பிள்ளை யார்தந் திருவாக்கிற் பிறந்த லாலத் தாலமு,முன் புள்ள பாசம் விட்டகல, வொழியாப் பிறவி தனையொழித்துக் கொள்ளு நீர்மைக் காலங்கள் கழித்துச் சிவமே கூடினவால்; வள்ள லார்மற் றவரருளின் வாய்மை கூறின் வரம்பென்னாம்? | 983
| (இ-ள்) பிள்ளையார்தம்....அத்தாலமும் - பிள்ளையாரது மெய்த் திருவாக்கிலே சொல்லப்பட்டு வந்து பிறந்த காரணத்தாலே அந்தப் பனைகளும்; முன்புள்ள...அகல - பனையாய்ப் பிறப்பதற்குரித்தாய் முன்னே உள்ள வினை விட்டு நீங்க; ஒழியா...ஒழித்து - ஒழியாது தொடர்ந்து வருகின்ற பிறவிப் பிணி நீங்கப்பெற்று; கொள்ளும்...கழித்து - உடம்பு இருத்தற் கேதுவாகிய பிராரத்தவினை கொள்ளும் கால அளவு கழித்துப் பின்பு; சிவமே கூடின - சிவப் பேற்றை அடைந்தன; வள்ளலார்...என்னாம்? - வள்ளலாராகிய பிள்ளையாருடைய அருளினது மெய்த்தன்மையினை எடுத்துக் கூறுதல் வரம்புட்படுமோ? (படாது). (வி-ரை) திருவாக்கிற் பிறத்தலாவது திருவாக்கினால் அருளுடன் சொல்லப்படுதல்; ஆண்பனை குரும்பைக் குலையீன் என்ற அருளின் ஆணையே உபதேசமாய் வருதல். முன்புள்ள பாசம் விட்டகல - சஞ்சிதவினை நீங்கி; இஃது இனி வரும் பிறவிகளுக்கேதுவாய் நிற்பது. "பார்த்த பார்வையா லிரும்புண்ட நீரெனப் பருகும் தீர்த்தன்"(திருவிளை. புரா - வாதவூ - உப - பட - 47); சஞ்சித வினை எரி சேர்ந்த வித்துப்போலச் சாம்பராகிவிடவும் மூலமலம் வலிமையற்றொழியவும், இனி விளைய உள்ள பிறவிகள் இல்லையாயின என்பார் "ஒழியாப் பிறவி தனையொழித்து" என்றார். கொள்ளு நீர்மைக் காலங்கள் கழித்து - பிராரத்தவினை அனுபவித்தன்றிக் கழியாவாதலின் முகந்துகொண்ட வினை உள்ளளவும் உடம்பு நிற்கும் அவ்வெல்லை வரும் அளவு நீங்க என்பது; அவ்வாறு பிராரத்த வினை அனுபவித்துக் கழித்தற்கு ஆசாரியன் றிருவாக்குத் துணை செய்தது. ஆண்பனைக் குலை குரும்பையீன என்ற ஆணையினால் அவ்வுடல் கொண்ட வினை அனுபவிக்கப்பட்டுக் கழிய அருளியமை காண்க. சிவமே கூடின - சிவப்பேற்றை யடைந்தன. மேல்வரும் ஆகாமிய வினை ஏறாதபடி செய்தருளியதும் ஆணவம் வலியிழிந்ததும் அத்திருவாக்கின் அருள் பதிந்தமையாலாகியது என்பதும் காண்க. வள்ளலார் - தற்பயன் குறியாது வரம்பின்றி யருள் கொடுப்பவர். வள்ளலார் - இறைவர் என்றலுமாம். அவரருளின் வாய்மை - கன்ம பலத்தினாலே ஓரறிவுயிராய்ப் பிறந்த தாவரங்களாகிய அத்தனை பனைமரங்களுக்கும் அருள்தீக்கை செய்து கன்மம் புசிக்கச் செய்தும், ஆணவ மூலமலம் வலியறச் செய்தும், இறைவருக்குப் பழந் தருதலாகிய சிவபுண்ணியப்பேற்றைப் பெறச் செய்தும் காலாந்தரத்தில் இவ்வொரு பிறவியிலேயே சிவத்தைப் பெற அருளியது வாக்கினது அருளின் வாய்மையும் அவரது அருளின் வள்ளன்மையுமாம். உமாபதி சிவாசாரியார் முள்ளிச் செடிக்கும் பெற்றான் சாம்பானுக்கும் முத்தி கொடுத்தருளிய நிலைகள் ஈண்டுச் சிந்திக்கத் தக்கன. திருவாதவூரருக்கு இறைவர் உபதேசித்த வரலாறும் பொருளும் (திருவிளையாடற் புராணம் - திருவாதவூரர் புராணம்) ஈண்டுக் கருதத் தக்கன. வரம்பு என்னாம்? - அளவு என்னை? கூறும் வரம்பின்று என்றபடி. இவ்வரலாற்றினை மனங்கொண்டு ணர்ந்தால் பின்னர்த் திருமணத்தில் வந்தோர்க்கெல்லாம் கொள்ளைகொள்ள வீடுதவும் பிள்ளையாரது வள்ளற்றன்மையின் நிலை எளிதில் விளங்கும் என்க. பிறத்தாலாலே தாலமும் - என்பதும் பாடம்.
|
|
|