃது பரசமய நிராகரிப்பும் நீற்றின் ஆக்கமுமாம்.