பாடல் எண் :2918
வந்தணைந்த மாதவத்தோர் வணங்கித் தாழ்ந்து,
"மறைவாழ்வே! சைவசிகா மணியே! தோன்றும்
இந்தமலை காளனோ டத்தி தம்மி
லிகலிவழி பாடுசெய விறைவர் மேவும்
அந்தமில்சீர்க் காளத்தி மலையா" மென்ன,
வவனிமேற் பணிந்தெழுந்தஞ் சலிமேற் கொண்டு,
சிந்தைகளி மகிழ்ச்சிவரத் திருவி ராகம்
"வானவர்க டானவ"ரென் றெடுத்துச் செல்வார்,
1020
(இ-ள்) வந்தணைந்த....தாழ்த்து - எதிர்கொண்டு வந்து அணைந்தவர்களாகிய திருத்தொண்டர்கள் பிள்ளையாரை வணங்கித் தாழ்ந்து நின்று; மறை வாழ்வே!..என்ன - வேதங்களின் வாழ்வாகியவரே! சைவத் தலைவர்களுட் சிறந்தவரே! எதிரே தோன்றுகின்ற இந்தத் திருமலைதான் முன்னை நாளில் காளன் என்னும் பாம்பும் யானையும் தம்முள் மாறுகொண்டு தம்மைப் பூசை செய்யும்படி இறைவனார் எழுந்தருளியுள்ள கெடுதலில்லாத சிறப்பினையுடைய திருக்காளத்தி மலையாகும் என்று சொல்ல; அவனிமேல்... மகிழ்ச்சி வர - நிலத்தின்மேலே வீழ்ந்து வணங்கி எழுந்து கைகளைச் சிரமேற் குவித்து மனத்துள் மிகுந்த மகிழ்ச்சி வருதலாலே; திருவிராகம்...செல்வார்-"வானவர்கள் தானவர்கள்" என்று தொடங்கும் திருப்பதிகத்தைத் திருவிராக அமைப்பினில் பாடியபடி மேற்செல்வாராகி;
(வி-ரை) வந்தணைந்த மாதவத்தோர் - வந்து - எதிர்கொள்ள வந்து; மாதவத்தோர்-திருத்தொண்டர்கள்.
மறைவாழ்வே!-சைவ சிகாமணியே! - வேதநெறி தழைத்தோங்கவும் சைவ நெறி விளங்கவும் அவதரித்து அவ்விருநிலைகளையும் முற்ற நிலையிட்டருளினாராதலின் இவ்வாறு போற்றி விடைகூறத் தொடங்கினர் - பெரியார்களிடம் விடை கூறுமுன் இவ்வாறு பெருமைபட விளித்துப் பின் கூறுதல் மரபு.
காளனோடு....வழிபாடு செய - காளன் - காளம் - பாம்பு. பாம்பும் யானையும் தம்முள் இகலிப் பூசை செய்த வரலாறு தலபுராணத்துட் காண்க; இகலுதல் - ஒன்றொடொன்று போரிட்டு மேற்செல்லுதல்; தலவிசேடம் (II - பக்கம் 1060) பார்க்க. காளனோ டத்தி தம்மில் இகலி வழிபட்ட செயலை உவந்தேற்று இறைவர் எழுந்தருளியிருக்கும் நிலை சிவகோசரியாரும் கண்ணப்ப நாயனாரும் இகலி வழிபட்ட சரிதக் குறிப்புத் தருவது காண்க. இனம் பற்றி சீ என்ற சிலந்தி வழிபட்ட சரிதமும் உடன் கொள்க.
அவனிமேற் ணெந்தெழுந்து அஞ்சலி மேற்கொண்டு சிந்தைகளி மகிழ்ச்சி வர - சிவன் றிருமலையினைக் கண்டவுடனே வீழ்ந்து வணங்குதல் பெரியோர் மரபு.
களி மகிழ்ச்சி - பெருமகிழ்ச்சி; ஒருபொருட் பன்மொழி மிகுதி குறித்தது. வர - வருதலால். திருவிராகத்திற் பதிகம் எடுத்ததற்குக் காரணங் கூறியபடி; வினையெச்சம் காரணப் பொருளில் வந்தது.
திருவிராகம் - முடுகிய சந்தத்துடன் வருவது திருவிராகம் என்ப. "நடையின் முடுகு மிராகம்" (2175); சந்தம் மகிழ்ச்சிக்குறி காட்டுதல் குறிப்பு. இது தாள அமைப்பு; பண்அமைதி மேல் வரும்பாட்டிற் கூறுவார்.
செல்வார் - பாடி - வந்து - போகி - வந்து - என மேல் வரும்பாட்டுடன் கூட்டி முடிக்க. செல்வார் - செல்வாராகி; முற்றெச்சம்.
வானவர்கள் தானவர்கள் - இது பதிகத் தொடக்கம்.
திருவிராகம் - எடுத்து - திருவிராகத் தாள அமைப்பில் தொடங்கனிார் என்க. எடுத்துச் செல்வார் - இப்பதிகத்தால் மலையினைத் துதித்துக் கொண்டபடியே பிள்ளையார் அதனை நோக்கி நடந்தருளிய நிலை குறித்தது.