பாடல் எண் :2842
தென்னற் குயிரோடு நீறளித்துச் செங்கமலத்
தன்ன மனையார்க்கு மமைச்சர்க்கு மன்பருளித்
துன்னுநெறி வைதிகத்தின் தூநெறியே யாக்குதலான்
மன்னுபுகழ் வாகீசர் கேட்டு மனமகிழ்ந்தார்.
944
(இ-ள்.) தென்னற்கு....நீறளித்து - பாண்டியருக்கு உயிருடனே திருநீற்றினை அளித்தருளியும்; செங்கமலத்து...அன்பருளி - செங்கமலத்திலிருக்கும் அன்னம் போன்ற மங்கையர்க்கரசியம்மையாருக்கும் அமைச்சனாருக்கும் அன்பினை அளித்தருளியும்; துன்னுநெறி.....ஆக்குதலால் - தூய வைதிகச் சைவநெறியே பொருந்தும் நெறியாக ஆக்கியளித்தமையாலே; மன்னுபுகழ் ....மகிழ்ந்தார் - நிலைபெற்ற புகழினையுடைய அரசுகள் கேட்டு மனம் மிக மகிழ்ந்தார்.
(வி-ரை.) உயிரோடு நீறு அளித்து - வெப்பு நோயினால் உயிர்போகும் நிலையிலிருந்து பாண்டியனுக்கு நோய்நீக்கி உயிரைக் கொடுத்ததன்றி அதனோடு திருநீற்று நெறியினைச் சாரும் பேற்றினையும் அளியுடன் தந்து; திருநீற்றின் மூலம் (திருநீற்றுப் பதிகம் அருளி நீறு சாத்தி) உயிர் அளித்து என்பதும் குறிப்பு. நீறிடா நெற்றிபாழ் என்றும், "திருவெண்ணீ றணியாத திருவி லூரும்...அடவி காடே" (தேவா) என்றும், "நீறணியாத நெற்றியினைச் சுடு" (வேதம்) என்றும் கூறுபவாகலின் அவ்வாறு ஒழியாது நீற்றினால் உண்மை உயிர்வாழ்க்கை பெறுபவனாக ஆக்கி என்ற குறிப்பும் காண்க. சமண் சார்பாற் சிவாபராதப்பட்டு வீழ்ந்து கிடந்த உயிரை மேல் எடுத்துப் புனிதமாக்கி அளித்து என்ற குறிப்புமாம்.
செங்கமலத்து அன்னம் அனையார் - மங்கையர்க்கரசியம்மையார்; அன்னம் - அன்னம் போன்றவர் என்க; நடைபற்றிய உவமம். "செய்ய தாமரைமே லன்னமே யனைய சேயிழை" என்ற தேவாரப் பகுதி ஆசிரிய வசனமாக எடுத்தாளப்பட்டது. "பங்கயச் செல்வி" என்று பிள்ளையாரால் போற்றப்படும் நிலையுள்ள அம்மையாரை ஈண்டுப், பிறவியுட்படும் இலக்குமிக்கு உவமிப்பதாகக் கூறுவார் பொருள் பொருந்தாதென்க.
அன்பு அருளுதலாவது - தமது இன்னருளினை அளித்தல்; அவர்கள் வேண்டியவாறே சமணீக்கமும் சைவ ஆக்கமும் செய்தருளுதல்.
வைதிகத்தின் தூநெறி - வைதிக சைவநெறி. "வேதநெறி தழைத்தோங்க மிகு சைவத் துறைவிளங்க" என்றபடி வேதத்திற் காட்டிய நெறிகள் பலவற்றுள்ளும் தூய்மை செய்வது சைவநெறியே யாதலின் தூநெறி என்றார்
தூநெறிய துன்னுநெறி ஆக்குதலால் என்க. முன்னிருந்த ஏனையவை துன்னாத - பொருந்தாத - நெறி என்பதாம்.
வாகீசர் கேட்டு மனமகிழ்ந்தார் - சைவநெறியின் ஆக்கப்பாட்டிலே உலகுயிர்கள் ஓங்கி வாழ்தல் கண்டு மகிழ்வது வாகீசப் பெருமானின் மனநிலை, "தேவர் திருவடிநீ நெனைப் பூசு"; "திருநாம மஞ்செழுத்துஞ் செப்பாராகில் தீவண்ணர் திறமொருகாற் பேசாராகில் அருநோய்கள் கெடவெண்ணீ றணியாராகில்"; "நமச்சிவாயஞ் சொல்ல வல்லோ நாவால்"; "விடிவதுமே வெண்ணீற்றை மெய்யிற்பூசி" (தேவா) என்பனவாதி அவரது எண்ணிறந்த திருவாக்குக்களால் இவ்வுண்மை இனிது விளங்கும். திலகவதியம்மையார் திருநீற்றை யஞ்செழுத்தோதிக் கொடுக்கப் பெற்றமையால் அத்துணைகொண்டே தாம் கரையேறியமை திருவுள்ளத்தில் எப்போதும் கொண்டு மகிழ்ந்தனர் அரசுகள். "சாம்பலைப் பூசித் தலைரயிற் கிடந்துநின் றாள்பரவி, யேம்பலிப் பார்கட் கிரங்கு கண்டாய்" என்று அடியார்கள் பொருட்டு வேண்டுதலும், "துஞ்சும் போதுநின் னாமத் திருவெழுத், தஞ்சுந் தோன்றவருளும்" என்று வேண்டுதலும் பிறவும் சிவசாதனப் பொலிவொழுக்கமாகிய சைவநெறி விளக்கத்தில் அரசுகள் கொண்ட ஆர்வத்தைக் காட்டுவன. இவ்வாறு மகிழ்தல் - விருப்பு வெறுப்புக்களாகும் ஆணவமலச் சார்பாகிய காரணத்தாலன்று. பல்லுயி ரனைத்தையும் ஒக்கப் பார்க்கும் செல்வக் கடவுட் டொண்டரா (திருவிடை - மு. கோ - 7) கிய அரசுகள், உயிர்கள்படும் துன்பங் கண்டுழி அதற்குப் பரிதல்மாத்திரையே இங்கு மேற்கொண்ட மகிழ்ச்சியாம் என்க. சிவஞான மாபாடியம் 12-சூத் - 2 அதி - பார்க்க. "கள்ளத் தலைவர் துயர்கருதித் தங்கருணை, வெள்ளத் தலைவர் மிக" (திருவருட் பயன்).