பாடல் எண் :2831
திருச்சின்னம் பணிமாறக் கேட்டநாற் றிசையுள்ளோர்
பெருக்கின்ற வார்வத்தாற் பிள்ளையார் தமைச்சூழ்ந்த
நெருக்கினிடை யவர்காணா வகைநிலத்துப் பணிந்துள்ளம்
உருக்கியெழு மனம்பொங்கத் தொண்டர்குழாத் துடனணைந்தார்.
933
(இ-ள்.) திருச்சின்னம்....நெருக்கினிடை - முத்துத் திருச்சின்னம் ஊதக் கேட்டவர்களாகிய நாற்றிசையினின்றும் போந்த அன்பர்கள் பெருகுகின்ற ஆசையினாலே பிள்ளையாரைச் சூழ்ந்துகொண்டு வரும் நெருக்கத்தி னிடையே; அவர் காணா....பணிந்து - பிள்ளையார் காணாத வகையினிலே நிலமுறப் பணிந்து; உள்ளம்...உடனணைந்தார் - உள்ளத்தை உருக்கி எழுகின்ற மனம் ஓங்கத் திருத்தொண்டர் கூட்டத்துடனே அணைந்தனர்.
(வி-ரை.) திருச்சின்னம் பணிமாற - திருச்சின்னம் பிள்ளையாரது புகழ்களை எடுத்த ஊத; பணி மாறுதல் - ஊதுதல்; மரபு வழக்கு.
நாற்றிசையுள்ளோர் - சூழ்ந்த - நெருக்கினிடை - என்க. திருச் சின்னங்கள் பிள்ளையாரது புகழ்களைப் பலவாறும் எடுத்துக் கூறி ஊதின; அவ்வொலியினைக் கேட்டு அதனால் ஈர்க்கப்பட்டுப் பலரும் பல திசைகளினின்றும் வந்துகூடிப் பிள்ளையாரைக் கண்ணாரக் கண்டு மகிழ்ந்து நெருங்கிச் சூழ்ந்துகொள்ளுதல் இயல்பு.
அவர் காணா வகை - அந்நெருக்கத்தினிடையே அரசுகள் போதுவதனையும் நிலமுறப் பணிவதனையும் பிள்ளையார் காண இயலாத வகையில். அவர் - பிள்ளையார். கண்டனராகில் நிலமுறப் பணியவும், அவர் தமது திருவடி தாங்கிச் சிவிகை பொறுக்கவும் இசையாராதலின் காணாவகை பணிந்தனர் என்க.
உள்ளம்......பொங்க - மனம் உள்ளத்தை உருக்கி அன்பினால் மேலெழுந்தது; பொங்குதல் - மன எழுச்சி மேற்செல்லுதல்.
தொண்டர் குழாம் - பிள்ளையாருடன் வந்த திருக்கூட்டம். "முதிர்கின்ற பெருந்தவத்தோர்" (2830).
உடன் அணைந்தார் - "அன்ரொடு மரீஇ" (போதம் - 12 - சூத்) என்ற கருத்துக் காண்க.இச்செய்யுள் சில பிரதிகளில் இல்லை.